616 புனித செபஸ்தியார் ஆலயம், நாகர்கோவில்


புனித செபஸ்தியார் ஆலயம் 

இடம் : பள்ளவிளை, நாகர்கோவில் -3.

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : கோட்டார் 

மறைவட்டம் : கோட்டார் 

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு : தூய பாத்திமா அன்னை ஆலயம், கோட்டவிளை 

பங்குத்தந்தை : அருட்பணி. L. பெஞ்சமின் 

குடும்பங்கள் : 270

அன்பியங்கள் : 10

ஞாயிறு திருப்பலி காலை 07.00 மணிக்கு. 

செவ்வாய், புதன், சனி காலை 06.30 மணிக்கு திருப்பலி. 

வியாழன் மாலை 06.00 மணிக்கு புனித செபஸ்தியார் நவநாள் திருப்பலி. 

வெள்ளி மாலை 06.00 மணிக்கு திருப்பலி. (புனித தேவசகாயம் சிற்றாலயத்தில்)

திருவிழா : ஜனவரி 20 ஆம் தேதியை மையமாகக் கொண்ட பத்து நாட்கள். 

சிற்றாலய திருவிழா : ஜனவரி 14,15 தேதிகளில். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. அருட்பணி. G. ஞானா பேட்ரிக் 

2. அருட்பணி. A. ஜெப மெர்ஜின் 

3. அருட்பணி. ஜெனித் சேகர் (கிளைப்பங்கு) 

4. அருட்சகோதரி. கிறிஸ்டில்டா 

5. அருட்சகோதரி. ஸ்டெல்லா பாய் (டெய்சி), SAT 

6. அருட்சகோதரி. அமலா ஜார்ஜ், திருச்சிலுவை சபை

7. அருட்சகோதரி. ஜெமீமா செல்வகுமாரி, தெய்வீக மீட்பர் சபை 

8. அருட்சகோதரி. சகாய அனிதா பேபி, தூய இருதய சபை

9. அருட்சகோதரி. S. பிலோமின் மேரி, புனித பாத்திமா அன்னை சபை (கிளைப்பங்கு)

10. அருட்சகோதரி. V. பாத்திமா, SAT (கிளைப்பங்கு)

11. அருட்சகோதரி. V. சகாய ஜெசி, SAT (கிளைப்பங்கு)

12. அருட்சகோதரர். பிரின்ஸ் சோபன், OFM Cap (கிளைப்பங்கு) 

வழித்தடம் : நாகர்கோவில் -ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி பின்புறம், பார்வதிபுரம் சாலையில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 

பார்வதிபுரம் -ஆசாரிபள்ளம் சாலை. 

Location map : https://g.co/kgs/NPkJek

வரலாறு :

இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் நீர் வளமும், நிலவளமும் நிறைந்து ஓங்கி உயர்ந்த தென்னை, பனை, வேம்பு, புளி, முந்திரி, புன்னை, புங்கு, நாவல், நொச்சி, வாரச்சி, கொடுக்காபுளி, மா, பலா, வாழை, என பலவகை மரங்களையும்; மலைகளையும் அதனடிவாரத்தில் தென்றல் காற்றை சுமந்து வரும் வயல்வெளிகளையும் கொண்ட அழகிய கிராமம் தான் பள்ளவிளை.

கீழப்பெருவிளை, கோட்டவிளை, மேலப்பெருவிளை, அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவை பள்ளவிளை ஊரின் எல்லைகளாக விளங்குகின்றன. 

குமரி மண்ணில் தோன்றி புனிதரான தேவசகாயம் பிள்ளையை, 18 ம் நூற்றாண்டில் திருவிதாங்கூர் மன்னரின் சேவகர்கள் கீழப்பெருவிளை ஆராய்ச்சியார் குளத்திற்கு அருகிலுள்ள வேப்பமரம் ஒன்றில் கட்டி வைத்தனர் எனவும், அவர் சுமார் ஏழு மாதங்கள் இங்கு சிறை வைக்கப்பட்டிருந்த காலத்தில், அருட்பணி. தாமஸ் தெ பொன்சேக்கோ அடிக்கடி வந்து  சந்தித்து வந்தார். மேலும் கடற்கரைப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து புனித தேவசகாயம் பிள்ளையை சந்தித்து வந்தனர். ஆகவே பள்ளவிளை பகுதியில் 18 ம் நூற்றாண்டில் இருந்தே கத்தோலிக்க கிறிஸ்தவம் தழைத்திருந்ததை அறிய முடிகிறது. 

