350 புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம், கண்டன்விளை

    

புனித குழந்தை இயேசுவின் தெரசாள் ஆலயம்.

இடம் : கண்டன்விளை

மாவட்டம் : கன்னியாகுமரி

மறை மாவட்டம் : குழித்துறை

நிலை : பங்குத்தளம்

கிளைகள் :
1. புனித அலங்கார அன்னை ஆலயம், சித்தன்தோப்பு
2. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், பண்டாரவிளை
3. புனித தோமையார் ஆலயம், இரணியல்

பங்குத்தந்தை : அருட்பணி W. சகாய ஜஸ்டஸ்

இணை பங்குத்தந்தை : அருட்பணி வெலிங்டன்

குடும்பங்கள் : சுமார் 1000

அன்பியங்கள் : 19

ஞாயிறு திருப்பலி : காலை 07.00 மணிக்கு

திங்கள் முதல் சனிக்கிழமை வரை திருப்பலி : காலை 06.15 மணிக்கு

திருவிழா : செப்டம்பர் மாத இறுதி வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான பத்து நாட்கள்.

முகவரி :
புனித குழந்தை தெரசாள் ஆலயம்,
கண்டன்விளை,
கண்டன்விளை (அஞ்சல்),
கன்னியாகுமரி - மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா,

https://www.youtube.com/channel/UCNZ6u9wxyYI_ymSr8eDimiQ
Facebook page : http://Www.fb.com/theresekandanvilai
Instagram ID : https://instagram.com/st.therese_church_kandanvilai

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணியாளர்கள்:

1. மேதகு. ஆயர் ரெத்னசுவாமி
2. அருட்பணி. அல்ஃபோன்ஸ்
3. அருட்பணி. தேவசகாயம்
4. அருட்பணி. மரியதாசன்
5. அருட்பணி. சேவியர் ராஜமணி
6. அருட்பணி. பீட்டர்
7. அருட்பணி. எல்ஃபின்ஸ்டன்
8. அருட்பணி. பேட்ரிக் ஜியோ
9. அருட்பணி. அமலதாஸ்
10. அருட்பணி. ஞானதாசன்
11. அருட்பணி. டேவிட் ராஜ்
12. அருட்பணி தாமஸ் குருசப்பன்
13. அருட்பணி. சகாயதாஸ்
14. அருட்பணி. கென்னெடி
15. அருட்பணி. புஷ்பதாசன்
16. அருட்பணி. லூயிஸ்
17. அருட்பணி. சதீஷ் மகிழன்
18. அருட்பணி. ததேயுஸ்
19. அருட்பணி நர்சீசன்
20. அருட்பணி ஜோண்ஸ்
21. அருட்பணி மனோஜ்
22. அருட்பணி. ஜியோ கிளிட்டஸ்

மற்றும் 50 -க்கும் மேற்பட்ட அருட்சகோதரிகள்.

இவ்வாறாக இறையழைத்தல்கள் பெற்ற அதிகமான மண்ணின் மைந்தர்களை, உலகெங்கும் சென்று மறைப்பரப்பு செய்திட வைத்து பெருமை கொள்கிறது கண்டன்விளை இறை சமூகம்.

வழித்தடம் : 
நாகர்கோவில் - திங்கள்நகர் வழித்தடத்தில் கண்டன்விளையில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

வரலாறு :

இந்திய கிறிஸ்தவ சமூகத்தில் உரோமன் கத்தோலிக்கர் தாம் எண்ணிக்கையில் அதிகம். போர்த்துக்கீசியரின் ஆதரவாலும் இயேசு சபையினரின் தன்னலமற்ற அயரா உழைப்பினாலும் பிற சமயத்தை சார்ந்தவர்கள் அதிகமாக கிறிஸ்தவம் தழுவிக் கொண்டிருந்தனர். இத்தகைய மாற்றத்தால், இந்தியாவிலேயே அதிக கிறிஸ்தவர்கள் வாழும் கத்தோலிக்க மறை மாவட்டமாகக் கோட்டாறு மறை மாவட்டம் விளங்கியது.

