மாவட்டம்: கன்னியாகுமரி
மறைமாவட்டம்: குழித்துறை
மறைவட்டம்: காரங்காடு
நிலை : கிளைப்பங்கு
பங்கு : தூய ஜார்ஜியார் ஆலயம், பிலாவிளை
பங்குத்தந்தை அருட்பணி. M. ஆல்வின் விஜய்
குடும்பங்கள் : 160
அன்பியங்கள் : 4
திருவழிபாட்டு நேரங்கள்:
ஞாயிறு திருப்பலி காலை 07:15 மணி
வியாழன் மாலை 06:00 மணி ஜெபமாலை, குழந்தை இயேசுவின் நவநாள் திருப்பலி
வெள்ளி மாலை 06:00 மணி ஜெபமாலை, திருப்பலி
திருவிழா : ஜனவரி மாதம் 14-ம் தேதியை அடுத்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறும் வகையில் ஏழு நாட்கள் நடைபெறும்.
மண்ணின் இறையழைத்தல்கள்:
1. அருட்பணி. ஸ்டார்வின் சிரில் ஷாஜன், Kuzhithurai Diocese
2. அருட்பணி. மரிய கிளிட்டஸ், SMM (Italy)
3. அருட்பணி. லாரன்ஸ், SDB
4. அருட்சகோதரி. எலிசபெத், SSAM
வழித்தடம் : திங்கள்சந்தையிலிருந்து (47 -A அரசுப்பேருந்து, சிவரஞ்சனி, ராஜம் மினிபஸ்) சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள மூத்தாருண்ணி வந்து அங்கிருந்து சற்றே நடந்தால் வசந்தபுரம் ஆலயத்தை அடையலாம்.
Church Map location: Infant Jesus Church
https://maps.google.com/?cid=14942873455735618722&entry=gps
ஆலய வரலாறு:
ஆலய அமைவிடம்:
கிறிஸ்தவ நம்பிக்கையை ஆழப்படுத்தி, அன்பினில் எம்மை வளர்க்க, ஏழைகளின் துயர் துடைக்க, அருள்மழை பொழிய அற்புத குழந்தை இயேசுவின் ஆலயமாக முக்கடல் சங்கமிக்க, கடல் அலைகள் இசைபாட எழில் கொஞ்சும் இயற்கை வளமிகு பூமியாக, மலைகளும் குன்றுகளும் சங்கிலி தொடர் போல அமைந்து, தோட்டங்களும், தோப்புகளும் நிறைந்து முக்கனி தருகின்ற குமரிமாவட்டத்தின் தென்கோடியில் அமைந்த திங்கள்நகர் என்னும் நகரத்தின் அருகில் அழகன்பாறை என்னும் கிராமத்தை ஒட்டியுள்ள குக்கிராமம் தான் வசந்தபுரம்.
இந்த ஊர் அழகன்பாறை, காளிவிளை, கொடித்தோட்டம் ஆகிய மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. இது மண்டைக்காடு டவுண் பஞ்சாயத்திற்கு உட்பட்டது. ஆலயமானது மூத்தாருண்ணி குளத்திற்கு தெற்கும், ஆக்கணங்காடு என்ற ஊரின் மேற்கேயும், பிலாவிளைக்கு வடக்கேயும், காளிவிளைக்கு கிழக்கேயும் சுமார் 160 கிறிஸ்தவ குடும்பங்களை உள்ளடக்கியது.
மக்களின் பூர்வீகம்.
இறைநம்பிக்கையில் தளராத விசுவாசமும், செயல் ஆர்வமும் நிறைந்த இப்பகுதி மக்கள் பூர்வீக கிறிஸ்தவர்கள். எனவே எம்மக்கள் இங்கிருந்து காலை, மாலை இரவு வேளைகளில் திருப்பலிக்கும், மறைக்கல்விக்கும் மற்றும் அனைத்து ஆலய நிகழ்விற்கும் சுமார் 1.5 கி.மீ தொலைவிலுள்ள மாங்குழி பங்கிற்கு சென்று வந்தனர். மக்கள் மிகுந்த சிரமப்படுவதைக் கண்டு 1965-ல் அப்போதைய பங்குப் பணியாளராகப் பணியாற்றி வந்த அருட்பணி. எம். தனிஸ்லாஸ் அடிகளார், இப்பகுதி மக்களுக்கு தனி ஆலயம் தேவை என்பதை மக்களுக்கும், மறைமாவட்டத்திற்கும் வலியுறுத்தினார்கள்.
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர், 1992 ஆம் ஆண்டு மாங்குழி பங்குப்பணியாளராகப் பொறுப்பேற்ற அருட்பணி. M. அந்தோணி முத்து அடிகளார் மக்களின் முயற்சிக்கு ஆதரவு தந்ததோடு, இங்குள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து 23/11/1992 அன்று கிராம முன்னேற்ற சங்கத்தை நிறுவி முதல் அடியைத் தொடங்கி வைத்தார்கள். பின்னர்
பங்குப்பணியாளராகப் பொறுப்பேற்ற அருட்பணி. கிளாட்சன் அடிகளாரும் அருட்பணி. வெனான்சியஸ் அடிகளாரும் இறைமக்களின் முயற்சிகளுக்கு ஆக்கமளித்து உற்சாகமூட்டினார்கள்.
