527 புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மேல ஆசாரிபள்ளம்


புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம்
இடம் : மேல ஆசாரிபள்ளம்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறைமாவட்டம் : கோட்டார்
மறைவட்டம் : கோட்டார்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. W. ஜார்ஜ் வின்சென்ட்

குடும்பங்கள் : 450
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணிக்கு

வாரநாட்களில் திருப்பலி காலை 06.00 மணிக்கு.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 06.30 மணிக்கு நற்கருணை ஆராதனை.

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஆரம்பித்து பத்து நாட்கள்.

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. அருட்பணி. G. மரிய ஆரோக்கியம், (late), Kottar
2. அருட்பணி. D. அல்போன்ஸ், Kottar
3. அருட்பணி. மார்சலின் தே போரஸ், Kottar
4. அருட்பணி. எட்வர்ட் ராயன், OFM Cap
5. அருட்பணி. A. சஜின், MMI
6. Brother. வர்க்கீஸ் சவரி

1. அருட்சகோதரி. மேரி அனிஷியா, OCD
2. அருட்சகோதரி. செல்வ பாக்கியம், திருச்சிலுவை சபை
3. அருட்சகோதரி. கிறிசாந்துஸ் மேரி, SAT
4. அருட்சகோதரி. பிலோமின் மேரி, SAT
5. அருட்சகோதரி. அருள் நேவிஸ், SAT
6. அருட்சகோதரி. சகாய மலர், SAT
7. அருட்சகோதரி. ஆன்டோனெட், ஆராதனை மடம்
8. அருட்சகோதரி. மேரி டெல்பின், சார்லஸ் கன்னியர் சபை

வழித்தடம் : நாகர்கோவில் - ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி.

நாகர்கோவிலிலிருந்து பேருந்து தடம்எண் : 35.

Location map :
https://maps.google.com/?cid=15675412895661087028

வரலாறு :

முக்கடலும், முக்கனியும், முத்தமிழும் கொஞ்சி விளையாடும் குமரி மாவட்டத்தில் மேல ஆசாரிபள்ளம் ஊரில் அமைந்துள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய வரலாற்றைக் காண்போம்.

மர வேலை செய்பவர்களையும், கல்லில் பலவகை வேலைகள் செய்பவர்களையும், தங்க நகை செய்பவர்களையும் ஆசாரி என்று அழைக்கப்பட்டு வந்தனர். முன்னர் பல கலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆசாரிமார்கள் வாழ்ந்து வந்ததாலும், பக்கத்தில் உள்ள எல்லா ஊர்களை விடவும் பள்ளத்தில் இருந்ததால் (ஆசாரி + பள்ளம்) ஆசாரிபள்ளம் எனப் பெயர் வந்தது. ஊர் மிகவும் பெரிதாக இருந்ததால் மேற்குப் பகுதி மேல ஆசாரிபள்ளம் எனவும், கிழக்கு பகுதியை கீழ ஆசாரிபள்ளம் எனவும் அழைக்கப்படுகிறது.

கி.பி 16 ஆம் நூற்றாண்டில் புனித சவேரியார் குமரி முதல் தூத்துக்குடி வரை பெரும்பாலான கடற்கரை ஊர்களில் மக்களை கிறிஸ்துவில் ஒன்றிணைத்தார்.

ஆனால் உட்பகுதியில் கிறிஸ்தவர்கள் பெரிதாக இல்லை. இருந்தாலும் புனித தோமையார் வழிவந்த ஒருசில கத்தோலிக்க மக்கள் வாழ்ந்து வந்தனர்.

கி.பி 1602 ல் இயேசு சபையை சேர்ந்த அருட்பணி. அந்திரேயாஸ் புச்சேரி உட்பகுதியில் வாழ்ந்த சில நாடார் இன மக்களை கிறிஸ்தவ மறையில் இணைத்தார். இருந்தாலும் 1602 வரை இவர்களுக்கு ஆலயம் எழுப்பப் படவில்லை.