கிறிஸ்துவின் சீடர்களில் ஒருவரான புனித தோமையார் (கி.பி 52 - 68) இந்தியாவிற்கு வந்து, முதல் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவத்தை அறிமுகம் செய்து வைத்தார். 1498 - இல் அல்மேய்டா என்பவர் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி இந்தியாவிற்கு கடல் வழி கண்டு பிடித்தது முதல் நற்செய்தி அறிவிப்புப் பணிக்குப் புதிய காலக்கட்டம் உருவானது. 1534 - ஆம் ஆண்டு திருத்தந்தை 3 - ஆம் பவுல் கோவா மறைமாவட்டத்தை உருவாக்கி அதை கீழை நாடுகளின் தலைமை இடமாக அமைத்தார்.

ஐரோப்பாவில் கிறிஸ்தவ சீர்திருத்த இயக்கம் தோன்றிய போது, புனித இஞ்ஞாசியார் திருச்சபையைப் புதுப்பிப்பதற்காகவும், அன்றைய கிறிஸ்தவர்களின் தவறான போக்குகளைத் திருத்துவதற்காகவும் முனைந்தார். 1539 - ஆம் ஆண்டு புதிய ஒரு துறவற சபையை நிறுவுவதற்கான அனுமதியைத் திருத்தந்தை வழங்கினார். இங்ஙனம் 1540 - ஆம் ஆண்டு "இயேசு சபை" உருவானது. புனித இஞ்ஞாசியார் இந்த சபைக்கான ஒழுங்கு முறைகளையும் சட்டத்திட்டங்களையும் உருவாக்கினார்.

இயேசு சபையினர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்ததோடு, தங்களுடைய குருக்கள் மெய்யியலிலும், இறையியலிலும் நீண்டகாலம் பயிற்சிகள் பெற வேண்டுமென்று பணித்தார். இது, பேரறிஞர் பலரை உருவாக்கியது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அதைச் சுற்றிய தீவுகளிலும் நற்செய்தி அறிவிப்பின் முன்னோடியாகத் திகழ்ந்த புனித பிரான்சிஸ் சவேரியார், கத்தோலிக்க மறுமலர்ச்சியின் விடிவெள்ளியாகவும், இயேசு சபையின் சிறந்த செயல்வீரராகவும் விளங்கினார். தூய சவேரியார் பத்து ஆண்டுகளே (1542 - 1552) கீழை நாடுகளில் பணிபுரிந்தார். ஆனால் இந்த குறுகிய காலத்தில் அவர் கிறிஸ்தவத்தைப் பல இடங்களில் பரப்பினார். கிறிஸ்தவ விசுவாசத்தை ஜப்பானிலும் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியாவின் தென்கிழக்குப் பகுதியில் மக்களுக்கு மறைக்கல்வி புகட்டவும், ஜெபங்களை கற்பிக்கவும் அவர்களுடைய மொழியைப் பயின்றார். குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தினார். குழந்தைகளை தங்கள் பெற்றோருக்கு கல்வி புகட்டத் தூண்டினார். பல கிராமத்து மக்களுக்குத் திருமுழுக்கு வழங்கினார். வேதியர்களை நியமித்து அவர்களுக்குத் தொடர் பயிற்சியும் வழங்கினார். அவரது அயரா உழைப்பினால் பிற்படுத்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்தது. புனித சவேரியாரே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்காகக் கோட்டாற்றுக்கு வந்தார். சீனாவிற்கு செல்லும் வழியில் இறந்து விட்டார். கோட்டாற்றில் அமைந்துள்ள பேராலயம் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது. இவ்வாலயம் தென்னிந்திய கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களில் முக்கியமான ஒன்றாகும்.

இவ்வாறு புனித பிரான்சிஸ் சவேரியாரின் வருகையால் கிறிஸ்தவம் குமரி மாவட்டத்தில் தழைத்தோங்கியது. கண்டன்விளை என்ற அழகிய ஊரிலும் மக்கள் கிறிஸ்துவை உணர்ந்து திருமறையைத் தழுவினர்.

கண்டன்விளை பங்கு அமைவிடம்:

பல ஆண்டுகளுக்கு முன்னர், கண்டன்விளை பங்கு கொல்லம் மறைமாவத்தின் கீழ் காரங்காடு பங்கின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. அவ்வமயம், திரு. பாக்கிய நாதன் என்பவர் தலைமையில் மறைமாவட்டத்திற்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட நிலத்தில், கண்டன்விளையில் ஒரு ஆலயம் கட்ட வேண்டுமென அப்போதைய கொல்லம் ஆயர் பேரருட் பெருந்தகை ஆலோஷியஸ் மரிய பென்சிகர் அவர்களிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவ்விண்ணப்பத்தை ஆயர் அவர்கள் ஏற்றுக்கொண்டு காரங்காடு பங்குத்தந்தையோடு இணைந்து, கண்டன்விளையில் ஆலயம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதற்காகக் கண்டன்விளைக்கு வந்தார்.