பள்ளவிளையில் அருட்பணியாளர்களின் உதவியுடன் 1904 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் கட்டப்பட்டு, அருட்பணி. எலியாஸ் கார்மெல்ஸ் அடிகளாரால் ஆசீர்வதிக்கப் பட்டது. இந்த பள்ளிக்கூடம் 1927 ஆம் ஆண்டு வரை இயங்கி வந்தது. 

முதல் ஆலயம் (குருசடி):

தற்போதைய ஆலயத்திற்கு சற்று தென்கிழக்காக சிறியதொரு குருசடி கட்டப்பட்டு, அதனுள் ஒரு சிலுவையை வைத்து பள்ளவிளை மக்கள் செபித்து வந்தனர். செபம் செய்யும் பொறுப்பினை உபதேசியார்கள் ஏற்று நிறைவேற்றினர். உபதேசியார் பள்ளவிளை ஊரின் செப மன்றாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தபோது திருமுழுக்கு, திருமணம் மற்றும் பிற அருட்சாதனங்களுக்கு மேல்ஆசாரிபள்ளம் ஆலயத்திற்கு பள்ளவிளை இறைமக்கள் சென்று வந்தனர். 

1927 ஆம் ஆண்டில் மேல் ஆசாரிபள்ளம் பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. டி. சி. அந்தோணி அடிகள் ஆயருக்கு எழுதிய கடிதத்தில் பள்ளவிளை மக்கள் புனித செபஸ்தியாருக்கு வணக்கம் செலுத்துவது, பஜனை பாடுவது, சப்பரபவனி எடுப்பது போன்றவை தவறாமல் நடந்த வருவதாக குறிப்பிடுகிறார். இக்காலகட்டத்தில் இங்கு 234 கத்தோலிக்கர்கள் இருந்துள்ளனர். 

சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்டு ஓட்டுக்கூரை வேய்ந்த இரண்டாவது ஆலயம் பள்ளவிளையில் இருந்தது. 

1951 ஆம் ஆண்டில் அருட்பணி. இரபேல் பணிக்காலத்தில் பள்ளவிளை ஆலயமானது, மேல் ஆசாரிபள்ளம் பங்கின் கிளைப் பங்காக உயர்த்தப் பட்டது. 

1957 ஆம் ஆண்டில் பழைய ஆலயத்தின் நீட்டிப்பாக கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு கட்டப்பட்டு ஓடுகளால் கூரை வேயப்பட்டது. இது பள்ளவிளையின் மூன்றாவது ஆலயம் ஆகும். கோபுரமானது கருங்கற்கள் கொண்டு எழுப்பப் பட்டிருந்தது. இதில் அருட்தந்தை. சிரில் பணிக்காலத்தில் (1965-1972) எர்ணாகுளத்தில் இருந்து வாங்கிவரப்பட்ட ஆலய மணி பொருத்தப்பட்டது. இக்காலகட்டத்தில் புதிய கொடிமரமும் வைக்கப் பட்டது.

மூன்றாவதாக கட்டப்பட்ட ஆலயம் பழுதடைந்த காரணத்தால் மேல்ஆசாரிபள்ளம் பங்குத்தந்தை அருட்பணி. சொர்ணராஜ் பணிக்காலத்தில் (1980-1984) புதிய ஆலயம் கட்டுவதற்கான எண்ணம் உருவானது. பின்னர் 1988-90 காலகட்டத்தில் ஆலயம் கட்டப்பட்டு அர்ச்சிக்கப் பட்டது. 

மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 1990 ஆம் ஆண்டு மேலப்பெருவிளை தனிப்பங்காக உயர்த்தப்பட்ட போது, பள்ளவிளை இதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. 

