374 தூய காவல் தூதர்கள் ஆலயம், மேல்புறம்

    

தூய காவல் தூதர்கள் ஆலயம்.

இடம் : மேல்புறம், பாகோடு (PO) 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம் : திரித்துவபுரம்

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் : 

1. தூய சவேரியார் ஆலயம், வட்டவிளை 

2. தூய லூர்து அன்னை ஆலயம், பரக்கோணம் 

பங்குத்தந்தை : அருட்பணி. M. ஆல்வின் விஜய் 

குடும்பங்கள் : 325

அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு 

புதன் மாலை 05.45 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி 

சனி காலை 06.15 மணிக்கு சிறார் திருப்பலி. 

திருவிழா : அக்டோபர் மாதம் 02 -ம் தேதி. 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. சவரிநாதன், late  

2. அருட்பணி.‌ மேரி ஜாண்

3. அருட்பணி.‌ மரிய செல்வதாஸ்

4. அருட்பணி.‌ எட்வின் ராஜ்

1. அருட்சகோதரி. உஷா கப்ரினா

2. அருட்சகோதரி. மரிய செலின்

3. அருட்சகோதரி. பியூலா பிளாரன்ஸ் சிசிலியா. 

ஆலய இணையதளம் : http://www.holyguardianangels.com

வழித்தடம் : மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் இருந்து தடம் எண் 86C, 86B, 86G, 86, 85D இறங்குமிடம் மேல்புறம்.

Location  Map : https://maps.app.goo.gl/YcRvE6mvELLmv7H4A

அறிமுகம்:

"இறையருளின் இல்லமாய்... 

இறையுணர்வின் அடையாளமாய்...

உறவுகளின் சங்கமமாய்... 

உயர்ந்து நிற்பதே ஆலயம்.. " 

என்னும் வார்த்தைக்கேற்ப,100 ஆண்டுகளுக்கு முன்னர் மேல்புறம் மக்களின் வாழ்வின் ஒரு அங்கமாய் தோன்றிய தூய காவல் தூதர்கள் ஆலயத்தையும் அதன் சிறப்புகளையும் காண்போம்..!

வரலாறு:

ஆலய அமைவிடம்: 

இந்திய திருநாட்டின் தென்கோடியில்

முக்கடலும், முத்தமிடும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்,

தமிழும், மலையாளமும் கூடிக்குலாவும், எழில் கொஞ்சும் விளவங்கோடு தாலுகாவில்; இடைக்கோடு, பாகோடு,

மருதங்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய பேரூர்கள் எல்லையாகி அரணாய் நிற்க, வளம் கொளிக்கும் வயல்வெளிகள், வற்றாத நீர்நிலைகள், கண்ணைக் கவரும் பசும் சோலைகளான கடமக்கோடு ஊரை பகுதியாய் கொண்டு, வெங்ஙனாங்கோடு, பந்நிமூலை, அண்டுகோடு, செம்மங்காலை என பலப்பகுதிகளை உள்ளடக்கியதே மேல்புறம் பங்கு ஆலய எல்கை ஆகும்.

மேல்புறம் ஆலயத் தோற்றம்:

கொல்லம் ஆயராக இருந்த மேதகு அலோசியஸ் மரிய பென்சிகர் அவர்கள், படந்தாலுமூடு பூவன்விளையில் ஆலயம் ஒன்று அமைக்க வழிவகைச் செய்தார். அவ்வாலயம் தமதிருத்துவம் என்ற பெயரில் கட்டப்பட்டதால், பூவன்விளை, "திருத்துவபுரம்" எனப் பெயர் மாற்றம் பெற்றது. வேங்கோட்டின் கிளைப் பங்காக இருந்த திருத்துவபுரம் 1916-ல் களியக்கவிளையின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. 