பல இடங்களைப் பார்வையிட்டார்; அவைகளில் பெரும்பாலானப் பகுதிகள் மிகவும் தாழ்வானப் பகுதிகளாகவும், மழைக்காலங்களில் நீர்தேங்கும் பகுதிகளாகவும் தென்பட்டன. இறுதியில், ஓரிடத்தைத் தேர்வு செய்தார். ஆயர் கனவில் கண்டதும் தேர்வு செய்ததும் ஒரே இடமாக இருந்தது. ஆயர், பங்குத்தந்தை மற்றும் மக்கள் அனைவரும் இணைந்து மகிழ்ந்து அவ்விடத்தை உறுதி செய்தனர்; அதுவே, கண்டன்விளை என்பதாகும்.

1923 - ஆம் ஆண்டு ஆயர் அவர்கள் புனித குழந்தை தெரசாவின் அருளாளர் பட்டம் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு திருத்தந்தை 11 - ஆம் பயஸ் அவர்களிடம், குழந்தை தெரசாவின் பெயரால் ஒரு ஆலயம் எழுப்பப்பட விண்ணப்பித்தார். அதனடிப்படையில், கண்டன்விளையில் கட்டி எழுப்பப்பட்டிருந்த சிறிய ஆலயத்தை 1924 - ஆம் ஆண்டு ஏப்ரல் 7 - ஆம் தேதி அர்ச்சித்து புனித தெரசாளுக்காக அர்ப்பணித்தார். 1925 - ஆம் ஆண்டு மே மாதம் 17 - ஆம் நாள் குழந்தை தெரசாவைப் புனிதையாக அறிவிக்கப்பட்ட நாளன்று திருப்பலியின் போது, புனித குழந்தை தெரசாள் அருளாளர் பட்டம் பெற்றபின் அவரது பெயரால் அமைக்கப்பட்ட முதல் ஆலயம், கொல்லம் மறைமாவட்டத்திற்குட்பட்ட (2014, டிசம்பர் 22 - ஆம் நாளிலிருந்து குழித்துறை மறைமாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.) கண்டன்விளையில் அமைந்துள்ள ஆலயம்தான் என அறிவித்து கண்டன்விளையை உலகறியச் செய்தார்.

ஆலய கட்டுமானப் பணி:

அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா அவர்களின் தலைமையில் ஆலயம் கட்டும் பணி 1927 - ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கட்டுமான அடித்தளம் பணியில், தலைமைப்பணியாளராகத் திகழ்ந்தவர் திரு. ஆலோஷியஸ் என்பவர் ஆவர். கல்லடித்தட்டு விளையச் சேர்ந்த திரு. ஞானப்பிரகாசம் என்பவர் நன்கொடையாக நல்கிய 27 அடி நீளமுடைய ஒரே பனைமர உத்திரம் கூரைக்கு பயன்பத்தப்பட்டது. அவரது நினைவாக, அவருடைய பெயரின் சுருக்கெழுத்துக்கள் (D.G) என்று உத்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. கட்டடம் உறுதியாக இருக்கும் பொருட்டு, சுண்ணாம்பு, பதநீர் கலந்த கலவை சாந்தாகப் பயன்படுத்தப்பட்டது. பண்டாரவிளையைச் சார்ந்த திரு. கபிரியேல் பீடத்தின் தூண்களுக்கு நன்கொடை வழங்கினார். கட்டுமானப் பணியாளரான திரு. அலங்கார் என்பவர், தம்முடைய தனித்திறமையை கட்டுமானப் பணியில் காட்டினார். சித்தன்தோப்பைச் சார்ந்த திரு. மாசிலாமணி பண்டாரவிளையச் சார்ந்த திரு. வறுவேல், திரு. கபிரியேல் மற்றும் திரு. மரியஞானம் என்பவர்கள் பாண்டிச்சேரியிலும், அண்டை ஊர்களிலும் நன்கொடைப் பிரித்துத் தாராளமாக வழங்கியதால் கட்டுமானப் பணி சிறப்பாக நடைப்பெற்றது.

