புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம்: கொம்பாடி -தளவாய்புரம், ஓட்டப்பிடாரம் தாலுகா
மாவட்டம்: தூத்துக்குடி
மறைமாவட்டம்: தூத்துக்குடி
மறைவட்டம்: குறுக்குச்சாலை
நிலை: கிளைப்பங்கு
பங்கு: புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், கொம்பாடி, S.கைலாசபுரம் அஞ்சல், 628301
பங்குத்தந்தை: அருட்பணி. A. லாசர்
குடும்பங்கள்: 80+
அன்பியங்கள்: 4
ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி
வியாழன் திருப்பலி மாலை 06:30 மணி
திருவிழா: மே மாதம் கடைசி ஞாயிறு
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. மரியதாஸ் லிப்டன்
. அருட்பணி. வில்சன், OFM Cap
. அருட்சகோதரி. விமலா
4. அருட்சகோதரி. ஆரோக்கிய அலங்கார மேரி
வழித்தடம்: ஓட்டப்பிடாரம் மணியாச்சி வழித்தடத்தில் கொ.தளவாய்புரம் அமைந்துள்ளது.
Location map:
K.Thalavaipuram
https://maps.app.goo.gl/dsjqxi11drdRp987A
கொ.தளவாய்புரம் வரலாறு:
இயற்கையின் வளமான பெருமலைகளோ, பேராறுகளோ இல்லாத பரம்பு நிலமாய், புன்செய் நிலங்களாய் காட்சி அளித்த இந்த வட்டாரத்தில், ஜீவநதியாம் இயேசு பெருமானின் அருளொளியை மேலைநாட்டு இறையடியார்கள் பரப்பித் தொண்டு செய்திருந்த காலம். கிறிஸ்தவம் ஆங்காங்கே வேர்கொண்டு மக்கள் வாழ்வில் இருளகன்று ஒளிவீசத் தொடங்கிய காலம். உரிமையின்றி ஒடுக்கப்பட்டது மட்டுமல்ல, தெய்வீக ஒளியை பெற முடியாமல் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களெல்லாம் கிறிஸ்துவாகிய தெய்வீகத்தை தேடிவந்த காலம். தங்களது ஏழ்மை நிலையிலும், வாழ்வளித்த விண்ணவராம் இயேசுவிற்கு தாங்கள் வாழும் பகுதியிலேயே ஆலயம் கட்டி வழிபட்ட காலம். இக்காலகட்டத்தில் தான் கொ.தளவாய்புரத்திலும் (கொம்பாடிக்கு அருகில் இருப்பதால் கொ.தளவாய்புரம் என அழைக்கப்படுகிறது) கிறிஸ்தவம் வேரூன்றி வளரத் தொடங்கியது.
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போது சப்பரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் ஒரு குடிசை ஆலயம் கட்டப்பட்டது. குடிசை ஆலயமாக இருந்தாலும் மக்கள் இறையடியார்களின் வழிகாட்டலில் இறைவனைப் பற்றிப் பிடித்து வாழ்ந்து வந்தனர்.
மின்சாரம் எட்டிப் பார்க்காத காலங்களில் தளவாய்புரமும் இருளில் மூழ்கிக் கிடந்தது. அக்காலத்தில் தீவட்டிக் கொள்ளைக்காரர்கள் அவ்வப்போது கொள்ளையடிப்பார்கள். இவ்வாறு ஒருமுறை தீவட்டிக் கொள்ளையர்கள் தளவாய்புரத்தை சூறையாடிய போது, தான் சேமித்து வைத்திருந்த சிறு செல்வத்துடன் தப்பி வந்த ஒரு தாய், இறைவன் தங்களது குடும்பத்தை பாதுகாத்து வாழ்வழித்ததற்கு நன்றியாக பழைய குடிசை ஆலயத்தை மாற்றி புதிய ஆலயம் கட்ட, தங்களது வாழ்விற்கு என எடுத்து வந்த பணத்தை கொடுத்தார். இந்த நிதியுதவியுடன் தளவாய்புரம் இறைமக்களும் ஆர்வத்துடன் பணிசெய்ய, சுண்ணாம்பு, கடுக்காய், கருப்புக்கட்டி கலந்த கலவையில் 1870 ஆம் ஆண்டு புதிய ஆலயம் கட்டப்பட்டது.
அருட்பணி. இருதயராஜ் (1970-73) பணிக்காலத்தில் ஆலயப் பீடம் புதுப்பிக்கப்பட்டது.
அருட்பணி. ரெய்னால்ட் மிசியர் (1987-1992) பணிக்காலத்தில் இவ்வாலயம் புனரமைக்கப்பட்டு, மேதகு ஆயர் அமலநாதர் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
நன்கொடையாளர் மற்றும் மண்ணின் மைந்தர் அருட்பணி. மரியதாஸ் லிப்டன் ஆகியோரின் உதவியால் 1988 ஆம் ஆண்டு ஆலய மணிக்கூண்டு கட்டப்பட்டது.
மண்ணின் மைந்தர் அருட்பணி. மரியதாஸ் லிப்டன் அவர்களின் நிதியுதவியால் சமூக நலக்கூடம் அமைக்கப்பட்டதுடன், பலர் கல்வி கற்கவும், உயர்கல்வி பெறவும் பேருதவியாக இருந்தார்.
இன்று இவ்வூரைச் சேர்ந்த பலரும் வெளியூர் சென்று உயர் கல்விகள் பெற்று பல்துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
வேளாங்கண்ணி மாதா கெபி ஒன்று உள்ளது.
ஆலய வரலாறு மற்றும் புகைப்படங்கள்:
மண்ணின் மைந்தர் அருட்பணி. மரியதாஸ் லிப்டன் அவர்கள்
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. லாசர் அவர்கள்