395 ஆரோக்கிய அன்னை ஆலயம், ஆரோக்கியபுரம்

   

ஆரோக்கிய அன்னை ஆலயம்.

இடம் : ஆரோக்கியபுரம், கன்னியாகுமரி, லீபுரம் அஞ்சல், 629702.

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : கன்னியாகுமரி 

நிலை : பங்குத்தளம் 

பங்குத்தந்தை : அருட்பணி. ரால்ஃப் கிரான்ட் மதன்

குடும்பங்கள் : 890

அன்பியங்கள் : 26

ஞாயிற்றுக்கிழமை முதல் திருப்பலி காலை 05.30 மணிக்கு, 

ரண்டாம் திருப்பலி காலை 07.00 மணிக்கு.

தினமும் திருப்பலி : காலை 06.15 மணிக்கு

புதன்கிழமை மாலை 06.15 மணிக்கு சிறப்பு திருப்பலி.

வெள்ளிக்கிழமை திருப்பலி : மாலை 06.00 மணிக்கு 

முதல் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு மாதா குருசடியில் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆசீர்.

திருவிழா: செப்டம்பர் மாதம் 8ம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள்.

அன்னையின் குருசடி சிறப்பு திருவிழா மே மாதத்தின் கடைசி மூன்று நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

Rev. Fathers :

1. Fr. A. சிறில் 

2. Fr. T. பெல்லார்மின் 

3. Fr. அந்தோனிபிச்சை

4. Fr. J. செல்வராஜ் 

5. Fr. A. தாஸ்

6. Fr. J. மெல்டஸ் 

7. Fr. C. சூசை ஆன்றனி 

Rev. Sisters :

1. Sr. A. மிக்கேல் நாயகி 

2. Sr. V. தார்சிலாள்

3. Sr. A. ஜெலஸ்டின் மேரி 

4. Sr. ஜோதி 

5. Sr. V. வியாகம்மாள் 

6. Sr. ஜோஸ்பின் மேரி

7. Sr. மேரி ஜாக்குலின் ரூபி

8. Sr. மேரி கிளிட்டா

9. Sr. S. கனிஸ்டா 

10. Sr. M. மேரி ஜிம்ஸி 

11. Sr. S. மேரி ஜாஸ்மின் 

12. Sr. J. ஷிபானி 

13. Sr. A. விக்டோரியா 

14. Sr. மெர்லின் 

15. Sr. R. பிரேமலதா.

வழித்தடம் : நாகர்கோவிலில் இருந்து பேருந்துகள் தடம் எண் : 1A, 5D, PHS 4, 2K,

கன்னியாகுமரியில் இருந்து 1A, 2k, 1E, 21, 22.

Location map:Arockiapuram Church

https://maps.app.goo.gl/DSHJrHCCwc97MSNA8

ஆலய வரலாறு:

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு வடக்கே அஞ்சுகிராமம் செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில், கிழக்கே வங்காள விரிகுடா, தென்மேற்கே லீபுரம், மேற்கே ஆமணக்கன்விளை, வடக்கே வரலாற்று சிறப்பு மிக்க வட்டக்கோட்டை ஆகியவற்றை எல்கையாக கொண்ட அழகிய கடற்கரை ஊர் தான் ஆரோக்கியபுரம். 

தற்போதைய ஆரோக்கியபுரமானது கரடு முரடான, மணல் தேரி (திட்டு), உடை முட்கள் நிறைந்தும் வாரியூர் உப்பளத்துடன் தோற்றமளித்தது. ஆகவே இப்பகுதியை வாரியூர், உடைவிளை, வெள்ளை போன்ற பெயர்களில் அழைத்து வந்தனர். இந்தப் பகுதி நத்தம் புறம்போக்கு ஆதலால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.

மக்கள் வருகை :

கன்னியாகுமரியின் மேற்கே உள்ள அரபிக்கடலின் கரைப்பகுதி ஆழமாக இருப்பதால், சாதாரணமாகவே அலை ஓங்கியடிக்கும்...! குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் மிகவும் வன்மையாகவே (பலத்த) அலையடிக்கும். ஆகவே இந்த குறிப்பிட்ட மாதங்களில் மீனவர்கள் தொழிலுக்கு (மீன்பிடிக்க) செல்வது மிக மிக அரிது. ஒருசிலர் சென்றாலும் அலை ஓங்கி அடிப்பதால் கட்டுமரங்கள் உடைந்து, காயப்பட்டு வருவார்கள். எனவே இந்த நாட்களில் அரபிக்கடலோர மக்களுக்கு வறுமையான நாட்களாகவே அமையும். 