பிற ஜாதியினர், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டக் காலத்தில் பல இனத்தவர்களும் இந்த ஆலய கட்டுமானப் பணிக்கு துணை புரிந்தனர். கிருஷ்ணன் வகையைச் சார்ந்த திரு. மகேஸ்வரன் பல பனை மரங்களை நன்கொடையாக வழங்கினார். மீனவர்கள் மகிழ்ச்சியாக நிறைவாகக் கொடுத்து குழந்தை தெரசாவைக் "கடல்களின் அரசி" என்று அழைத்தனர். பணியாட்களும், தங்களால் இயன்ற நன்கொடைகளைக் கொடுத்தனர். திருவிழா நாட்களில் பயன்படுத்தக்கூடிய ஒரு தேரினை அன்பளிப்பாகக் கொடுத்தனர். சித்தன்தோப்பைச் சார்ந்த தச்சுத் தொழில் செய்பவர்களும், பிறரும் ஆலயத்திற்கு ஒரு பெரிய தேரினை அன்பளிப்பாக வழங்கினர். சித்தன்தோப்பு மற்றும் பண்டாரவிளை இறைமக்கள் ஆலய கட்டுமான பணிக்காக நன்றி நிறைந்த நெஞ்சோடு தாராளமாக நன்கொடைகள் வழங்கினர்.

ஆலய கட்டுமான பணி நிறைவு:

ஆலயக்கட்டுமான பணியானது 18 மாதங்களில் நிறைவு பெற்றது. ஆலயத்தின் தரை மற்றும் கூரைக்குத் தேவையான ஓடுகளை 8 ஓடு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இனாமாக வழங்கினார்கள். கல் வேலைப்பாடுகளைக், கண்டன்விளை மக்கள் மிகச்சிறப்பாக செய்து முடித்தனர்.

1929 - ஆம் ஆண்டு ஆலயத்தின் முதற்கட்டப் பணியானது நிறைவுற்றது. இதே ஆண்டு ஆலயம் அர்ச்சிக்கப்பட்டு திருவிழாவும் கொண்டாடப்பட்டது. இங்ஙனம் புனித குழந்தை இயேசுவின் தெரசா பெயரில் உலகிலேயே முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கண்டன்விளை ஆலயம் ஆகும். இது காரங்காடு பங்கின் கிளைப்பங்காக நிறுவப்பட்டது.

1929 - 1944 வரை அருட்தந்தை. இக்னேஷியஸ் மரியா, வர்க்கீஸ், D.C. ஆன்றனி முதலானோர் பங்கு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் அக்கறை காட்டினர். 1944 - ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5 - ஆம் நாள் கண்டன்விளை தனிப்பங்காக நிலை உயர்த்தப்பட்டது. பங்கின் முதல் பங்குத்தந்தையாக, அருட்தந்தை. V.J. ஸ்டீபன் அவர்கள் பணியேற்றார்.

இந்த ஆலயம்தான், புனித தெரசாள் அருளாளராக பிரகடனப் படுத்தப்பட்டபின் முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்பதால், புனித தெரசாளின் உடன் பணியாற்றிய கார்மல் சபையைச் சார்ந்த அருட்சகோதரியரும், புனித குழந்தை தெரசாள் பிறந்த லிசியேவிலுள்ள மக்களும் 2 ஆலய மணிகளை அன்பளிப்பாக கொடுத்தனர். அதில் கீழ்கண்ட வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன:

Michiels A.Tournai 1931: என்னுடைய பெயர் குழந்தை இயேசுவின் தெரசா. நான் இந்திய மக்கள் அனைவரையும் கண்டன்விளைக்குக் கூட்டிச் சேர்ப்பேன்.

Michiels A.Tournai Fondeur என்னுடைய பெயர் சிலுவை யோவான். விண்ணில் இருக்கும் என் சகோதரி புனித குழந்தை இயேசுவின் தெரசாவின் மகிமைக்காக நான் ஒலித்துக் கொண்டிருப்பேன்.

இந்த மணிகள் ஆலயத்தின் வடக்குப் புறத்தில் அமைந்துள்ள மணிக்கோபுரத்தின் இடப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இது புனித தெரசா இந்தியாவிலுள்ள அனைவரையும் கண்டன்விளையில் கூட்டிச் சேர்த்து அவர்களுக்கு குழந்தை இயேசுவின் தெரசாவின் வாழ்க்கையை எடுத்துரைக்கிறது.