அப்போது இயேசு சபையினர் திருவிதாங்கூர் மன்னர் குலசேகரப் பெருமாளுக்கு ஆங்கிலேயருடன் தொடர்பு கொள்ள ஒரு பாலமாகவும், நிதியுதவியும் அளித்து மன்னரின் நன்மதிப்பை பெற்றனர். இதற்கு கைமாறாக மன்னர் குலசேகரப் பெருமாள், மொத்தம் 20 ஊர்களில் ஆலயம் கட்ட 1602 ஆம் ஆண்டில் அனுமதியளித்தார்.

களிமண், ஓலை, மரப்பலகை முதலிய பொருட்களைக் கொண்டே ஆலயம் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையுடன், சில இடங்களில் ஆலயம் கட்டுவதற்கு தேவையான நிலத்தை இலவசமாக மன்னர் குலசேகரப் பெருமாள் கொடுத்தார். அதன்படி முதன் முதலில் 1602 ஆம் ஆண்டு கோட்டார் ஆலயம் கட்டப்பட்டது.

1604 ஆம் ஆண்டில் மேலும் ஏழு ஆலயங்கள் கட்ட மன்னர் குலசேகரப் பெருமாள் அனுமதியளிக்க, முதன்முதலில் ஆசாரிபள்ளம் கோவில்விளையில் புனித அந்தோணியார் ஆலயம் ஓலை, மரப்பலகை கொண்டு கட்டப்பட்டது.

கி.பி 1605 ஆம் ஆண்டு சூரியகிரகணம் தோன்றவே, மன்னர் குலசேகரப் பெருமாள் அவர்கள் இதன் பின்விளைவுகளைக் குறித்து, சாஸ்திரக் கலையில் வல்லுநர்களாக இருந்த பிராமணர்களிடம் கேட்க, அவர்களோ உள்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு ஆலயங்கள் கட்ட அனுமதியளித்ததே இதற்கு காரணம் என்றும், இதனால் மேலும் பல அழிவுகள் வரப்போகின்றன எனக் கூற, மன்னர் அனைத்து ஆலயங்களையும் அழித்திட ஆணையிட, கோட்டார் ஆலயத்தை தவிர்த்து அனைத்து ஆலயங்களும் அழிக்கப்பட்டன. காரணம் கோட்டார் ஆலயத்தில் பல இன மக்களும் வழிபாட்டில் பங்கெடுத்து வந்ததாலும், பல புதுமைகள் நடந்து வந்ததாலும் மன்னர் இவ்வாலயத்தை இடிக்க அஞ்சினார்.

1704 ஆம் ஆண்டு வரை ஆசாரிபள்ளம் கிறிஸ்தவர்கள் சிலுவை ஒன்றையும், புனித அந்தோணியார் படத்தையும் ஓலைக் குடிசையில் வைத்து இறைவனை வழிபட்டு வந்தனர். இவ்வாண்டிலேயே இயேசு சபையினர் திருவிதாங்கூர் மன்னரின் நன்மதிப்பை பெற்று விடவே, 1704 ஆம் ஆண்டு ஆலயம் கட்ட அனுமதி பெற்று, கோவில்விளையில் புனித அந்தோணியார் ஆலயம் ஒன்றை கட்டினார்கள்(பணிகள் முழுமை பெறவில்லை).

அப்போது வேம்பனூர் கிராமத்தில் பிராமணர்கள் மன்னரிடம் சென்று, ஆசாரிபள்ளத்தில் ஆலயம் அமைத்து மறைப்பரப்பு பணி செய்கிற இயேசு சபை குருக்களிடம், ஏராளமான ஆயுதங்கள் இருக்கின்றன எனவும், ஆங்கிலேயர்கள் உதவியுடன் இவர்களால் மன்னரின் ஆட்சிக்கு ஆபத்து வரலாம் என்று முறையிட்டார்கள். கோபம் கொண்ட மன்னர் கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத புனித அந்தோணியார் ஆலயத்தையும், மறைப்பரப்பு தளத்தையும் மற்றும் தியான இல்லத்தையும் 1705 ஆம் ஆண்டு தீக்கிரையாக்கினர்.