ஆனால் கிழக்கு கடற்கரையான வங்காளவிரிகுடா ஆழமில்லாத தட்டையான கடற்பகுதி ஆகும். அலைகள் அடிப்பதுமில்லை. ஆகவே தொழிலுக்கு (மீன்பிடிக்க) செல்வது சுலபமாகவே இருக்கும்.

1968 ஆம் ஆண்டு கீழ மணக்குடி என்ற கிராமத்தில் இருந்து ஒரு சிலர் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் வெகு சிரமத்துடன் அலையைக் கடந்து, குமரியின் தென்கிழக்கு எல்லையான லீபுரம் ஊராட்சியின், லீபுரம் பகுதிக்கு எதிரே உள்ள கடற்பகுதியில் ஏராளமான இரால் மீன்களை பிடித்து மீண்டும் கீழ மணக்குடி வருவார்கள். 

இவ்வாறு கீழ மணக்குடியிலிருந்து சென்று வருவது சிரமமாக இருந்ததால், அலையில்லாமல் அமைதியாக இருந்த வங்காளவிரிகுடா கரைப் பகுதியில் கரையேறலாமே என லீபுரம் கரையில் கரை சேர்ந்தனர். இந்த செய்தி கீழமணக்குடி மக்களிடம் மட்டுமல்லாமல் மேல மணக்குடி மக்களிடமும் பரவ... 

கட்டுமரம் மற்றும் தொழிற்கருவிகளை கொண்டு லீபுரம் வந்து ஏராளமான இரால் மீன்களை பிடித்தனர். இந்த நிகழ்வு வறுமையில் வாடிய மக்களுக்கு மாற்றத்தை விளைவித்து நம்பிக்கை ஒளியாக ஒளிர்ந்தது. தொடர்ந்து கீழமணக்குடியிலிருந்து 5 கட்டுமரங்களை கொண்டு வந்து தங்கி தொழில் செய்தனர். இவர்களது வீட்டுப் பெண்கள் இங்கேயே, லீபுரம் ஊர் ஆதரவில் தோப்புகளில் குடிசை அமைத்து தங்கி உணவு சமைத்து கொடுத்தனர். 

1969 மே மாதத்தில் கீழ மணக்குடி, மேல மணக்குடி ஊர்களிலிருந்து 22 கட்டுமரங்களை கொண்டு வந்து தொழில் செய்யத் தொடங்கினர். ஏராளமான இரால் மற்றும் கணவாய் மீன்களைப் பிடித்தனர். ஆனால் இவர்களுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. மேலும் மீன்களை ஏலம் விடும் போது சில சமூக விரோதிகளும், தங்களுக்கு பிடித்த மீன்களை கை போட்டு அள்ளிச் சென்றனர். 

இத்துடன் பக்கத்து ஊர் மீனவர்களின் தொழில் நெருக்கடியும் ஏற்பட இப்பகுதி மக்கள் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்தனர். 

பல்வேறு சோதனைகள் தடைகள் ஏற்பட்ட போதும் அவற்றை தாண்டி..

தொழில் செய்து கொண்டிருந்த வேளையில், மீண்டும் தொல்லைகள் ஏற்பட்ட போது, அருகாமையில் உள்ள திருநெல்வேலி மாவட்ட மக்கள் உதவி செய்து வந்ததால், கீழ மேல மணக்குடி மக்கள் லீபுரத்தில் தங்கி தொழில் செய்ய முடிந்தது என்பதை என்றென்றும் நினைவு கூறத் தக்கது. 

ஜான் படிப்பகம் :

1972 ம் ஆண்டு கீழ, மேல மணக்குடி மக்கள் 50 க்கும் மேற்பட்ட கட்டுமரங்களில் வந்து லீபுரத்தில் தொழில் செய்தனர். ஒவ்வொரு கட்டுமரத்திற்கும் தலா ஐந்து இரால்கள் வீதம் சேகரித்து அவற்றை விற்று, கிடைத்த நிதியில் லீபுரம் கடற்கரையில் ஜாண் படிப்பகம் கட்டப்பட்டு இந்த ஊரின் வெளிச்சம் பரவ, அறிவுக்கண் திறக்க வழிகோலியது. தற்போது இங்கு தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது. 

