110 இயேசுவின் திரு இருதய ஆலயம், பாகோடு


இயேசுவின் திரு இருதய ஆலயம்

இடம் : பாகோடு

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை.

திருத்தந்தை : பிரான்சிஸ்
ஆயர் : மேதகு ஜெறோம் தாஸ்
பங்குத்தந்தை : அருட்பணி ஜான் பிரிட்டோ.

நிலை : பங்குதளம்
கிளை : தூய லூர்து மாதா ஆலயம், நெல்லிக்காவிளை.

குடும்பங்கள் : 364
அன்பியங்கள் : 12

ஞாயிறு திருப்பலி : காலை 08.00 மணிக்கு.
வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு.

திருவிழா : மே மாதத்தில் ஐந்து நாட்கள்.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்தந்தை. N. மார்ட்டின் 
2. அருட்தந்தை. விக்டர் 
3. அருட்தந்தை. சுனில் 

மற்றும் பல அருட்சகோதரிகள்.

வரலாறு :

கிபி 1930 ம் ஆண்டு கொல்லம் மறை மாவட்டத்திலிருந்து பிரிந்து கோட்டார் மறை மாவட்டம் உதயமான காலத்தில், பாகோடு பகுதியில் உள்ள சில நல்லுள்ளங்களின் முயற்சியால், இப்பகுதியில் கத்தோலிக்க திருச்சபை வளரத் தொடங்கியது. 1933 ம் ஆண்டு திரித்துவபுரம் பங்குத்தந்தை அருட்பணி தனிஸ்லாஸ் மரியா தலைமையில் பங்கின் சில நல்லுங்களின் துணையுடன் மறைபரப்புப் பணி தீவிரமடைந்தது.

1937 ல் ஆயர் மேதகு லாரன்ஸ் அவர்கள் கோட்டார் ஆயராக இருந்த போது, மாதிக்காவிளை என்ற இடத்தில் ஓலைக் கொட்டகை அமைக்கப்பட்டு, திரித்துவபுரத்தின் கிளைப் பங்கு என்ற தகுதியைப் பெற்றது. பின்னர் இவ்வாலயம் தற்போதைய ஆலயத்தின் வடக்குப் பகுதிக்கு மாற்றப்பட்டு "பொற்றை கோயில்" என மக்களால் அழைக்கப்பட்டது.

குருகுல முதல்வர் அருட்பணி வின்சென்ட் அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நிறுவப்பட்டு 1939 ம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, புதிய ஆயர் மேதகு T. R ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

1940 முதல் பத்து ஆண்டுகள் வட்டார முதன்மைப் பணியாளர் அருட்பணி வர்க்கீஸ் அவர்கள் மறைபரப்பு பணிபுரிந்தார். 1950-1958 ல் அருட்பணி எப்ரேம் கோமஸ் அவர்கள் வட்டார முதன்மைப் பணியாளராக பொறுப்பேற்று, பிரான்சிஸ்கன் துறவற சபையை பங்கில் நிறுவினார். இவரது பணிக்காலத்தில் நெல்லிக்காவிளை (கிளைப்பங்கு) பகுதியில் ஆலயத்திற்காக ஓலைக் கொட்டகை அமைக்கப் பட்டது.

1958 ம் ஆண்டு இயேசுவின் திரு இருதயத்தை பாதுகாவலாகக் கொண்டு பாகோடு தனிப்பங்காக வளர்ந்தது. முள்ளங்கினாவிளை பங்கிலிருந்து பிரிக்கப்பட்ட மார்த்தாண்டம் மற்றும் புத்தன்கடை பங்கிலிருந்து பிரிக்கப்பட்ட திக்குறிச்சி ஆகியவை பாகோட்டின் கிளைப் பங்குகளாயின. 07-09-1959 ல் அருட்பணி D. செபஸ்தியார் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்கள். இவரது பணிக்காலத்தில் பணியாளர் இல்லம் சீரமைக்கப்பட்டு, ஆலய மதிற்சுவர் கட்டப்பட்டது.

26-05-1967 ல் அருட்பணி C. F வென்செஸ்லாஸ் அவர்கள் பொறுப்பேற்று; ஆலம்பாறை புனித வென்செஸ்லாஸ் தொடக்கப் பள்ளி, நெல்லிக்காவிளை புனித மேரி தொடக்கப்பள்ளி ஆகியன இவரால் நிறுவப் பட்டது. 1970 ல் திக்குறிச்சி தூய கபிரியேல் தொடக்கப் பள்ளி நடுநிலைப் பள்ளியாக உயர்த்தப் பட்டது. மேலும் ஆலயத்திற்கு மின் இணைப்பு பெறப்பட்டதுடன் ஆலய வளாகத்தில் புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டது.