ஆலயத்தின் வடக்குப் பகுதியில் இறை அன்னை லூர்து நகரில் பெர்னதெத்துக்கு காட்சி கொடுத்ததன் நினைவாக, அழகிய கெபி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கெபி, 1945 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. புனித லூர்து அன்னையின் விழா அன்றும், அமலோற்பவ அன்னை திருவிழா அன்றும், கெபியில் சிறப்புத் திருப்பலிகள் கொண்டாடப்படுகின்றன.

1949 - ஆம் ஆண்டு அன்றைய பங்குத்தந்தை அருட்தந்தை பயஸ் J. மோரீஸ் அவர்கள் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நிலம் வாங்கி அதை ஜெபமாலை மலை என்று அழைத்தார். பிற்காலத்தில், அருட்தந்தை. V. ஹில்லாரியஸ் அங்கு ஒரு நினைவு மண்டபம் எழுப்பினார். 2000 - ஆம் ஆண்டு மாபெரும் யூபிலி கொண்டாட்டத்தின் போது அருட்தந்தை. S. இயேசு ரெத்தினம் அவர்கள் அந்த நினைவு மண்டபத்தை அகற்றி சிற்றாலயம் ஒன்றைக் கட்டத் துவங்கினார்.

அருட்தந்தையர்கள் மரியமிக்கேல், வின்சென்ட்ராஜ் ஆகியோர் காலத்தில் கட்டடப்பணி தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. பங்கு மக்களின் தாராள நன்கொடையால் ஜெபமாலை மலையின் கட்டுமானப்பணி நிறைவு பெற்றது. இந்த ஜெபமாலை மலையிலிருந்து பார்க்கும் போது அருகில் அமைந்துள்ள மலைத்தொடர்களும், தென்னை மரத்தோப்புகளும், முட்டத்தில் இருக்கும் அரபிக் கடலும் பார்ப்பவர்கள் கண்களுக்குப் பரவசமூட்டும். ஜெபமாலை மலைக்குச் செல்லும் வழிப்பகுதியில், சிலுவைப்பாதையின் 14 நிலைகளும் அருமையாக பொறிக்கப்பட்டுள்ளன.

ஆலயத்தின் தென்பகுதியிலுள்ள சாலை ஓரத்தில் இறைமக்களின் பக்தியை வளர்க்கும் அழகிய குருசடி ஒன்றை அருட்தந்தை. பெனடிட் J.R. அலெக்சாண்டர் அவர்கள் 1967 - ஆம் ஆண்டு நிறுவினார்.

1968 - ல் ஆலயம் புதுப்பித்தல் :

1968 - ஆம் ஆண்டு அருட்தந்தை. M. மரிய கிரகோரி அவர்கள், ஆலயத்தின் தலைவாயில் பகுதியை அடித்தளம் மற்றும் கல்லிலான தூண்களை அமைத்து விரிவுப்படுத்தினார். உடல் பலவீனக் காரணத்தால், அவர் பங்கின் பொறுப்பிலிருந்து 1972 - ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றார். அவரைத் தொடர்ந்து, அருட்தந்தை. C.N. வென்சஸ்லாஸ் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்று அருட்தந்தை. M. மரிய கிரகோரி விட்டுச்சென்ற பணியைத் தொடர்ந்தார்.

1976 - ஆம் ஆண்டு அருட்தந்தை. T. ஜேசுதாசன் தாமஸ் அவர்கள் பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்றார். அவரது பணிக்காலத்தில், ஆலயத்தின் தலைவாயிலின் விரிவாக்கமும் கோபுரமும் முடிக்கப்பட்டு, 1979 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 - ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. இதன் மூலம், ஆலயத்தின் 2 - ஆம் கட்ட கட்டடப் பணியானது நிறைவுப்பெற்றது.

அருட்தந்தை. M. அருள் அவர்கள் பங்குத்தந்தையாக இருந்தபொழுது, பங்குமேய்ப்புப்பணிக் குழு மற்றும் பங்கில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கத்தோலிக்கச் சங்கத்தின் ஒத்துழைப்புடன் ஆலயத்தின் மேற்கு ஓரமாக சிறுமலர் கலையரங்கத்தை 1991 - ஆம் ஆண்டு கட்டி முடித்தார். இவ்வரங்கானது, ஜெபவழிபாடு, ஆலய சம்மந்தமான பொதுக்கூட்டங்கள் மற்றும் திருவிழா காலங்களில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் பங்கு மக்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணரும் வண்ணம் இன்றும் பயன்பட்டு வருகிறது.