குடியிருப்புத் தளமாகிய உப்பளம் :

மீனவர்கள் கடலுக்கு சென்று சிரமப்பட்டு பிடித்து வரும் மீன்களில் ஒரு பகுதியை சிலர் தங்கள் விருப்பத்திற்கேற்ப எடுத்துக் கொண்டனர். ஆரம்பத்தில் மவுனமாக இருந்த மீனவர்கள் பின்னர் இந்த அடாவடி செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த போது, அதிகார மிரட்கள் தொடர்ந்தன...! விடிவதற்குள் ஊரை காலி செய்து விட்டு ஓட வேண்டும் என்ற மிரட்டல்களுக்கு பயந்து ஒடுங்கியபோது, சில நல்லவர்கள் உதவி கிடைத்தது. 

நல்லுள்ளம் கொண்ட நல்லவர்கள், இம்மக்கள் தொந்தரவு இல்லாமல் வாழ வேண்டும் என்று எண்ணம் கொண்டு, தூத்துக்குடி உப்பளம் நிறுவனத்துக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் குடிசைகள் அமைத்து வாழ்வித்தனர்.

முதல் திருப்பலி :

1978 ஆம் ஆண்டு மேடு பள்ளமாக காணப்பட்ட இடம் சீர்படுத்தப்பட்டு, மேலும் சில குடிசைகள் கட்டப்பட்டு மக்கள் குடியேறினர். தற்போதைய படிப்பகத்திற்கு அருகில் ஒரு ஓலை கொட்டகை கட்டப்பட்டு காலை மாலை வேளைகளில் மக்கள் ஜெபித்து வந்தனர். 

இக்கால கட்டத்தில் மக்கள் திருப்பலியில் பங்கேற்க கொட்டாரம் புனித யூதா ததேயு ஆலயத்திற்கும், பின்னர் கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தலத்திற்கும் சென்று கொண்டிருந்தனர். இவ்விரு இடங்களுக்கும் போதிய போக்குவரத்து வசதியில்லாத நிலையில் மக்கள் நடந்தே திருப்பலிக்கு சென்று வந்து சிரமப்படுவதை உணர்ந்த, அப்போதைய கீழமணக்குடி பங்குத்தந்தை அருட்பணி. மாசிலாமணி அடிகளின் முயற்சியில் 08-09-1978 அன்று  ஓலை ஜெபக்கூடத்தில் முதல் முதலாக திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மக்களின் மனங்கள் ஆனந்தத்தால் நிறைந்தது. 

முதன் முதலில் மாதா சபையும் பின்னர் மரியாயின் சேனை மற்றும் மறைக்கல்வி வகுப்புகளும் துவக்கப் பட்டன. இவ்வாறு சிறப்பு பெறத்துவங்கிய இவ்வூர் ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாளன்று திருப்பலி கொண்டாடப்பட்டு மகிமையடைந்ததால் ஆரோக்கியபுரம் என பெயர் பெற்றது. 

தொடர்ந்து அருட்பணி. மாசிலாமணி அவர்களின் ஆலோசனையின்படி ஓலை கூரை அமைத்து ஆரோக்கிய அன்னை பள்ளிக்கூடம் துவக்கப் பட்டது. 

24-11-1978 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் மக்களின் உடமைகள், தொழிற்கருவிகள் எரிந்து சாம்பலாயின. இதுவரை ஒற்றுமையில்லாது இருந்த அயல் ஊர்கள், தீ விபத்திற்கு பிறகு இம் மக்களுக்கு துணையாக இருந்தனர். 1980 ம் ஆண்டு தமிழக அரசு 50 தொகுப்பு வீடுகள் கட்டித்தர முன்வந்தது. 

இவ்வாறு பல்வேறு சோதனைகளையும் தாண்டி வாழ்ந்த ஆரோக்கியபுரம் ஆலயமானது, 1980 ம் ஆண்டு கன்னியாகுமரி திருத்தலத்தின் கிளைப்பங்காக ஆனது. 

1981 ம் ஆண்டு  மீண்டும் இரண்டாம் முறையாக தீ விபத்து ஏற்பட்டு 50 க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாயின. அப்போது குமரி வந்திருந்த தமிழக முதல்வர் திரு. எம்ஜிஆர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டு, அதன் பயனாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆரோக்கியபுரத்தை ஒரு மாதிரி கிராமமாக மாற்ற ஆணை பிறப்பித்தார். 