இயேசு சபையினர் மறைப்பரப்பு தளத்தை குளச்சல் மற்றும் , இராஜாக்கமங்கலம் ஊர்களுக்கு மாற்றினார்கள்.

கோவில்விளையில் எரிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம், குருசடி (பஞ்சவங்காடு) ஊருக்கு மாற்றப் பட்டது.

1800 ஆம் ஆண்டில் ஆசாரிபள்ளத்திற்கு வருகை புரிந்த ஐரோப்பியர் ஒருவர் முயற்சியால் ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயம் கட்டப்படுவதற்கு முன்பே ஆசாரிபள்ளம் பகுதி கிறிஸ்தவர்கள் தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்திற்கு அடிக்கடி சென்று வந்தனர். ஆகவே புதியதாக கட்டப்பட்ட ஆலயத்திற்கு புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் எனப் பெயரிட்டனர்.

1892 ஆம் ஆண்டு ஆசாரிபள்ளம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. ரைமண்ட் அடிகளார் பொறுப்பேற்றார்கள்.

அருட்பணி. அந்தோணி சாமி அவர்கள் பணிக்காலத்தில், அவராலேயே பெரிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப் பட்டது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1935 ஆம் ஆண்டு பங்குத்தந்தை அருட்பணி. பிரான்சிஸ் எரோணிமூஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1930 ஆம் ஆண்டில் கோட்டார் மறைமாவட்டம் புதிதாக உதயமானபோது பாம்பன்விளை, மேலப்பெருவிளை, பள்ளவிளை, கோட்டவிளை ஆகிய ஊர்கள் ஆசாரிபள்ளத்தின் கிளைப் பங்குகளாக இருந்தன. தற்போது இவையனைத்தும் தனிப் பங்குகளாக ஆகியுள்ளன.

தற்போதைய புதிய ஆலயமானது அருட்பணி. A. மரியதாஸ் பணிக்காலத்தில் 28.04.2002 அன்று மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்ட்டின் டி போரஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. ஜாண் பெர்க்மான்ஸ் அவர்கள் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்பு மற்றும் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 24.09.2004 அன்று கோட்டார் மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

புனித அன்னம்மாள் சபை:
மறைந்த முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணிசாமி அவர்கள் பணிக்காலத்தில் தொடங்கப்பட்டது.

பஜனை:
அந்தக் காலத்தில் காலரா, அம்மை போன்ற நோய்கள் அதிகமாக காணப்பட்டது. மின்சார வசதிகள் இல்லாததாலும், பல விதமான மூடப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் இருந்ததாலும், மக்கள் இருளில் வெளியே வரவும் பயந்து வாழ்ந்தனர். அப்போது 1922 ல் பங்குத்தந்தை அருட்பணி. அந்தோணிசாமி அடிகளார் அவர்கள் புனித செபஸ்தியார் சுரூபத்தை மலர்களால் அலங்கரித்து, பஜனைப் பாடல்கள் பாடும் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார். கார்த்திகை மாதத்தில் துவங்கி ஜனவரி மாதம் முதல் தேதி பஜனை பட்டாபிஷேகமாக இன்று வரை சிறப்பாக பஜனை கொண்டாடப்பட்டு வருகிறது. கி.பி 1962 ஆம் ஆண்டில் முதன் முதலாக ஊருக்கு மின்சாரம் வந்தது.

புனித குழந்தை தெரசம்மாள் குருசடி :
1941 ஆம் ஆண்டில் ராமன்புதூரைச் சேர்ந்தவரின் நன்கொடையில் கட்டப்பட்டது. பின்னர் புதிதாக, அருட்பணி. ஜான் பெர்க்மான்ஸ் பணிக்காலத்தில் 30.04.2006 அன்று மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தெ போரஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 29.07.2006 அன்று கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி வ. மரியதாஸ் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

லூர்து மாதா கெபி :
புனித அன்னம்மாள் சபையை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு கோழிக்குஞ்சு ஒன்று கொடுக்கப்பட்டு, அதனை வளர்த்து விற்றதன் வழியாக கிடைத்த இலாபத்தொகையில், தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு 26.07.1943 அர்ச்சிக்கப் பட்டது.