மேலப்பெருவிளை பங்குத்தந்தை அருட்பணி. P. K. பால் செல்லையன் பணிக்காலத்தில், பள்ளவிளையில் 10 அன்பியங்கள் அமைக்கப்பட்டு, பங்குப் பேரவையும் உருவாக்கப் பட்டது. 

அருட்பணி. மரிய மார்ட்டின் பணிக்காலத்தில் பள்ளவிளை ஆலயத்திற்கென 40 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. 

அருட்பணி. ஜாண் பீட்டர் பணிக்காலத்தில் திரு. N. சங்கரலிங்கம் MP -யின் தொகுதி மேம்பாட்டு நிதியுதவி பெற்று புனித செபஸ்தியார் கலையரங்கம் கட்டப்பட்டது. மேலும் புனித செபஸ்தியார் சமூக நலக்கூடமும் கட்டப்பட்டு மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் 25.01.2004 திறந்து வைக்கப்பட்டது. 

புதிய பீடம் கட்டப்பட்டு, 15.01.2010 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

பங்குத்தந்தை அருட்பணி. டோமினிக் M. கடாட்சதாஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி. சகாய பெலிக்ஸ் பணிக்காலத்தில் புதிய கொடிமரம் வைக்கப்பட்டதுடன், அதற்கருகில் அன்னையின் கெபி அமைக்கப்பட்டு 27.10.2013 ல் அர்ச்சிக்கப் பட்டது. 38 சென்ட் தென்னந்தோப்பு நிலம் வாங்கப்பட்டது. 

மேலும் பள்ளவிளையின் அருகிலுள்ள வட்டக்கரைவிளையில் இருந்த புனித தேவசகாயம் பிள்ளை குருசடி 14.01.2014 ல் புதுப்பிக்கப் பட்டது. மேலும் பங்குத்தந்தை அருட்பணி. டோமினிக் M. கடாட்சதாஸ் அவர்களின் முயற்சியால் இந்த குருசடி ஒரு சிற்றாலயமாக மாற்றும் அறிவிப்பினை அயரிடமிருந்து 26.05.2015 ல் பெறப் பட்டது. 

தனிப்பங்கு:

மேலப் பெருவிளை பங்கிலிருந்து 

08.06.2016 அன்று பள்ளவிளை தனிப்பங்காக மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் உயர்த்தப்பட்டது. அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர் அவர்கள் முதல் பங்குத்தந்தையாக பணிப் பொறுப்பேற்றார். கோட்டவிளை தூய பாத்திமா அன்னை ஆலயம் இதன் கிளைப் பங்காக ஆனது. 

பள்ளவிளையின் 5வது ஆலயம் :

பங்குத்தந்தை அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர் அவர்களின் முயற்சி மற்றும் பள்ளவிளை பங்கு மக்களின் அயராத தன்னலமற்ற உழைப்பு, நிதியுதவிகள் மற்றும் பல்வேறு நன்கொடைகள் மூலமாக தற்போதைய புதிய ஆலயம் கட்டப்பட்டு 08.09.2020 அன்று மேதகு ஆயர் நசரேன் சூசை அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

சுமார் 120 ஆண்டுகாலத்தில் 5வது ஆலயம் கண்ட பள்ளவிளை மக்களின் வளர்ச்சி மற்றும் இறைவிசுவாசத்தை இது பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. 

உபதேசியார்கள் பள்ளவிளை பங்கின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக ஒவ்வொரு நாளும் மாலையில் செபம் நடத்துதல், வணக்க மாதங்களில் தியான சிந்தனைகளை வாசிப்பது, இல்லங்களுக்குச் சென்று தனிப்பட்ட கருத்துகளுக்காக செபித்தல், கல்லறைகளுக்கு சென்று செபித்தல், தினமும் மூன்று வேளைகள் ஆலய மணியடித்தல் போன்ற பணிகளை திறம்பட செய்து வந்தார்கள்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள் :

1. பீடச்சிறார் 

2. பாடகற்குழு 

3. பாலர்சபை 

4. சிறுவழி இயக்கம் 

5. பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் (3)

