287 புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம், இராஜாவூர்


புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம்

இடம் : இராஜாவூர்

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : கோட்டார்

நிலை : திருத்தலம்

கிளை : புனித காணிக்கை மாதா ஆலயம், வடக்கு இராஜாவூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை L. ரால்ஃப் கிரான்ட் மதன்

இணை பங்குத்தந்தை : அருட்தந்தை L. சகாய ஆன்றனி

குடும்பங்கள் : 850
அன்பியங்கள் : 21

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 05.00 மணி மற்றும் மாலை 04.30 மணிக்கும்

திங்கள், செவ்வாய், புதன் திருப்பலி : காலை 05.30 மணிக்கு.

வியாழன் காலை 05.30 மணிக்கு திருப்பலி, மாலை 07.30 மணிக்கு நற்கருணை ஆராதனை.

வெள்ளி திருப்பலி : காலை 05.30 மணி மற்றும் மாலை 07.30 மணி
இரவு 09.00 மணிக்கு : குருசடியில் திருமணி ஆராதனை.

சனிக்கிழமை :

காலை 05.30 மணிக்கு : திருப்பலி
காலை 08.45 மணிக்கு : ஆங்கில திருப்பலி (முதல் சனிக்கிழமை)
காலை 11.30 மணிக்கு : நவநாள் திருப்பலி
மாலை 03.30 மணிக்கு : மலையாளத்தில் திருப்பலி (முதல் சனிக்கிழமை)
மாலை 05.00 மணிக்கு : நவநாள் திருப்பலி
மாலை 07.30 மணிக்கு : நவநாள், சிறப்பு நற்கருணை ஆசீர்
நள்ளிரவு 11.00 மணிக்கு : குருசடியில் சிறப்பு ஜெப வழிபாடு
நள்ளிரவு 11.00 மணிக்கு : சிறப்பு குணமளிக்கும் ஆசீர்வாத ஆராதனை (2-ஆம் சனி)

திருவிழா : மே மாதம் முதல் வெள்ளிக்கிழமை ஆரம்பித்து பத்து நாட்கள் நடைபெறும்.

வழித்தடம் :

பேருந்து வசதிகள் :

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து : TSS 30, 30, 30A, 30C, 34, 5D/30.

கன்னியாகுமரி மற்றும் ஆரல்வாய்மொழியிலிருந்து : 15, 17, 319, 23V.

மற்றும் விழாக்கால சிறப்பு பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

வரலாறு :

முக்கடலும் சங்கமிக்கும் குமரி மாவட்டத்தில், நாகர்கோவிலுக்கு கிழக்கே 15 கி.மீ தூரத்தில் சுசீந்திரம், தோவாளை ஊர்களுக்கு நடுவில் அமைந்துள்ளது இராஜாவூர்.

கி.பி 1542 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தூத்துக்குடி வந்திறங்கி, 1545 வரை கிழக்கு கடற்கரை, குமரி கடற்கரை மற்றும் திருவிதாங்கூர் பகுதிகளில் இயேசு கிறிஸ்துவின் நற்செய்திகளைப் போதித்து, கிறிஸ்தவ மறையை காலூன்றச் செய்த புனித சவேரியாரால் மனந்திருப்பப்பட்ட கிறிஸ்தவர்களில் பலர், பல ஊர்களில் இருந்தும் பிழைப்பு தேடி இராஜாவூருக்கு வந்து குடியேறியதாக வரலாறு உள்ளது.

கிபி 18-ஆம் நூற்றாண்டு முதலே இராஜாவூர் இறை மக்கள் தூய மிக்கேல் அதிதூதருக்கு சிறியதோர் ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர்.

கி.பி 1919-ஆம் ஆண்டு கொல்லம் ஆயர் மேதகு பென்சிகர் ஆண்டகை உதவியுடன் ஆலயம் பெரிதாக கட்டப்பட்டு குருகுல முதன்மை தந்தையால் அர்ச்சிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் கோட்டார் பங்கின் கிளையாக இருந்தது.

