893 கிறிஸ்து அரசர் ஆலயம், பாலக்கோடு

   

கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம்:  திம்மம்பட்டி, ஜெர்தலாவ் அஞ்சல், பாலக்கோடு, தருமபுரி மாவட்டம், 636808

மாவட்டம் : தருமபுரி

மறைமாவட்டம் : தருமபுரி

மறைவட்டம் : தருமபுரி

நிலை : பங்குதளம்

கிளைப்பங்குகள் :

1. அன்னை வேளாங்கண்ணி ஆலயம், சாவடியூர்

2. புனித விண்ணேற்பு அன்னை ஆலயம், கேசர்குளி அணை

பங்குத்தந்தை : அருள்திரு. A. அம்புரோஸ்

தொடர்புக்கு: 9965027585

குடும்பங்கள்: 90 (பாலக்கோடு 30+, கேசர்குளி அணை 30+, சாவடியூர் 30)

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி காலை 09:00 மணி

திங்கள் முதல் வெள்ளி திருப்பலி காலை 06:45 மணி

வியாழன் மாலை 06:30 மணி இறை இரக்கத்தின் நவநாள் திருப்பலி

முதல் வெள்ளி மாலை 06:30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆராதனை

பங்குத் திருவிழா : நவம்பர் கடைசி ஞாயிற்றுக்கிழமை

வழித்தடம் : பாலக்கோட்டில் இருந்து இராயக்கோட்டை செல்லும் சாலையில் 2கி.மீ தொலைவில் திம்மம்பட்டி கிராமத்தில், இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Map Location : https://goo.gl/maps/69t3V3PvWrfpDF5W8

வரலாறு :

பாலக்கோடு பகுதியில் கிறிஸ்தவர்களின் குடியிருப்புகள் இயேசு சபையினர் காலத்திலே மாரண்டஹள்ளியில் இருந்ததாக கூறப்படுகிறது. அங்கு புனித இஞ்ஞாசியார் பெயரில் ஒரு சிற்றாலயம் இருந்ததாக The Jesuits in Mysore (p.85,90) என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அருள்திரு. M.S ஜோசப் அடிகளார் தனது நூலில், புனித சூசையப்பர் பெயரில் ஒரு ஆலயம் இவ்விடத்தில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். 

அருள்திரு. அந்தோணி ரிபேரோ, SJ பொறுப்பில் மாரண்டஹள்ளி இருந்ததாகவும், 1679 முதல் 1682 ஆண்டுகளில் 146 பேர் திருமுழுக்குப் பெற்றதாகவும் The Jesuits in Mysore (p.98) நூலில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

1682 ஆம் ஆண்டு நடந்த போரில் ஆலயம் மற்றும் பங்குத்தந்தை உறைவிடமும் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் மாரண்டஹள்ளி கிறிஸ்தவர்கள் பற்றிய குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. 

பாரிஸ் மறைபரப்பு சபைனர் காலத்தில் 1853 ஆம் ஆண்டு பாலக்கோட்டிற்கு மேற்கே உள்ள பெவுஹள்ளி என்னும் இடத்தில் கிறிஸ்தவர்கள் குடியமர்த்தப்பட்டனர். கிருஷ்ணகிரியில் வாழ்ந்த பீர் முகமது சாயூப் என்பவருக்கு சொந்தமான நிலம் பாலக்கோடு அருகில் பெவுஹள்ளி மிட்டாவில் இருந்தது. இந்த பீர் முகமது சாயூப் அவர்கள் தமது 22 ஆம் வயதில், (1780ல்) ஹைதர் அலி பிரதிநிதியுடன் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று 16ஆம் லூயிஸ் அரசரை சந்தித்தார். இதன்பின்னர் இவருக்கும் பாரிஸ் மறைபரப்பு சபையினரிடமும் ஒரு நல்லுறவு இருந்தது.  அருட்தந்தை. தர்மநாதர் (Fr. Máury Amédes, MEP) கோவிலூர் பங்குத்தந்தை, பீர்முகமதை சந்தித்து, அவருக்கு சொந்தமான பெவுஹள்ளி நிலத்தில் கிறிஸ்தவர்களை குடியமர்த்தினார். 1870 இல் 30 பேர் அங்கு வாழ்ந்தனர். ஒரு சிற்றாலயமும் எழுப்பப்பட்டது. மாரண்டஹள்ளியிலிருந்து, கம்பைநல்லூர் வரை உள்ள பகுதி உப்பாற்று கணவாய் என்று அழைக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்பகுதியில் மலேரியா நோய் அதிகமாக வருகின்ற காரணத்தால் இக்குடியேற்றம் வளரவில்லை. இங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் எங்கு இடம்பெயர்ந்தனர் என்றும் அறிய முடியவில்லை. ‌ (அருள்திரு. M.S ஜோசப் p.111)