முதல் நர்சரி பள்ளி :
கி.பி 1964 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. பின்னர் சத்துணவு திட்டத்திற்கு பிறகு இது நிறுத்தப் பட்டது. நூற்றாண்டு விழா நினைவு பாலர்பள்ளி, அருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் அவர்களின் பணிக்காலத்தில், மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தெ போரஸ் அவர்களின் நன்கொடையில் கட்டப்பட்டு, 01.11.1992 அன்று அவராலேயே திறந்து வைக்கப்பட்டது.

முதல் பேருந்து :
அருட்பணி. சிறில் அடிகளாரின் கடுமையான முயற்சியில் பேருந்து முதன்முதலாக ஆசாரிபள்ளம் ஊருக்கு விடப் பட்டது. மேலும் இதே ஆண்டிலே தேர் நிறுத்தி வைப்பதற்கான தேர்ப்பந்தல் கட்டி முடிக்கப்பட்டது.

பள்ளிக்கூடம் :
1973 ல் அருட்தந்தை. தனிஸ்லாஸ் அவர்களின் முயற்சியாலும், பங்குத்தந்தை அருட்பணி. கிறிஸ்துதாஸ் மற்றும் முடுதம் திரு. K. சூசைரெத்தினம் ஆகியோரின் முயற்சியிலும் பள்ளிக்கூடம் உருவானது.

அருட்பணி. M. ஞானப்பிரகாசம் பணிக்காலத்தில் 01.06.1978 ல் நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. மேலும் பங்குத்தந்தையின் முயற்சியால் 1977 ல் ஆலயத்தை சுற்றிலும் மதிற்சுவர் கட்டப்பட்டது.

புனித யூதா ததேயு நடுநிலைப் பள்ளி :
மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தே போரஸ் அவர்களின் நன்கொடையில் பள்ளிக்கூட கட்டிடம் கட்டப்பட்டது.

அருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் அவர்களின் முயற்சியால் ஊரில் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு, முடுதம் முறையை மாற்றி பங்குப்பேரவை அமைத்தார்.

புனித மிக்கேல் அதிதூதர் கலையரங்கம் 09.08.1992 அன்று கட்டப்பட்டது. பல்வேறு சபைகள் இயக்கங்கள் துவக்கப்பட்டு, புத்துயிரூட்டப்பட்டது. பெண்கள் ஆலய பொது நிகழ்வுகளில் பங்கேற்க இருந்த தடைகளை மாற்றி பங்கேற்கச் செய்தார்.

புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்கம் :

வைகறை இளைஞர் இயக்கமானது பங்கில் தோற்றுவிக்கப்பட்டு, 1993 -1996 காலகட்டத்தில் புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்கமாக பெயர் மாற்றப் பட்டது.

வைகறை இளைஞர் இயக்க படிப்பகத்திற்கு 09.08.1992 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நிறைவு பெற்று 1993 திறந்து வைக்கப்பட்டது.

இளையோர்கள் சமூக சிந்தனையுடன் செயல்பட்டு, ஆலயத்தின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து, பங்கின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

சார்லஸ் ஹோம் கன்னியர் இல்லம், பாம்பன்விளை:

இந்த சபை அருட்சகோதரிகள் மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளை பராமரித்து வருவதுடன், ஆலய வழிபாட்டு நிகழ்வுகளிலும், மறைக்கல்வியிலும் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

நூற்றாண்டு சின்னம் :

பங்கின் நூற்றாண்டு (1892-1992) நினைவு சின்னம் அமைக்கப்பட்டு, 29.09.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புனித மிக்கேல் அதிதூதர் கலையரங்கம் :