6. அன்பிய ஒருங்கிணையம்

7. மறைக்கல்வி மன்றம் 

8. நல்ல சமாரியன் குழு

9. திருத்தூது கழகம் & இயக்கங்களின் ஒருங்கிணையம்

10. திருவழிபாட்டுக்குழு

11. இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் 

12. இளம் பெண்கள் இயக்கம் 

13. கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம் 

14. கைகள் இயக்கம் 

15. மரியாயின் சேனை 

16. புனித வின்சென்ட் தே பவுல் சபை 

17. பங்கு அருட்பணிப் பேரவை

18. இளையோர் இயக்கம்

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

மேல் ஆசாரிபள்ளம் பங்கின் கிளைப் பங்காக பள்ளவிளை செயல்பட்டு வந்தபோது :

1. அருட்பணி. இரபேல் (1951-1954)

2. அருட்பணி. D. செபஸ்தியான் (1954-1957)

3. அருட்பணி. உபால்டுராஜ் (1957-1965)

4. அருட்பணி. சிரில் S. பெர்னாண்டோ (1965-1972)

5. அருட்பணி. கிறிஸ்துதாஸ் (1972-1975)

6. அருட்பணி. M. ஞானபிரகாசம் (1975-1980)

7. அருட்பணி. A. சொர்ணராஜ் (1980-1984)

8. அருட்பணி. M. பீட்டர் (1984-1986)

9. அருட்பணி. M. ஏசுதாசன் (1986-1987)

10. அருட்பணி. M. அம்புரோஸ் (1987-1988)

11. அருட்பணி. ஜோசப் பிதேலிஸ் (1988-1989)

12. அருட்பணி. A. பீட்டர் (1989-1990)

13. அருட்பணி. ம. ப. ஜேசுதாஸ் (1990 -

மேலப்பெருவிளை பங்கின் கிளைப் பங்காக செயல்பட்டு வந்த போது :

1. அருட்பணி. M. ஞானபிரகாசம் (1990-1995)

2. அருட்பணி. P. K. செல்லையன் (1995-1996)

3. அருட்பணி. S. மரிய மார்ட்டின் (1997-1999)

4. அருட்பணி. G. மரிய கிளாட்சன் (1999-2000)

5. அருட்பணி. ஜூடு இராஜேஷ் (2000-2001)

6. அருட்பணி. ஜாண் J. பீட்டர் (2001-2004)

7. அருட்பணி. பாபு ஜாண் (2004-2006)

8. அருட்பணி. ஆன்றணி மெகல்லன் (2006-2007)

9. அருட்பணி. B. ரசல்ராஜ் (2007)

10. அருட்பணி. ஜஸ்டஸ் (2007-2010)

11. அருட்பணி. மரிய வில்லியம் (2010-2012)

12. அருட்பணி. டோமினிக் கடாட்சதாஸ் (2012-2015)

உதவிப் பங்குத்தந்தையர்கள்:

13. அருட்பணி. M. டென்சிங் (2007-08)

14. அருட்பணி. S. செபஸ்தியான் 

15. அருட்பணி. எட்வர்ட் (2009-10)

16. அருட்பணி. ஆண்ட்ரூஸ் (2010)

17. அருட்பணி. சகாய  பெலிக்ஸ் (2012)

18. அருட்பணி. L. அருள் யூஜின் ராய் (2012)

19. அருட்பணி. A. ஜெலஸ்டின் 

20. அருட்பணி. Y. குருசு கார்மல் (2015)

21. அருட்பணி. J. சைமன் (2016)

22. அருட்பணி. பிலிப் குவின் 

தனிப்பங்கானது முதல்:

1. அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர் (2016-2020)

2. அருட்பணி. L. பெஞ்சமின் (2020 முதல் தற்போது..)

தகவல்கள் : முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி. J. பிரான்சிஸ் சேவியர். 

புகைப்படங்கள் பங்குத்தந்தை அருட்பணி. L. பெஞ்சமின். 

வரலாறு : ஆலய அர்ச்சிப்பு விழா மலர்.