08-05-1973 ல் அருட்பணி எப்பாப்பிரஸ் அவர்கள் பணிபொறுப்பேற்று பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெறப்பட்டதுடன் 1974 ல் வயதிற்கேற்ப பல குழுக்களையும், இயக்கங்களையும் உருவாக்கி மக்களை இவற்றில் ஈடுபடச் செய்தார். மேலும் 1975 ல் பங்குப்பேரவை அமைக்கப்பட்டதுடன் ஆலயத்திற்கு ஒலிப் பெருக்கி வசதியும் செய்யப்பட்டது. 25-03-1977 ல் திக்குறிச்சியில் புதிய ஆலயம் மேதகு ஆயர் ஆரோக்கியசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

13-04-1977 ல் அருட்பணி A. பீட்டர் அவர்கள் பொறுப்பேற்று திரு இருதய உயர்நிலைப் பள்ளியை நிறுவினார். குற்றிக்காட்டுவிளையில் புனித அந்தோணியார் குருசடி கட்டப்பட்டது. 25-10-1982 ல் அருட்பணி K. அமிர்தராஜ் பொறுப்பேற்று இரண்டாம் வத்திக்கான் சங்க ஒளியில் முற்போக்கு சிந்தனையுடன் வழி நடத்தினார். தொடர்ந்து அருட்பணியாளர்கள் வில்சன், ஹென்றி, மரிய அல்போன்ஸ் ஆகிய மூவர் குழு பணியாற்றியது.

08-06-1989 ல் அருட்பணி மரியதாஸ் அவர்களும், 24-05-1990 ல் அருட்பணி ஜான் ஜோசப் அவர்களும் பணியாற்றினர். 26-05-1993 ல் அரேட்பணி பால் ஸ்டீபன் பொறுப்பேற்று ஆலய விரிவாக்கப் பணிகள், பணியாளர் இல்ல கட்டுமானப் பணிகள் துவக்கப் பட்டது. தொடர்ந்து அருட்பணி பிரான்சிஸ், ராபர்ட் ஆகியோர் பொறுப்பேற்று சிறப்பாக வழி நடத்தினர். தொடர்ந்து ஆருட்பணி மரிய சூசை பொறுப்பேற்று 1998 ல் பணியாளர் இல்லம் மற்றும் 1999ல் ஆலய விரிவாக்கப் பணிகள் நிறைவுற்றன.

23-05-2001 ல் அருட்பணி சகாய ஜஸ்டஸ் பொறுப்பேற்று திரு இருதய உயர்நிலைப் பள்ளி வெள்ளி விழா கட்டிடம் கட்டப்பட்டது. ஆலம்பாறை பள்ளிக்கான குடிநீர் வசதியும் செய்யப்பட்டது.

13-05-2003 ல் அருட்பணி ததேயு லியோன் ஜோஸ் பொறுப்பேற்று நெல்லிக்காவிளை பள்ளிக்கட்டிடம், திக்குறிச்சி பள்ளிக்கட்டிடம் மற்றும் பாகோடு ஆலய கோபுரம் புதுப்பித்தல் பணிகள் சிறப்பாக செய்யப்பட்டது.

01-06-2006 ல் அருட்பணி M.S பிறிம்மஸ் சிங் பொறுப்பேற்று இறை அழைத்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆலம்பாறை பள்ளி புதிய கட்டிடம் கட்டப்பட்டதுடன் ஆலயத்தின் மூன்று குருசடிகளும் புதுப்பிக்கப் பட்டு அழகு படுத்தப்பட்டது. திக்குறிச்சி புதிய ஆலயம் கட்டப்பட்டு 29-09-2010 ல் அர்ச்சிக்கப் பட்டது. இவரைத் தொடந்து பொறுப்பேற்ற அருட்பணி புஷ்பராஜ் அவர்கள் (20-02-2012 முதல் 24-05-2017 வரை )பாகோடு பங்கில் இறைபணி செய்த காலகட்டத்தில் பங்கில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 

2013 ம் ஆண்டு பங்கின் பவழவிழாவை முன்னிட்டு ஆலய பீடம் புதுப்பிக்கப்பட்டு சிறப்பாக 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடினர். மேலும் இயேசுவின் திரு இருதய பள்ளிக்கூட புதிய கட்டிடம் கட்டப்பட்டு கல்வி பணியிலும் சிறந்து விளங்க அருட்பணி புஷ்பராஜ் அவர்கள் வழிவகை செய்தார். பின்னர் ஆலயத்தைச் சுற்றிலும் தரைத்தளம் அமைக்கப்பட்டதுடன் புதிய கொடிமரமும் வைக்கப் பட்டது.

கிளைப்பங்கான நெல்லிக்காவிளை யில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு நிறைவேற்றப் பட்டது. அவை ஆலய வளாகத்தில் புனித அந்தோணியார் குருசடி கட்டி முடிக்கப்பட்டது. இவரது பணியின் இடைப்பட்ட காலத்தில் பள்ளிக்கூட மற்றும் ஆலய வளாக செயல் பாட்டிற்காக மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டதுடன், ஏற்கனவே இருந்த பழைய ஆலயம் புதுப்பிக்கப் பட்டு கான்கிரீட் மேற்கூரை போடப்பட்டதுடன், ஆலய முன்புறப்பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டு கோபுரமும் கட்டப்பட்டு அழகு படுத்தப் பட்டது.

இவ்வாறு பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் ஆன்மீகத்தில் மக்களுக்கு புதுமலர்ச்சியையும் ஏற்படுத்திய Fr புஷ்பராஜ் அவர்களின் பணிக்காலமானது பாகோடு பங்கின் பொற்காலம் என பங்கு மக்கள் மனநிறைவோடு கூறுகின்றனர்.

தற்போது அருட்பணி ஜான் பிரிட்டோ அவர்கள் சிறப்பாக பங்கு மக்களை வழி நடத்தி பாகோடு பங்கை வளர்சிப்பாதையில் கொண்டு செல்கின்றார் .