1982 ம் ஆண்டு குமரி மாவட்டத்தில் எழுந்த மாபெரும் கலவரம்  ஆரோக்கியபுரம் மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியது. ஆனால் இவ்வூரையும் மக்களையும் புனித ஆரோக்கிய அன்னை எவ்வித துன்பமும் நேராவண்ணம் கண்ணின் மணிபோல காத்தருளினார். இச் செயலால் அன்னையின் மீது மக்களுக்கு இருந்த பற்றுதலும் விசுவாசமும்  மென்மேலும் உறுதியடைந்தது. 

1980 ஆண்டிலிருந்து ஆரோக்கியபுரம் மக்களின் தொழில் வருமானத்திலிருந்து கன்னியாகுமரி நிர்வாக சபை 'மகிமை' பிரித்து வந்தது என்று சொல்லப்படுகிறது.  (மகிமை என்பது மீன்பிடி தொழில் செய்பவர்கள் தங்களது ஒவ்வொரு நாளைய வருமானத்திலும் விருப்பப்பட்டு ஆலயத்திற்கு கொடுக்கும் நிதி) இந்த நிலையில் ஆயர் மேதகு மரியனூஸ் ஆரோக்கியசாமி அவர்கள் தலையிட்டு 1983 ம் ஆண்டே ஆரோக்கியபுரத்திற்கு தனி மகிமையை பிரித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் மேலும் 75 குடியிருப்பு வீடுகள் தமிழக அரசால் கட்டி கொடுக்கப் பட்டது.

1984 ல் மீண்டும் தமிழக அரசால் முதலில் 50 ம் தொடர்ந்து மீண்டும் 50 தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட்டது. 1988 ம் ஆண்டு முதல் 1989 வரை அருட்பணி. கார்மல் அவர்கள் ஆரோக்கியபுரத்தில் தங்கியிருந்து இறைப்பணியாற்றி,  தனிப்பங்காகவற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார். 

23-08-1990 அன்று ஆரோக்கியபுரம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது. அருட்பணி. நார்பர்ட் அலெக்ஸாண்டர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள். 

1993 ம் ஆண்டு அருட்பணி. ஆல்பின் ராபி அவர்கள் பங்குத்தந்தையானார்கள். இவரது பணிக்காலத்தில் தற்போதைய புதிய ஆலயம் கட்ட தீர்மானித்து, மக்களது வருமானத்தில் 5% பிடித்தம் செய்து, சேமித்து புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது. 

1997 ல் அருட்பணி. ஜான் கென்னடி பணிக்காலத்தில் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 08-09-1999 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. 

அருட்பணி. ஜூலியஸ் அடிகளார் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம் கட்டப்பட்டது. 

அருட்பணி. கஸ்பார் அவர்கள் பணிக்காலத்தில் ஆயரின் உதவியுடன்  பங்குத்தந்தை இல்லம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. மேலும் தூண்டில் வளைவு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் திரு. தளவாய் சுந்தரம் அவர்களின் பரிந்துரையால் கட்டப்பட்டதால் 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. ஆனாலும் தொழிற்கருவிகள் நாசமடைந்தன. சுனாமி பேரலையில் கல்லறைத் தோட்டம் சேதமடைந்ததால் 2005 ம் ஆண்டு புதிய கல்லறைத் தோட்டம் அமைக்கப் பட்டது. 

அருட்பணி. ஜான் ராபின்சன் பணிக்காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தரப் பட்டது. மேலும் இவரது பணிக்காலத்தில் 26-01-2005 அன்று பள்ளிக்கூடம் நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

அருட்பணி. அஜன் சார்லஸ் பணிக்காலத்தில்,  அவரது முயற்சியில் பழைய ஆலயம் இருந்த இடத்தில் அன்னைக்கு ஒரு சிற்றாலயம் கட்டப்பட்டு, 08-09-2011 ல் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 02-11-2011 ல் தனிநபர் ஒருவரின் நன்கொடையால் கொடிமரம் வைக்கப்பட்டு அருட்பணி. சார்லஸ் பெரோமியு அவர்கள் தலைமையில் அர்ச்சிக்கப் பட்டது. 