1926-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் நாள் இராஜாவூர் தனிப்பங்காக சிறப்பு பெற்றது. தற்போதைய அழகிய ஆலயம் 08-12-1991 அன்று கோட்டார் மறை மாவட்ட ஆயர் மேதகு லியோன் அ தர்மராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜூபிலி ஆண்டு 2000 -ல் மே மாதம் 06-ஆம் நாள் அர்ச்சிக்கப்பட்டது. ஜூபிலி ஆண்டின் தொடக்கத்தில் கோட்டார் ஆயர் லியோன் அ தர்மராஜ் அவர்கள், கோட்டார் மறை மாவட்டத்தில் உள்ள ஏழு திருத்தலங்களில் ஒன்றாக இராஜாவூரை அறிவித்தார்கள்.

இத்திருத்தலத்தில், நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்டோருக்கு நோயிலிருந்து நற்சுகம், பொல்லாத நோய்களின் சொல்லொணா தொல்லைகளிலிருந்து விடுதலை, மன அமைதியைக் கெடுத்து குடும்பத்தை இருகூறாக்கும் மனநோயிலிருந்து மகிழ்ச்சிகரமான மாற்றம், பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகாரத் தீர்வு என நாள்தோறும் எண்ணற்ற புதுமைகள் நடந்து வருகிறது.

தூய மிக்கேல் அதிதூதரின் அருள்நாடி குமரி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இத்திருத்தலத்தின் சிறப்புற்று விளங்கும் தூய மிக்கேல் அதிதூதர் குருசடியில், பலவகை நோயாளிகள் தங்கள் பிணிகள் நீங்கி நலம் பெற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

சனிக்கிழமை தோறும் மாலை 05.00 மணிக்கு நடக்கும் நவநாள் திருப்பலியிலும், இரவு 07.30 மணிக்கு நடைபெறும் நவநாள் மற்றும் சிறப்பு நற்கருணை ஆசீர்வாதத்திலும், இரவு11.00 மணிக்கு புனித மிக்கேல் அதிதூதர் குருசடியில் திருப்பயணிகளால் நடத்தப்படும் சிறப்பு செப வழிபாட்டிலும் கலந்து கொள்ள பல ஊர்களில் இருந்தும் மக்கள் விழாக்கூட்டமென திரண்டு வந்து, நன்மைகளை பெற்றுச் செல்கின்றனர். சனிக்கிழமைகளில் சிறப்பு பேருந்துகளும் பக்தர்களின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் எண்ணற்ற மக்கள் கலந்து கொண்டு உடல், உள்ள நலம் பெற்று செல்கின்றனர்.

அனைத்து சமயங்களின் சங்கமமாக நம்பிக்கையில் அணிதிரளும் பக்தர்கள் அடையும் அற்புதங்கள் ஆச்சரியத்துக்குரியவை.

நோயுற்றோரைப் பராமரிக்க, மனநோயாளிகளுக்கு சிறப்பு மனநல மருத்துவ உதவி முதலியவையும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளன. ஏழைகள் மற்றும் நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திருத்தலத்திற்கு நீங்களும் வந்து இறையாசீர் பெற்றுச் செல்ல அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...!

மண்ணின் இறையழைத்தல்கள் :

1. Fr கார்மல்
2. Fr இக்னேஷியஸ் SJ
3. Fr ஜான் குழந்தை
5. Fr பிரான்சிஸ் சேவியர்
6. Fr ஜான் அமலநாதன்
7. Fr ஜோசப் காலின்ஸ்
8. Fr தேவதாஸ்
9. Fr குருசு கார்மல்
10. Fr சகாய ஆனந்த்
11. Fr மைக்கேல் ஜார்ஜ் பிரைட்
12. Fr ஜார்ஜ் கிளமென்ட்
13. Fr திவ்வியன்

மற்றும் 6 அருட்சகோதரிகளையும் மறைபரப்பு பணிக்காக தந்துள்ளது இராஜாவூர் இறைசமூகம்.