123 புனித குழந்தை தெரசாள்ஆலயம், பாலூர்


புனித குழந்தை தெரசாள் ஆலயம்

இடம் : பாலூர் (திரேஸ்புரம்)

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

பங்குத்தந்தை : அருட்பணி ஆன்றனி பாஸ்கர்.

நிலை : கிளைப்பங்கு
பங்கு: புனித அந்தோணியார் ஆலயம், பூட்டேற்றி.

குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 5

ஞாயிறு திருப்பலி : காலை 06.45 மணிக்கு.

திருவிழா : செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் ஏழு நாட்கள்.

திரேஸ்புரம் வரலாறு :

குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருந்து தேங்காப்பட்டணம் செல்லும் சாலையில் பாலூர் அமைந்துள்ளது.  பாலூரில் குளங்களும் நீரூற்றுப் பகுதிகளும் அதிகமாக காணப்படுகிறது. பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பாலூர் வழியாக கருங்கல் சந்தைக்கு செல்வது வழக்கம். இத்தகைய பாலூர் பகுதியில் பரந்து விரிந்த பகுதியை 'பரப்பு' என்றனர். 

கி.பி 1900 ஆண்டு காலகட்டத்தில் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் பரப்பு பகுதியில் குடியேறினர். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்  என்பதற்கிணங்க திரு. முத்தையா வைத்தியரின் முயற்சியில் திரு. ஞானப்பிரகாசம் அவர்களிடமிருந்தும் மற்றும் ஆறு நபர்களிடமிருந்தும் 15 சென்ட் நிலம் வாங்கப்பட்டு, அப்போதைய கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பெரைரா அவர்கள் பெயருக்கு எழுதப் பட்டது. புதுக்கடை பங்குத்தந்தையின் உதவியால் புனித மிக்கேல் அதிதூதர் சுரூபம் ஏற்பாடு செய்யப்பட்டு, இனிய முகத்துடன் புனித குழந்தை இயேசுவின் தெரசாள் சுரூபம் வந்தது. 

1937 அன்று புதுக்கடை பங்குத்தந்தை அருட்பணி. வர்க்கீஸ் அவர்கள் குருசடியை அர்ச்சித்தார். அன்றைய தினமே சுமார் 50 நபர்கள் திருமுழுக்குப் பெற்றனர். குருசடியில் நாள்தோறும் மாலை வேளையில் ஜெபமும், பக்தி முயற்சிகளும் நடந்து வந்தன. கொள்ளை நோய் அதிகரிக்க கார்த்திகை மாதத்தில் மக்கள் விழித்திருந்து பஜனை பாடும் நிகழ்வும் நடந்து வந்தது. இவ்வாறாக பரப்பு என்ற ஊர் திரேஸ்புரம் ஆனது. 

இவ்வாறிருக்க மக்களிடம் தங்களுக்கு வழிபட ஒரு ஆலயம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்க 34 1/2 சென்ட் நிலம் திரு. அருளப்பர் உபதேசியார் அவர்களிடம் வாங்கப்பட்டு, மறை மாவட்ட ஆயர் மேதகு ஆஞ்ஞிசாமி அவர்கள் பெயருக்கு எழுதப் பட்டது. ஆயரின் முயற்சியுடனும், மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்பணி. தனிஸ்லாஸ் மரியா அவர்களின் ஒத்துழைப்பாலும், மக்களின் உதவியுடன் ஆலயம் கட்டப்பட்டு 29.12.1952 அன்று மாத்திரவிளை பங்குத்தந்தை அருட்பணி. தனிஸ்லாஸ் மரியா அவர்கள் அர்ச்சித்தார். 

1952 ஆம் ஆண்டு முதல் தேவைக்கேற்ப அருட்சாதன கொண்டாட்டங்களும், வழிபாட்டு நிகழ்வுகளும் ஆலயத்தில் நடந்து வந்தன. 

1956 இல் பூட்டேற்றி தனிப் பங்காக உயர்த்தப் பட்ட போது, தெரேஸ்புரம் அதன் கிளைப் பங்காக ஆனது. 

1960 ஆம் ஆண்டில் அருட்பணி. வென்சிஸ்லாஸ் அடிகளார் மறைக்கல்வியை துவக்கினார். 

1967 இல் அருட்பணி. செபாஸ்டியன் D அடிகளார் இல்ல சந்திப்பு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆகியவற்றை ஏற்படுத்தினார். நோயாளிகள் தங்க சாவடி அமைத்தார். 

1973 இல் அருட்பணி. வின்சென்ட் ரோட்ரிக் அடிகளார் கிறிஸ்தவ விசுவாசத்தை மக்களிடம் முறையாக கட்டியெழுப்பினார். 

1974 ஆம் ஆண்டில் அருட்பணி. M. மத்தியாஸ் அவர்கள் கத்தோலிக்க சேவா சங்கத்தை ஆரம்பித்து சேவை மனப்பான்மையை வளர்த்தார். 

1976 இல் அருட்பணி. வெனான்சிஸ் சிறுதொழில் மேம்பட பயிற்சி கொடுத்ததின் அடிப்படையில், பீடி தொழில் ஊரில் காலெடுத்து வைத்தது. 

1981 இல் அருட்பணி. ஜூலியஸ் S. M அடிகளார் மக்களின் உள்ளங்களை புதுப்பிக்க செப வழிபாட்டை ஏற்படுத்தினார். 

1986 இல் அருட்பணி. அந்தோணிமுத்து அவர்கள் கிராம முன்னேற்ற சங்கத்தை ஏற்படுத்தினார். 

1989 இல் அருட்பணி. மரிய அற்புதம் அவர்கள் இளைஞர்களை ஒன்று சேர்த்து இளைஞர் இயக்கத்தினை உருவாக்கியதுடன், புனித வின்சென்ட் தே பவுல் சபை சிறுமலர் கிளைச்சபையும் ஆலயத்தில் துவங்கப்பட்டது. 

அருட்பணி. வின்சென்ட் ராஜ் பணிக்காலத்தில் பழைய ஆலயம் பழுதடைந்த காரணத்தால் புதிய ஆலயம் கட்ட திட்டமிடப்பட்டு, 1997 ஆம் ஆண்டில் ஆலய கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டன. 

தொடர்ந்து அருட்பணி. R. லாரன்ஸ் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து பணியாற்றிய அருட்பணி. S. லாரன்ஸ் அவர்களின் பணிக்காலத்தில் மக்களின் நன்கொடைகள், அயராத தன்னலமற்ற உழைப்புடன் கட்டப்பட்டு 30.09.1998 அன்று மேதகு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

2000 ஆம் ஆண்டில் பணியற்றிய அருட்பணி. M. சூசை அவர்கள் முயற்சியில் பழுதடைந்த குருசடி புதிதாக கட்டப்பட்டது. 

அருட்பணி. M. டென்சிங் பணிக்காலத்தில் அப்போதைய பங்கு நிர்வாகம் பல்வேறு ஆலயங்களுக்கும், பல்வேறு ஊர்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்து நிதி திரட்டி பங்கு மக்களின் ஒத்துழைப்போடு ஏறக்குறைய 40 லட்சம் ரூபாய் செலவில் பழைய ஆலயம் புதுப்பிக்கப்பட்டு, 03-10-2014 அன்று கோட்டார் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.