1920-ல், மேல்புறம், வாவறை, பாக்கியபுரம், களியக்காவிளை, மஞ்சாலுமூடு ஆகிய 5 ஊர்களை கிளைப்பங்குகளாகக் கொண்டு திருத்துவபுரம் புதிய பங்காக உருவெடுத்தது. அப்போது அருள்தந்தை இன்னோசென்ட் அவர்கள் பங்கு குருவாக நியமிக்கப்பட்டார். திருத்துவபுரத்தில் பங்குப்பணி செய்து வந்த அருட்பணி. இன்னோசென்ட் அவர்கள், மேல்புறம் பகுதிக்கு வருகை தந்து,  மேல்புறம் மக்களின் இறைத்தாகத்தையும், இவர்களின் ஆன்மீகத் தேவையையும் அறிந்து கொண்ட, அயராது உழைத்து, மக்களை ஒன்றிணைத்து, திரு. அணஞ்சான் அவர்கள் வழங்கிய 3 ஏக்கர் நிலத்தில் மக்களின் உழைப்புடன் அழகான கற்கோவிலைக் கட்டி 02.10.1923-ல் அர்ச்சிப்பும் செய்து, இப்பகுதி கிறிஸ்தவ மக்கள் இணைந்து வந்து வழிபட வழிவகுத்தார். மறைமாவட்டத்திலேயே தூயகாவல் தூதர்களை பாதுகாவலராகக் கொண்ட ஒரே ஆலயம், மேல்புறம் ஆலயம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. குழித்துறை -அருமனை சாலையிலிருந்து ஆலயத்திற்கு இட்டுச் செல்லும் பாதைக்காக 22 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. ஆலயத்தின் தென்புறத்தில் செயல்பட்டு வந்த சந்தைக்கு மாற்றாக, சாலைக்கு மேற்கில் தற்போது இயங்கும் சந்தைக்கு நிலம் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் சாலை ஓரத்தில் குருசடி ஒன்றும் அமைத்துக் கொடுத்தார் அருட்பணி. இன்னோசென்ட் அவர்கள். 

மேல்புறம் தனிப்பங்கு உருவாக்கம் :-

1936 ல் பாக்கியபுரம் புனித எஸ்தாக்கியார் ஆலயமானது, திருத்துவபுரம் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப் பங்காக உருவானது. மேல்புறம், மஞ்சாலுமூடு, அருமனை, அம்பலக்கடை ஆகிய 4 ஊர்களும் பாக்கியபுரத்தின் கிளைப்பங்காக ஆயின. 

1967 ஆம் ஆண்டு ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்களால் மேல்புறம், பாக்கியபுரத்திலிருந்து பிரிக்கப்பட்டு, மஞ்சாலுமூடு (லூர்துகிரி), பிலாவிளை ஆகியவற்றை கிளைப்பங்காகக் கொண்டு, தனிப்பங்காக உருவாக்கப் பட்டது. 

1975ல் மேல்புறம் பங்கிலிருந்து பிரிந்து, மஞ்சாலுமூடு தனிப்பங்காக்கப்பட்ட போது, பிலாவிளை ஆலயமானது மஞ்சாலுமூட்டின் கிளைப்பங்காக மாற்றப்பட்டது. இதே 1975 ஆம் ஆண்டு மேதகு ஆயர் ஆரோக்கிய சாமி அவர்களால், திருத்துவபுரம் பங்கின் கிளைப்பங்காக இருந்த வட்டவிளையும், பரக்கோணமும் மேல்புறம் பங்கின் கிளைப்பங்குகளாக மாற்றப்பட்டன. 

பங்கு வளர்ச்சியும் அசிசி சகோதரர்களும்:

மேல்பாலை, பாகோடு பகுதிகளில் பணிபுரிந்து வந்த அசிசி சகோதரர்கள், ஏறக்குறைய 1944 ல் மேல்புறத்தில் தங்கி பல வளர்ச்சிப் பணிகளை செய்தனர்.‌ கடமக்கோடு பகுதியில் சகோதரர் லாசர் அவர்களின் பணி என்றென்றும் நினைவு கூரும் வகையில் இருந்தது. 

தேன்கூடு இயக்கம், கத்தோலிக்க சேவா சங்கம், மாதா சபை, சிறுசேமிப்பு இயக்கம், பாலர் பள்ளி, நூல்நூற்புத் தொழில், ஏழை எளியவர்களுக்கு கல்வி உதவிகள், நோயாளிகளுக்கு உதவிகள் என அசிசி சகோதரர்களின் வழங்கிய தன்னலங்கருதாத பிறரன்புப் பணிகளால், மேல்புறம் பங்கின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றினர். 

பங்கின் வளர்ச்சியில் பங்குப் பணியாளர்கள்:

கிளைப்பங்காக இருந்த போது அருட்பணியாளர்கள் இன்னோசென்ட், தொபியாஸ், அந்தோணி முத்து, வென்செஸ்லாஸ், சூசையா ஆகியோர் முக்கியப் பங்காற்றிச் சென்றனர். 1956 ஆம் ஆண்டு மரியாயின் சேனை பாலர் பிரசீடியம், முதியோர் பிரசீடியம் ஆரம்பிக்கப்பட்டது. 