பாலக்கோட்டிற்கு அருகில் பாரிஸ் மறைபரப்பு சபையினர் காலத்தில் குறிப்பிடப்படுகின்ற மற்ற கிறிஸ்துவ குடியிருப்புகள் சாவடியூர், கொட்டாவூர், கேத்தம்பட்டி ஆகியவை. இதில் கேத்தம்பட்டி குடியேற்றம் 1845இல் நடைபெற்றது. கோட்டாவூர் என்பது சாவடியூருக்கு மிக அருகில் உள்ள குடியிருப்பாகும். இப்போது இவ்வூர் இல்லை. 

1842-43 ஆண்டுகளில் கோவிலூரில் பணியாற்றிய அருள்தந்தை மரியான் பிரான்சிஸ் அவர்கள், சாவடியூர் உள்ள கிறிஸ்தவர்களை சந்தித்ததாக அருட்பணி. M.S ஜோசப் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் (p95). 

1850 ஆம் ஆண்டு பட்டியலில் கோவிலூர் பங்கில் சாவடியூர், கோட்டாவூர் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் 1930 ஆம் ஆண்டு கடகத்தூர் பங்கு உருவானபோது சாவடியூர், கடகத்தூர் பங்குத்தந்தையின் பொறுப்பில் விடப்பட்டது. 

பின்னர் 1985 ஆம் ஆண்டு பாலகோடு பங்கு கேத்தம்பட்டி, சாவடியூர், ராயக்கோட்டை ஆகிய கிளைப்பங்குகளோடு உருவாக்கப்பட்டது. அருள்தந்தை ஹென்றி போனால், MEP பாலக்கோட்டிற்கு முதல் பங்கு தந்தையாக பொறுப்பேற்றார். பாலக்கோட்டில் வாடகை வீடு ஒன்றில் குடியேறி, பங்குப் பணிகளை தொடங்கினார். அப்போது பாலக்கோட்டில் கிறிஸ்தவர்கள்  இல்லை. ஆனால் பாலக்கோடு அருகில் உள்ள சக்கரை ஆலையில் சில கிறிஸ்தவர்கள் வேலை செய்து வசித்து வந்தனர். அப்போது சர்க்கரை ஆலையில் ஒரு இடத்தை ஒதுக்கி, திருப்பலிகள் நிறைவேற்றி வந்தனர். 

பிற்காலத்தில் சில கிறிஸ்தவர்கள் பாலக்கோட்டிலேயே தங்கினர். மிகுதியானவர்கள் இடம்பெயர்ந்தனர். பாலக்கோட்டிற்கு அருகே ஓசூர் சாலையில், திம்மம்பட்டி பகுதியில் 1986 ஆம் ஆண்டு ஆலயத்திற்கான நிலம் தந்தை போனால் அவர்கள் வாங்கினார். 

சேலம் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்கள், அருள்தந்தை ஹென்றி போனால் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், பாலக்கோடு பங்கை பற்றிய தனது கனவை பகிர்ந்து கொண்டார். அம்மடலின் ஒரு பகுதி இதோ....