1992 - முதல் 2002 வரையுள்ள புனரமைப்பு:

1992 - ஆம் ஆண்டு பங்குத்தந்தையாகப் பொறுப்பேற்ற அருட்தந்தை. S. சாலமன் அவர்கள் மக்களின் தாராள மனதைத் தட்டி எழுப்பி நன்கொடைகளைப் பெற்று ஆலயத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளை புனரமைத்தார்; மேலும், வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களைக் கட்டி முடித்து 1994 - ஆம் ஆண்டு செப்டம்பர் 23 - இல் அன்றைய கோட்டாறு ஆயர் மேதகு. லியோண் A. தர்மராஜ் அவர்களின் தலைமையில் அர்ச்சிப்பு விழாவும் நடத்தினார்.

பங்கு சார்ந்த பொது நிகழ்ச்சிகள், திருமணம் மற்றும் கலைநிழ்ச்சிகள் நடைபெறும் வண்ணம், ஆலயத்திற்கு சொந்தமாக ஒரு கலையரங்கம் அமைப்பது தொடர்பாக 1996 - ஆம் ஆண்டு ஒரு சுமுகமான தீர்மானம் பங்குப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பொருட்டு, அருட்தந்தை. B. ரசல்ராஜ் அவர்களின் பணிக்காலத்தில் 1997 - ஆம் ஆண்டு தூய தெரஸ் அரங்கின் கட்டடப் பணியானது ஆரம்பிக்கப்பட்டு, அருட்தந்தையர்கள் S. இயேசுரெத்தினம் மற்றும் F. மரியமிக்கேல் ஆகியோர்களின் பெரும் முயற்சியால் 2002 - ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

ஆலயத் திருவிழா 9 - ஆம் நாள் மாலையில், இயேசுவின் திருவுருவம், அன்னை மரியாள் மற்றும் திருச்சிலுவை ஆகியவைகளைத் தாங்கி நிற்கும் இரு தேர்கள், மலர்களாலும் வண்ண விளக்குகளாலும் மிகவும் அருமையாக அலங்கரிக்கப்பட்டு ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துவரப்படும்; இந்த பவனியானது, குடும்ப விழாவான 10 - ஆம் திருவிழா திருப்பலியின் பிறகும் தொடர்ந்து பவனியாக ஆலயத்தைச் சுற்றி எடுத்து வரப்படுகிறது. பவனியில் கலந்துகொள்ளும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலுள்ள இறைமக்கள் பலர் இறைவனின் கொடைகளை புனித தெரசாள் வழியாகப் பெற்று வருகிறார்கள். திருவிழா காலங்களில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு சிறப்புப் பேருந்து வசதிகளும் தொன்றுதொட்டே செய்யப்பட்டு வருகிறது.

முற்காலத்தில் பங்குமக்களின் இறுதிச்சடங்கு (நல்லடக்கம்) முறையானது, அவரவர்க்கு சொந்தமான இடங்களிலேயே நடைபெற்றது. பின்னர், நன்கொடை மூலம் வாங்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலப் பரப்பானது ஆலயத்திற்குட்பட்ட பொதுக் கல்லறைத் தோட்டமாக மாற்றப்பட்டு, இறுதிச்சடங்கானது பொதுவான சடங்கு முறையாக மாற்றம் கண்டது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் 2 - ஆம் நாள், அனைத்து ஆன்மாக்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு இங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப் படுகிறது.

