311 புனித அந்தோணியார் ஆலயம், வர்த்தான்விளை


புனித அந்தோணியார் ஆலயம்.

இடம் : வர்த்தான்விளை

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குத்தளம்
கிளைகள் : இல்லை

பங்குத்தந்தை : அருட்தந்தை இன்னசென்ட்

குடும்பங்கள் : 320
அன்பியங்கள் : 10

ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி

திங்கள், புதன் : காலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய் : மாலை 05.00 மணிக்கு புனிதரின் நவநாள் திருப்பலி.

வெள்ளி : மாலை 05.30 மணிக்கு திருப்பலி

சனி : காலை 06.30 மணிக்கு சிறார் திருப்பலி

திருவிழா : ஜனவரி மாதம் இறுதி ஞாயிறு நிறைவு பெறும் வகையில் 10 - நாட்கள் நடைபெறும்.

மண்ணின் மைந்தர் :
அருட்தந்தை ஜான் பீட்டர்.

வழித்தடம் : திங்கள்நகர் (திங்கள்சந்தை) - பெத்தேல்புரம்.

முக்கிய நிகழ்வுகள்:

1964-ம் ஆண்டு கிளைப்பங்காக அறிவிப்பு.

01.11.2014-ம் நாள் தனிப்பங்காக அறிவிப்பு.

01.11.2014-ம் நாள் அருட்பணியாளர் இல்லம் அர்ச்சிப்பு.

01.11.2015-ம் நாள் புதிய ஆலய அடிக்கல் நிறுவுதல்.

07.02.2016-ம் நாள் புதிய ஆலய கட்டுமான பணிகள் துவங்கியது.

14.05.2017-ம் நாள் புதிய ஆலய அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.

வரலாறு :

கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலயம் வர்த்தான்விளையானது ஏழை எளிய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிய வரலாற்று சிறப்புமிக்கதாகும்.

1925-30 - ம் ஆண்டுகளில் மக்களை கொள்ளை நோய் அள்ளி சென்ற போது மக்களின் பயத்தை போக்க கிறிஸ்து பிறப்பு காலத்தில் பஜனை பாடப்பட்டது. அதன்மூலம் கிடைத்த வருவாயில் கஞ்சி தர்மம் செய்யப்பட்டது. ஜெபம் நடத்துவதற்கு வசதியாக ஆர்வமுள்ள சிலர் தங்கள் பொது சொத்தில் குடிசை அமைத்தனர். பின் இக்குடிசையில் தூய அந்தோணியாரின் திருவுருவம் வைக்கப்பட்டதால் அக்குடிசை தூய அந்தோணியார் பெயரால் அழைக்கப்பட்டது.

🌿பின்னர் இக்குடிசையானது மக்கள் அமர்ந்து ஜெபம் செய்ய வசதியாக குருசடியாக கட்டப்பட்டது.

குருசடி கட்டப்பட்டபின் திரிகால மணி அடிப்பதும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மக்கள் இணைந்து வந்து ஜெபம் செய்வதும் துவங்கியது. தீராத நோய்களாலும் பலவகை துன்பங்களாலும் அவதிப்பட்ட பலர் இங்கு வந்து தங்கி தூய அந்தோணியாரின் வழியாக நலம் பெற்று சென்றனர்.

மாங்குழி பங்கு அருட் பணியாளர் அருட்பணி சூசைமிக்கேல் அவர்களின் முயற்சியால், குருசடியாக இருந்த இடத்தை ஆலயம் கட்டுவதற்காக இடத்தின் உரிமையாளர்கள் எழுதிக் கொடுத்தனர்.

அருட்பணி சூசைமிக்கேல் அவர்களாலேயே குருசடியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பின்னர் ஞாயிற்றுகிழமைகள் தோறும் அருட் சகோதரிகள் வந்து மறைக்கல்வி வகுப்புகள் நடத்தினர்.

1950-ம் ஆண்டு மேதகு ஆயர் ஆஞ்சிசுவாமி அவர்களால் ஆலயத்திற்கான அடிக்கல் போடப்பட்டது.

1964-ம் ஆண்டு கோணங்காடு தூய சவேரியார் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது வர்த்தான்விளை கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலயம் கோணங்காட்டின் ஒரு கிளைப்பங்காக உயர்த்தப்பட்டது.