"The additional role of the church at Palacode will be to be a bridge between Hindus and Muslims perhaps a counseling center or an ashram where people of all faith can mingle and get counsel. Let Palacode develop into a powerhouse of good in a way different from the traditional way of our Parishes are. Palacode is situated in a strategic place and will be in course of time a mother Parish and a flourishing Parish. I imagine it to be pasture... With lush and grass and a running books.... with heads of shape will be brought by all.... of the people to graze benefit. Be the... shepherd and invite the sheeps of all hue... bread. Enough of my dreams." 

அருள்தந்தை ஹென்றி போனால் அவர்கள், தான் வாங்கிய நிலத்தில் தமது உறைவிடத்தை கட்டி அங்கு வசித்துக்கொண்டே, சகாயமாதா மருத்துவமனையை கட்டியெழுப்பினார். அதை சேலம் குளூனி கன்னியர்களிடம் ஒப்படைத்தார். சகாய மாதா மருத்துவமனை இப்பகுதி மக்களுக்கு இயேசுவின் பிரசன்னத்தை எடுத்து சொன்னது என்பது உண்மை. அருள்தந்தை ஹென்றி போனால், 1992ல் புனித லூசி ஆங்கிலப் பள்ளி தொடங்குவதற்கு குளூனி கன்னியர்களுக்கு உதவினார். இப்போது இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டு, பாலக்கோடு மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை வழங்கி வருகிறது. மேலும் CBSE முறைக்கல்வி கூடுதலாக தொடங்கப்பட்டிருக்கிறது. 

பாலக்கோடு கிறிஸ்து அரசர் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, சேலம் ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் 27.05.1993 அன்று புனிதப்படுத்தப்பட்டது. 

2000 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்து வந்த இலங்கை வாழ் தமிழர்கள், பாலக்கோட்டின் அருகில் உள்ள கேசர்குளி அணை அகதிகள் முகாமில் குடியமர்த்தப்பட்டனர். இந்த முகாமில் உள்ள கத்தோலிக்கர்களுக்கு ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டு கிளை பங்காக செயல்பட்டு வருகின்றது. சாவடியூரில் உள்ள புனிதர்கள் இராயப்பர் சின்னப்பர் ஆலயம் மிகச் சிறியதாக இருந்ததால், 2003 ஆம் ஆண்டு ஊருக்கு நுழைவுப் பகுதியில் நிலம் வாங்கி, அன்னை வேளாங்கண்ணி ஆலயம் கட்டப்பட்டது. 

பாலக்கோட்டின் கிளைப்பங்காக இருந்த கேத்தம்பட்டி, 19.7.2000 அன்று பங்காக உருவானது. 

தற்போது பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் ஆன்மீகப் பாதையில் பயணித்து வருகிறது பாலக்கோடு இறைசமூகம்.

பங்கில் உள்ள கன்னியர்கள் சபை : 

குளூனி சகோதரிகள்

பங்கில் உள்ள கத்தோலிக்க பள்ளி:

புனித லூசி மெட்ரிக் மேல்நிலை பள்ளி

குளூனி வித்ய விஹார் CBSE பள்ளி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்கள் பட்டியல் :

1. அருட்பணி. ஹென்றி போனால், MEP

2. அருட்பணி. M. டோமினிக்

3. அருட்பணி. C.S. அந்தோணிசாமி

4. அருட்பணி. M ஜெகராஜ்

5. அருட்பணி. A சூசைராஜ்

6. அருட்பணி. R அருள்ராஜ்

7. அருட்பணி. A தாமஸ்

8. அருட்பணி. P சேவியர்

9. அருட்பணி. N.S. இருதயநாதன்

10. அருட்பணி. S. சவரியப்பன்

11. அருட்பணி. A. அம்புரோஸ்

தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. A. அம்புரோஸ் அவர்கள்.

தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ், கிருஷ்ணகிரி.