மண்ணின் மைந்தர் அருட்பணி. மார்சலின் தே போரஸ் அவர்களின் நன்கொடையில் இக்கலையரங்கம் கட்டப்பட்டு 09.08.1992 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பங்கில் உள்ள பங்கேற்பு அமைப்புகள் :
1. பங்குப்பேரவை
2. புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்கம்
3. அன்பிய ஒருங்கிணையம்
4. மரியாயின் சேனை
5. மறைக்கல்வி மன்றம்
6. கிறிஸ்தவ தொழிளார் சங்கம்
7. கத்தோலிக்க சேவா சங்கம்
8. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம்
9. இயேசுவின் திருஇருதய சபை
10. புனித பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை
11. பாடகற்குழு

பங்கில் செயல்பட்டு வருகிற கல்வி நிறுவனங்கள் :
1. ஆலய நூற்றாண்டு நினைவு பாலர் பள்ளி
2. புனித யூதா நடுநிலைப்பள்ளி
3. புனித மிக்கேல் அதிதூதர் இளைஞர் இயக்க படிப்பகம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. றைமண்ட் அடிகளார் (1892 -1915)
2. அருட்பணி. இக்னேஷியஸ் (1915)
3. அருட்பணி. பயஸ் (1915-1916)
4. அருட்பணி. மார்சலின் (1916-1917)
5. அருட்பணி. மார்ஷல் (1917-1920)
6. அருட்பணி. T. P. குன்சாலூஸ் (1920-1922)
7. அருட்பணி. பயஸ் DDC (1922)
8. அருட்பணி. ஹூன்டௌசி (1922)
9. அருட்பணி. அந்தோணிசாமி (1922-1931)
10. அருட்பணி. பிரான்சிஸ் எரோணிமூஸ் (1931-1936)
11. அருட்பணி. அம்புறோஸ் (1936 மூன்று மாதங்கள்)
12. அருட்பணி. லூக்காஸ் (1936-1939)
13. அருட்பணி. லூயிஸ் (1939-1941)
14. அருட்பணி. குருசாமி (1941-1947)
15. அருட்பணி. ஏசுதாசன் (1947-1951)
16. அருட்பணி. ரபேல் (1951-1954)
17. அருட்பணி. செபஸ்தியான் (1954)
18. அருட்பணி. வர்கீஸ் (1954-1957)
19. அருட்பணி. உபால்டுராஜ் (1957-1965)
20. அருட்பணி. சிறில் பெர்னாண்டோ (1965-1972)
21. அருட்பணி. கிறிஸ்துதாஸ் (1972-1976)
22. அருட்பணி. M. ஞானபிரகாசம் (1976-1980)
23. அருட்பணி. A. சொர்ணராஜ் (1980-1984)
24. அருட்பணி. M. பீட்டர் (1984-1986)
25. அருட்பணி. M. ஏசுதாசன் (1986-1987)
26. அருட்பணி. அம்புறோஸ் (1987-1988)
27. அருட்பணி. ஜோசப் பிதலிஸ் (1988-1989)
28. அருட்பணி. A. பீட்டர் (1989-1990)
29. அருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் (1990- 1994)
30. அருட்பணி. வின்சென்ட் B. வில்சன் (1994-1996)
31. அருட்பணி. S. சாலமோன் & அருட்பணி. ஆன்றோ செல்வராஜ் (1996-1997)
32. அருட்பணி. A. ஜோசப்ராஜ் (1997-1999)
33. அருட்பணி. A. மரியதாஸ் (1999-2003)
34. அருட்பணி. ஜான் பெர்க்மான்ஸ் (2003-2008)
35. அருட்பணி. M. ஜான் அகஸ்டஸ் (2008-2009)
36. அருட்பணி. C. அமிர்தராஜ் (2009-2014)
37. அருட்பணி. X. சேவியர் ராஜா (2014-2018)
38. அருட்பணி. W. ஜார்ஜ் வின்சென்ட் (2018 முதல் தற்போது வரை..)

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. W. ஜார்ஜ் வின்சென்ட், பங்குப்பேரவை நிர்வாகி, மண்ணின் அருட்சகோதரி. அருள் நேவிஸ் மற்றும் ஞா. அந்தோணி ராஜ் (கோட்டார் மறைமாவட்ட இளைஞர் இயக்க தலைவர்) ஆகியோர்.