அருட்பணி. H. ஜெயச்சந்திரா பணிக்காலத்தில் சவரிநாதன் நினைவகம் கட்டப்பட்டது. கலையரங்கம், புதிய குருசடி ஆகியவை கட்டப்பட்டது. ஆலய பீடம் மாற்றியமைக்கப்பட்டதோடு, தாய் சேய் நலத்திட்டத்தின் உதவியோடு பாலர் பள்ளி தொடங்கப்பட்டது. 

அருட்பணி. P. K. செல்லையன் பணிக்காலத்தில் பங்குப் பேரவை தொடங்கப்பட்டது. ஆலயத்தைச் சுற்றி மதிற்சுவர் கட்டப்பட்டது. கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. புனித வெள்ளியன்று மாங்குடி மலைக்குச் சென்று, மலையில் சிலுவை நாட்டப்பட்டது.  

அருட்பணி. M. X. ராஜமணி பணிக்காலத்தில் பல்வேறு சபைகள் இயக்கங்கள் தொடங்கப்பட்டது. ஆலயத்திற்கு சொந்தமான 5சென்ட் நிலமானது சத்துணவுக் கூடம் அமைக்க, மேல்புறம் ஊராட்சிக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. இவரது பணிக்காலத்தில் அருட்பணி. ஜெறி அவர்கள் (நீயே நிரந்தரம்) ஓராண்டு காலம் (1983-84) பணியாற்றிச் சென்றது நினைவு கூரத்தக்கது.

அருட்பணி. G. அல்போன்ஸ் பணிக்காலத்தில் பங்குப் பணியாளர் இல்லம் புதிதாக கட்டப்பட்டது. மறைக்கல்வி மாணாக்கர்களுக்கு பயன்படும் வகையில் நூலகம் ஒன்று அமைக்கப் பட்டது. 

அருட்பணி. ஜோக்கிம் பணிக்காலத்தில் 1998 ஆம் ஆண்டு ஆலயம் சீரமைக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டு, ஆலய பவளவிழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.  

புதிய ஆலயம்:

பழைய ஆலயத்தில் இடநெருக்கடி ஏற்பட்டதால் புதிய ஆலயத் தேவை ஏற்பட்டது.‌ ஆகவே அருட்பணி. மரிய இராஜேந்திரன் பணிக்காலத்தில் மக்களின் ஒத்துழைப்புடன் புதிய ஆலயத்திற்கு 02.07.2000 அன்று பேரருட்பணி. தேவசகாயம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.‌ பங்குத்தந்தையின் முயற்சி, பங்கு மக்களின் அயராத உழைப்பால் ஆலயம் கட்டப்பட்டு, மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களின் ஆசியுடன், பேரருள்பணி ஜாண் குழந்தை அவர்களால் 02.10.2002 அன்று அர்ச்சிக்கப்பட்டது. சமய நல்லிணக்கத்துக்கு அடையாளமாக இவ்வாலயம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.‌

அருட்பணி. ஜெனிபர் எடிசன் பணிக்காலத்தில் மழலையர், தொடக்கப்பள்ளிகளுக்கான அரசு அங்கீகாரம் பெறப்பட்டது. 

அருட்பணி. பிரைட் சிம்சராஜ் பணிக்காலத்தில் பள்ளிக்கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.‌ கல்கொடிமரம் நிறுவப்பட்டது. மாதா குருசடி புதுப்பிக்கப்பட்டது.

அருட்பணி.‌ ஆல்வின் விஜய் அவர்களின் பணிக்காலத்தில் ஆலய பீடம் அழகுற புனரமைப்பு செய்யப்பட்டது.‌ தூய ஆரோக்கிய அன்னை குருசடி சீரமைக்கப்பட்டது. சமூகநலக் கூடம் புனரமைப்பு, ஆலய நுழைவாயில், விளையாட்டு மைதானம், கல்லறைத் தோட்டத்திற்கு நிலம், காவல் தூதர்கள் நவநாள் தொடக்கம், இ-சேவை மையம், உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டன.

ஆலய நூற்றாண்டு விழா (1923-2023):

மேல்புறம் பங்கின் நூற்றாண்டு விழாவானது பங்குத்தந்தை அருட்பணி. ஆல்வின் விஜய் அவர்களின் வழிகாட்டலில் 2023 ஆம் ஆண்டு திருவிழாவின் போது மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

நூற்றாண்டு விழா நினைவாக பங்குதந்தை அலுவலகம் கட்டப்பட்டு 28.09.2023 அன்று, பாளை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

29.09.2023 அன்று தேவசகாயம் கெபி அர்ச்சிக்கப்பட்டது.