அன்பியங்களின் உதயம்:
1998-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 25-ம் தேதி மாங்குழி பங்குத்தந்தை அருட்பணி. சேகர் மைக்கேல் தலைமையில் அருட்சகோதரி செல்வமேரி அவர்களால் 3 அன்பியங்கள் உருவாக்கப்பட்டது. மாங்குழி பங்குடன் இணைந்து செயல்பட கொடித்தோட்டம் ஊரைச் சேர்ந்த மக்கள் 10-ம் அன்பியமாகவும், அழகன்பாறை ஊரைச் சேர்ந்த மக்கள் 11-வது அன்பியமாகவும், காளிவிளை ஊரைச் சேர்ந்த மக்கள் 12-வது அன்பியமாகவும் செயல்பட்டு வந்தனர்.
பின்னர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் 11-ம் அன்பியத்தை பிரித்து, 17-வது அன்பியம் உருவாக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தனர்.
ஆலயம் உருவான விதம்:
15.11.1998 ஞாயிறு காலை 11 மணியளவில் ஊர் பொதுக்குழு கூட்டம் பங்குப்பணியாளர் அருட்பணி. சேகர் மைக்கேல் தலைமையில், அருட்சகோதரர் ததேயு அவர்கள் முன்னிலையில் தற்போது ஆலயம் அமைந்திருக்கும் இடத்தில் ஆரம்பமானது. இக்கூட்டத்தில் 13 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அதில் நிர்வாக குழு உறுப்பினராக 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பங்குப் பணியாளரின் ஊக்கமூட்டுதலினாலும் செயற்குழு உறுப்பினர்களின் விடாமுயற்சியாலும், பொது மக்களின் ஈடுபாட்டினாலும் சூசன்னாவிளை என்ற இடத்தில் தென்னந்தோப்பு உள்ள 44 சென்ட் வாங்கப்பட்டு,14/7/1999 அன்று அப்போதைய கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மற்றும் மாங்குழி பங்குத்தந்தை அருட்பணி. சேகர் மைக்கேல் அவர்களின் முன்னிலையில கோட்டாறு மறைமாவட்ட ஆயர் அவர்கள் பெயரில் நிலம் கிரயம் செய்யப்பட்டது.
ஆலயம் எழும்பிய விதம்:
1998-ம் ஆண்டு நவம்பர் 15-ம் நாள் 13 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்கள்
தேர்ந்து எடுக்கப்பட்டனர். பங்குப் பணியாளரின் முயற்சி மற்றும் வழிகாட்டுதலினாலும் செயற்குழு உறுப்பினர்கள் ஆலயம் சார்ந்த காரியங்களை கவனித்து மக்களின் ஒத்துழைப்புடன் கம்பு, கமூக மரங்கள், தென்னை ஓலையால் ஒரு சிற்றாலயம் குழந்தை இயேசுவுக்கு அமைக்கப்பட்டது. அதில் வைத்து குழந்தை இயேசுவின் நவநாள் ஜெபம் வியாழக்கிழமைகளிலும், மறைக்கல்வி, பணிக்குழுக்களின் அனைத்தும் நடைபெற்றன. இவ்வாறு திருப்பலி தவிர அனைத்து காரியங்களையும் இங்கேயே நிறைவேற்றி வந்தனர். பங்குபணியாளர் சேகர் மைக்கேல் அவர்களால் பெருங் கூட்டம் நடத்தப்பட்டு இந்த ஊர் அழகன்பாறை, காளி விளை, கொடித்தோட்டம் என மூன்று ஊர்கள் அடங்கியுள்ளது. எனவே இதன் பெயர் மாறுபாடுகள் ஏற்படாமல் இருக்க புதிய பெயர் சூட்ட வேண்டும் என கருத்து கூறப்பட்டு, பங்கு பணியாளர் சேகர் மைக்கேல் அவர்களால் அன்பு நகர் என்று கருத்து கூறப்பட்டு பின்னர் பங்கு மக்களோடு ஆலோசித்து வசந்தபுரம் என பெயர் சூட்டப்பட்டது. 15/11/1998 முதல் திருவழிபாடுகள் நடந்து வந்தன. போதுமான இடவசதி இல்லாத காரணத்தால் 2000 ஆண்டில் ஓலைக் குடிசை மாற்றப்பட்டு, செயற்குழு உறுப்பினர்களின் முயற்சியாலும், நல்லுள்ளம் கொண்ட மக்களின் நன்கொடை உதவியினாலும் பங்குமக்களின் உழைப்பினாலும், தகர சீட் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
1999-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 8 ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்கள் வசந்தபுரத்திற்கு வருகை தந்து குழந்தை இயேசு ஆலயம் அமையும் இடத்தைப் பார்வையிட்டார்கள். வேகமாக இத்தகைய மாற்றங்களை கொண்டு வந்ததில் அருட்பணியாளர் சேகர் மைக்கேல் அவர்கள் முக்கியப் பங்கு வகித்தார்.