1944 ல் தனிப்பங்கான பின்னர் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. Fr. V.J. ஸ்டீஃபன் (1944 - 1949)
2. Fr. J. பயஸ் மோரிஸ் (1949 - 1963)
3. Fr. L. சேவியர் இராஜமணி (1963 - 1964)
4. Fr. J.R. அலெக்ஸாண்டர் (1964 - 1967)
5. Fr. M. சூசை மைக்கேல் (1967 - 1968)
6. Fr. M. மரிய கிரகோரி (1968 - 1972)
7. Fr. N.J. ஜார்ஜ் (1972 - 1973)
8. Fr. C.F. வென்சஸ்லாஸ் (1973 - 1976)
9. Fr. T. ஜேசுதாசன் தாமஸ் (1976 - 1980)
10. Fr. M. அருள் தேவதாசன் (1980 - 1985)
11. Fr. V. ஹில்லாரியஸ் (1985 - 1987)
12. Fr. A. இயேசு மரியான் (1987 - 1989)
13. Fr. M. அருள் (1989 - 1992)
14. Fr. S. சாலமன் (1992 - 1995)
15. Fr. G. ஜஸ்டஸ் (1995 - 1996)
16. Fr. B. ரசல்ராஜ் (1996 - 1997)
17. Fr. S. இயேசுரெத்தினம் (1997 - 2001)
18. Fr. F. மரியமிக்கேல் (2001 - 2003)
19. Fr. S. வின்சென்ட் ராஜ் (2003 - 2006)
20. Fr. R. ஐசக்ராஜ் (2006 - 2012)
21. Fr. J.R. பேட்ரிக் சேவியர் (2012 - 2015)
22. Fr. K. ஜார்ஜ் (2015 - 2016)
அருட்தந்தை. V. பெனிட்டோ (இணைப் பங்குத்தந்தை, 2015 - 2016)
23. Fr. W. சகாய ஜஸ்டஸ் (தற்போதைய பங்குத்தந்தை, 2016 முதல்)
இணை பங்குத்தந்தை Fr வெலிங்டன்

சிறப்பு தகவல் : 
புனித சிறுமலர் தெரசாள் என்று அன்புடன் அழைக்கப்படும் குழந்தை இயேசுவின் தெரசாள் மீது மிகுந்த பற்று கொண்டு, அவரைப் போலவே அருட்சகோதரி ஆனவர் தான் நமது இந்திய நாட்டின் புனிதரான புனித அல்போன்சம்மாள் என்பது குறிப்பிடத் தக்கது.

பங்கில் செயல்படும் சபைகள், இயக்கங்கள் :

கிறிஸ்தவ வாழ்வு சமூகம் :
மரியாயின் சேனை :
விண்ணரசி பிரசீடியம் :
விண்ணரசி பிரசீடியமானது, பங்கில் வயதானவர்களுக்காக முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

பக்த சபைகள் :
கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
இயேசுவின் திரு இருதய சபை
புனித ஃபிரான்சிஸ்கன் 3 - ஆம் சபை
சிறுவழி இயக்கம்
மறைக்கல்வி மன்றம்

இளைஞர் இயக்கங்கள்:
கத்தோலிக்க சங்கம்
அன்னை தெரசா நற்பணிமன்றம்
கத்தோலிக்க சேவா சங்கம்
புனித வின்சென்ட் தே-பவுல் சங்கம்
இளங்கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

பிற இயக்கங்கள் :

கோல்ஃபிங் இயக்கம்
விவசாயிகள் சங்கம்
பெண்கள் இயக்கம்
இரு பெண் குழந்தைகள் இயக்கம்
மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை நற்பணிமன்றம்
புனித தொன்போஸ்கோ நற்பணிமன்றம்
அடித்தள முழுவளர்ச்சி சங்கம்.

தனிச்சிறப்புக்கள் :

பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு சுரூபங்கள்.

புனித குழந்தை இயேசுவின் தெரசாளின் உடன்பிறந்த சகோதரிகள் அனுப்பி வைத்த இரண்டு ஆலய மணிகள்.

புனிதையின் எலும்புத் துண்டு திருப்பண்டம்.

ஒரே கல்லிலான கொடிமரம்.

புனித ஜெபமாலை மலை மாதா சிற்றாலயம்.

புனித குழந்தை இயேசுவின் தெரசாள் வழியாக நாள்தோறும் பல அற்புதங்கள் நடந்து வருவதால் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இவ்வாலயத்தை நாடி வருகின்றனர்.

புனித குழந்தை இயேசுவின் தெரசாள் தினத்தில் நமது ஆலயம் அறிவோம் வரிசையில் 350-வது ஆலயத்தை பதிவு செய்ய அருள் புரிந்த இறைவனுக்கு நன்றிகள் பல..

ஆலய தனிச்சிறப்புகள் :

புனித குழந்தை தெரசாளின் உடன்பிறந்த சகோதரிகள் வழங்கிய இரண்டு ஆலய மணிகள்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட இரண்டு சுரூபங்கள்.

புனிதையின் எலும்புத் துண்டு திருப்பண்டம்.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஆலய கொடிமரம்.

புனித ஜெபமாலை மலை மாதா சிற்றாலயம்.