493 புனித சூசையப்பர் ஆலயம், கோவில்மேடு

     
புனித சூசையப்பர் ஆலயம்

இடம் : கோவில்மேடு, ஏற்காடு

மாவட்டம் : சேலம்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : சேலம்

நிலை : கிளைப்பங்கு
பங்கு : திரு இருதய ஆண்டவர் ஆலயம், ஏற்காடு

பங்குத்தந்தை : அருட்பணி. D. A. பிரான்சிஸ்

குடும்பங்கள் : 240
அன்பியங்கள் : 6

மாதத்தின் முதல் புதன் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

திருவிழா : மே 1-ம் தேதி.

வழித்தடம் : ஏற்காட்டிலிருந்து 2கி.மீ தொலைவில் கோவில்மேடு புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது.


வரலாறு

ஏற்காடு மலைத்தொடரில் கிறிஸ்தவ இறைமக்களால் முதன்முதலாக கி.பி 1820 ல் கட்டப்பட்ட ஆலயம், என்ற சிறப்புக்குரியது கோவில்மேடு புனித சூசையப்பர் ஆலயம்.

கி.பி 1826 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆலயமணி, ஆலயத்தில் பொருத்தப் பட்டது.

பின்னர் கோவில்மேட்டில் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட ஆலயத்தை கி.பி.1845ம் ஆண்டில் அருட்பணி. கூய்யோன் அவர்கள் விலைக்கு வாங்கினார். அதனைச் சுற்றி இருந்த இடம் மறைப்போதகத்திற்காக அரசாங்கத்தால் அளிக்கப்பட்டது.

கோவில்மேட்டில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, இறை விசுவாசம் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே, கோவில்மேட்டில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகள் கட்டப்பட்டு, 01.12.1880 அன்று அர்ச்சிக்கப்பட்டது.

கி.பி.1899ம் ஆண்டு கோவில்மேடு இறைமக்களின் உதவியுடன் இவ்வாலயம் விரிவாக்கம் செய்யப்பட்டது. கி.பி.1901ம் ஆண்டில் புனித சூசையப்பர் எல். ஆர். சி. பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. கி.பி.1908- கி.பி.1911ம் ஆண்டு இடைப்பட்ட காலகட்டத்தில் இவ்வூரில் தொற்றுநோய் பரவாதிருக்க புனித ஆரோக்கியநாதருக்கு தேர் எடுக்கப்பட்டது.

மேலும், ஏற்காடு பங்கின் பங்குத்தந்தை அருட்பணி. பால் அந்தோணி அவர்களின் பணிக்காலத்தில் கோவில்மேடு இறை மக்களின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்டு 16.12.1967 அன்று சேலம் மறைமாவட்டத்தின் இரண்டாவது ஆயர் மேதகு. வெண்மணி செல்வநாதர் ஆண்டகை அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

ஏற்காடு பங்கின் முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. ஜான் அல்போன்ஸ் அவர்களின் பணிக்காலத்தில், இங்கு புனித சூசையப்பர் கெபியானது கோவில்மேடு இறைமக்களின் உதவியுடன் கட்டப்பட்டது.

தொடர்ந்து ஏற்காடு திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் கிளைப் பங்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறது கோவில்மேடு புனித சூசையப்பர் ஆலய இறைசமூகம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : பங்குத்தந்தை அருட்பணி. D. A. பிரான்சிஸ் மற்றும் ஆலய கோவில்பிள்ளை.