30.09.2023 அன்று பள்ளிக்கூட அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. 

02.10.2023 அன்று கோட்டார் மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் நூற்றாண்டு நினைவு தூண் அர்ச்சித்து, நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

1. சிறுவழி இயக்கம்

2. பாலர் சபை 

3. இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

4. இளையோர் இயக்கம்

5. புனித வின்சென்ட் தே பவுல் சபை

6. கைகள் இயக்கம்

7. அன்பிய ஒருங்கிணையம்

8. சிறார் அன்பிய ஒருங்கிணையம்

9. காக்கும் கரங்கள்

10. மீனவர் சங்கம்

11. திருவழிபாட்டுக்குழு

12. பாடகர்குழு

13. பீடச்சிறார்கள் 

14. அடித்தள முழு வளர்ச்சி சங்கம்

15. மறைக்கல்வி

16. குருசடி பராமரிப்புக்குழு

17. கல்விக்குழு

18. கலைக்குழு

19. வளர்ச்சிக்குழு 

20. தணிக்கைக்குழு

21. பங்கு அருட்பணிப் பேரவை

கன்னியர் இல்லம்:

Presentation Convent

பங்கில் உள்ள குருசடிகள், கெபி:

1. வேளாங்கண்ணி மாதா குருசடி

2. தூய பாத்திமா அன்னை குருசடி

3. புனித தேவசகாயம் கெபி

4. வியாகுலமாதா கெபி (கல்லறைத் தோட்டத்தில்)

5. புனித அந்தோனியார் குருசடி

பங்கின் பள்ளிக்கூடம்:

Holy Angel's Higher Secondary School.

மேல்புறம் பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. A. மரிய தாஸ் (1967-1968)

2. அருட்பணி. J. தேவதாசன் (1968-1970)

3. அருட்பணி. V. வெனான்சியுஸ் (1970-1973)

4. அருட்பணி. H. ஜெயசந்திரா (1973-1978)

5. அருட்பணி. P. K. செல்லையன் (1978-1980)

6. அருட்பணி. M. X. ராஜமணி (1980-1984)

7. அருட்பணி.‌ R. ஆன்றனி (1984-1986)

8. அருட்பணியாளர்கள்  ஹென்றி, வின்சென்ட், மரிய அல்போன்ஸ், அலோசியஸ் (1986-1988)

9. அருட்பணி. மரிய அற்புதம் (1988-1989)

10. அருட்பணி.‌ மரிய மார்ட்டின் (1989-1993)

11. அருட்பணி.‌ G. அல்போன்ஸ் (1993-1996)

12. அருட்பணி.‌ ஜோக்கிம் (1996-1999)

13. அருட்பணி. மரிய இராஜேந்திரன் (1999-2006)

14. அருட்பணி. ஜோசப் ராஜ் (2006 ஜூன் -அக்டோபர்)

15. அருட்பணி.‌ மரிய செல்வராஜ் (2006-2007)

16. அருட்பணி.‌ ஜெனிபர் எடிசன் (2007-2013)

17. அருட்பணி. பிரைட் சிம்சராஜ் (2013-2018)

18. அருட்பணி.‌ ஆல்வின் விஜய் (2018 முதல்---)

இவ்வாறு 1923 முதல் 2023 வரை நூறாண்டுகளால் மேல்புறம் தலத்திருச்சபை பெற்றுள்ள வளர்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் பங்கு தந்தையர்களின் தன்னலமற்ற உழைப்பும், முயற்சியும், இறைமக்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியும் தான் இறையாட்சி இலக்குடன் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இயேசுவின் நன் மதிப்பீடுகளோடு, புதுப்புது திட்டங்களோடு, மக்களின் வளர்ச்சியை மையமாக்கி பயணிக்கும் மேல்புறம் தூய காவல் தூதர்கள் ஆலய நூற்றாண்டு விழா மகிழ்ச்சி எங்கும் நிறையட்டும்...!! இறையாட்சி ஒளிரட்டும்..!!! 

தகவல்கள்: பங்குத்தந்தை அருள்பணி. ஆல்வின் விஜய் அவர்களின் வழிகாட்டலில் பங்கு அருட்பணிப்பேரவை.