கோணங்காடு பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி வெனான்சியுஸ் (1964-68) அவர்களின் சீரிய முயற்சியாலும் வெளிநாட்டு உதவிகளாலும் பங்கு மக்களின் குறிப்பாக ஏழை தொழிலாளர்களின் உயரிய உழைப்பாலும் ஆலய கட்டுமானப் பணி துவங்கப்பட்டது.

கூரை வேயப்பட்டு நிறைவுபெறாமல் இருந்த ஆலயத்திற்கு அருட்பணி பீட்டர் (1974- 1977) அவர்களால் மேற்கூரை போடப்பட்டது. அருட்பணி அருளப்பன் (1982-1985) அவர்களால் பீடம் மற்றும் கோபுரம் கட்டப்பட்டது. 1983-ல் ஆலய கட்டுமானப் பணிகள் நிறைவுற்று மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால் 29-01-1983 அன்று அர்ச்சிப்பு நடைபெற்றது.

தூய அந்தோணியார் பெயரில் 21-01-1977-ல் தனிநபர் ஒருவரால் குருசடி ஒன்று பங்கிற்கென எழுதி கொடுக்கப்பட்டது.

1999-ம் ஆண்டில் பங்கில் அன்பியங்கள் துவங்கப்பட்டது.

2000-ம் ஆண்டு முதல் மறைமாவட்ட விதிகளின்படி பங்கு அருட்பணிப் பேரவை செயல்பட துவங்கியது.

அருட்பணி ஜெயபிரகாஷ் முயற்சியால் கலையரங்கம் ஒன்று 21-01-2008 அன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.

2000-ம் ஆண்டு முதல் சமூகநலக் கூடத்தின் முன்பு சத்துணவு கூடம் செயல்பட்டு வருகின்றது.

அருட்பணி ததேயு லியோன் ஜேம்ஸ் அவர்களின் பணிக்காலத்தில் சமூகநல கூடத்திற்கான அடிக்கல் நிறுவப்பட்டு 30-01-2010-ல் அருட்பணி செபாஸ்டியன் அவர்களின் பணிகாலத்தில், அருட்பணி ஜார்ஜ் பொன்னையா அவர்களால் சமூகநலக் கூடத்தின் கீழ்தளம் திறக்கப்பட்டது.

01-01-2012 அன்று அருட்பணி செபாஸ்டியன் அவர்களால் அருட்பணியாளர் இல்லத்திற்கான அடிக்கல் நிறுவப்பட்டு அருட்பணி ஆன்றணி கோமஸ் அவர்கள் பணிகாலத்தில் 01-11-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அருட்பணியாளர் இல்லம் அர்ச்சிக்கப்பட்டது.

01-11-2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் வர்த்தான்விளை கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலயம் தனிப்பங்காக உயர்த்தப்பட்டு, அருட்பணி வ.ஞானமுத்து அவர்கள் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார்கள்.

புதிய ஆலயத்திற்கான அடிக்கல் 01-11-2015-ம் நாள் மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி மரிய அல்போன்ஸ் அவர்களால் நிறுவப்பட்டது.

புதிய ஆலய கட்டுமானப் பணிகள் 07-02-2016 - ம் நாள் துவங்கி நடைபெற்று வந்தன. 14-05-2017-ம் நாள் மேதகு ஆயர் ஜெறோம்தாஸ் அவர்களால் புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது.

தற்போது பங்கு அருட்பணி பேரவை அன்பியங்கள், பங்கேற்பு அமைப்புகள், மறைக்கல்வி, என வர்த்தான்விளை கோடி அற்புதர் தூய அந்தோணியார் ஆலயம் மூவொரு இறைவனின் வழிநடத்துதாலும், பங்கு மக்களின் ஈடுபாட்டாலும் சிறப்பாக இறையாட்சிப் பாதையில் நடைபயின்று வருகிறது.

தனிப்பங்காக ஆனபின்னர் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :

1. அருட்பணி ஞானமுத்து
2. அருட்பணி சிரில் மெஸ்மின்
3. அருட்பணி இன்னசென்ட் (தற்போது....)