மேலும் அருட்பணி. அஜன் சார்லஸ் பணிக்காலத்தில் பள்ளிக்கு புதிதாக வகுப்பறைகள் கட்டப்பட்டது. தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. மரிய தாமஸ் ஆஸ்டின் பணிக்காலத்தில் இது திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. அமல்ராஜ் பணிக்காலத்தில் புதிய பீடம் அமைக்கப் பட்டதுடன், *அன்னைக்கு மணிமுடி* சூட்டப்பட்டது. மாதா அரங்கம் அமைக்கப் பட்டது. ஆலய வளாகம் புதுப்பித்தல், சிலுவைப்பாதை நிலைகளை அமைத்தல் என்றும் பல பணிகளைச் செய்தார்.

SMMI அருட்சகோதரிகள் இல்லம் 26-09-2015 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது. அருட்சகோதரிகள் பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

அருட்பணி. டன்ஸ்டன் அவர்கள் பங்குத்தந்தையாக பணியாற்றிய போது பங்கு மக்களை ஒருங்கிணைத்து, ஆன்மீகப் பாதையில் சிறப்பாக வழிநடத்தினார். 

2019 முதல் அருட்பணி. ரால்ஃப் கிரான்ட் மதன் அவர்கள் பணி போறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தி ஆரோக்கியபுரத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார். மேலும் ஆரோக்கிய புரம் உருவானதன் பொன்விழாவை (1972-2022) முன்னிட்டு,  போட்டித் தேர்வுகள் பயிற்சி மையம் கட்டப்பட்டு மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் 09.09.2022 அன்று அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

தூய ஆரோக்கிய அன்னையின் பரிந்துரையால் எண்ணற்ற புதுமைகள் நாள்தோறும் நடந்து வருகிறது. குறிப்பாக குழந்தை பாக்கியம், திருமண வரன்கள், வேலைவாய்ப்புகள், தீராத நோய்கள், தொழில் முன்னேற்றம், கடன்சுமை என எண்ணற்ற கவலைகளுடன் ஆரோக்கியபுரம் தூய ஆரோக்கிய அன்னையிடம் வந்து ஜெபிக்கின்றவர்கள், வேண்டிய வரத்தைப் பெறுகின்றனர். வரத்தைப் பெற்று மகிழ்ந்தவர்கள் இவ்வாலயம் வந்து தங்களது நன்றியை செலுத்தி செல்வது நாள்தோறும் நடந்து வரும் நிகழ்வாகும்...

வாருங்கள்.. அளவில்லா ஆசீர்வாதங்களால் உங்களை காத்திடுவார் நம் ஆரோக்கிய அன்னை...

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள்:

1. பங்குப் பேரவை

2. நிதிக்குழு

3. தணிக்கைக் குழு

4. அன்பிய ஒருங்கிணையம்

5. பக்த சபைகள் ஒருங்கிணையம்

6. வழிபாட்டு குழு

7. மரியாயின் சேனை

8. புனித வின்சென்ட் தே பவுல் சபை

9. தொழிலாளர் இயக்கம்

10. பெண்கள் பணிக்குழு

11. CPD

12. கிறிஸ்தவம் வாழ்வு சமூகம்

13. திருஇருதய சபை

14. பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை

15. பாலர் சபை

16. சிறார் இயக்கம்

17. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

18. இளையோர் இயக்கம்

19. மறைக்கல்வி

20. கல்விக்குழு

21. குடும்ப நலப் பணிக்குழு

22. சூசையப்பர் சபை

23. நற்கருணை சபை

24. பீடச் சிறார்

25. பாடகற்குழு

26. கோல்பிங் சங்கம்

பங்கில் இறைப் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Fr. நார்பர்ட் அலெக்ஸாண்டர் (1990-1993)

2. Fr. ஆல்பின் ராபி ( 1993-1996)

3. Fr. P. வின்சென்ட் (1996-1997)

4. Fr. ஜான் கென்னடி (1997-2000)

5. Fr. ஜூலியஸ் (2000-2002)

6. Fr. கஸ்பார் (2002-2005)

7. Fr. ஜான் ராபின்சன் (2005-2007)

8. Fr. அஜன் சார்லஸ் (2007-2012)

9. Fr. மரிய தாமஸ் ஆஸ்டின் (2012-2014)

10. Fr. அமல்ராஜ். ம (2014-2017)

11. Fr. டன்ஸ்டன் (2017-2019)

12. Fr. ரால்ஃப் கிரான்ட் மதன் (2019 ஜூன் முதல் தற்போது வரை...)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி ரால்ஃப் கிரான்ட் மதன் அவர்கள். Mob: 94861 69984