கிளைப் பங்கு உதயம்:
கோட்டாறு மறைமாவட்டமானது வசந்தபுரம் மக்களின் ஒருமித்த குரலுக்கு செவிசாய்த்து, மாங்குழி பங்கின் ஒரு பகுதியாக இருந்த வசந்தபுரத்தில் 2001-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 14-ம் நாள் மாலை 6.30 மணிக்கு முதல் திருப்பலி ஆலயத்தில் நிறைவேற்ற்றி, அன்றே வசந்தபுரம் கிளைப்பங்காக உதயமாகி, நிர்வாக வசதிக்காக மாங்குழி பங்கிலிருந்து விடுபட்டு, படர்நிலம் பங்குடன் இணைக்கப்பட்டது.
பங்கின் முதல் பங்கு பணியாளர் அருட்தந்தை ஆண்ட்ரூ 25.03.2001 அன்று முதல் பங்கு அருட்பணிப் பேரவைத் தேர்தலை நடத்தினார்.
புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழா
2001-ம் ஆண்டு மே மாதத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட அருட்பணி. ப. விக்டர் அடிகளார் பணிக்காலத்தில், நிரந்தர ஆலயம் கட்டுவதற்கு என மாவட்ட ஆட்சியாளரின் அனுமதி பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ககன்தீப்சிங் பேடி ஐஏஎஸ் அவர்கள் இவ்வாலயம் அமைக்க 2002 ஆம் ஆண்டு அனுமதி வழங்கினார்கள். அருட்பணி. விக்டர் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினாலும், அயரா உழைப்பாலும், ஆர்வமூட்டுதலினாலும் 2002-ம் ஆண்டு ஜனவரி திங்கள் 14 -ம் நாள் புதிய ஆலயத்திற்கு குருகுல முதல்வர் பேரருட்பணி. ஜாண் குழந்தை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. பங்கு மக்களின் அயரா உழைப்பாலும், அப்போதைய நிர்வாகிகளின் தொடர் முயற்சியாலும், பல இடங்களில் நன்கொடை திரட்டியும், நல்லுள்ளம் கொண்டவர்களின் நன்கொடையினாலும் ஆலய கட்டுமானப் பணிகள் முழு அளவில் நிறைவு பெற்றது.
ஆலய அர்ச்சிப்பு விழா:
2003 ஆம் ஆண்டு மே மாதத்தில் பங்குப் பணியாளராக அருட்பணி. மைக்கேல் ராஜ் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். அவர்களின் ஆர்வமிக்க ஒத்துழைப்பாலும், பங்கு மக்களின் தன்னலமற்ற தியாகத்தாலும், நன்கொடைகளாலும் குழந்தை இயேசு ஆலய பணி நிறைவு பெற்று, 12.01.2005-ம் நாள் திங்கட்கிழமை கோட்டாறு மறைமாவட்ட ஆயர் மேதகு லியோன் அ. தர்மராஜ் அவர்களால் ஆலயம் அர்ச்சித்து புனிதப்படுத்தப்பட்டது.
01.06.2006 ம் நாள் அருட்பணியாளர் ஜாண் பிரான்சிஸ் அவர்கள் பங்குதந்தையாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள், 2007-ல் பங்கிற்கு இரட்சகர் சபை பொறுப்பேற்று அருட்பணி. சந்தியாகு மற்றும் 2009-ல் அருட்பணி. ஜேம்ஸ் குமார் ஆகியோர் பங்கை சிறப்பாக வழிநடத்தினார்கள்.
04.05.2010 அன்று பிலாவிளை தனிப் பங்காக உயர்த்தப்பட்ட போது, வசந்தபுரம் அதன் கிளைப் பங்காக மாற்றப்பட்டது. முதல் பங்குதந்தை இரட்சகர் சபையைச் சேர்ந்த அருட்பணி. ஃபிராங் அவர்களின் சிறப்பான வழிகாட்டுதலால், ஆன்மீக பாதையில் சிறந்து விளங்கியது. அப்போது இணை பங்குத்தந்தையாக இருந்த அருட்பணி. லூயிஸ்ராஜ் அவர்கள் இளையோரை சிறப்பாக வழிநடத்தி, அவர்களின் ஆன்மீக வளர்ச்சிக்கு வித்திட்டார். அருட்பணியாளர் லூயிஸ்ராஜ் அவர்கள் இளையோர்களை வைத்து 03.04.2015 அன்று சிலுவைப்பாதை நிகழ்வினை இளையோர்கள், பெரியவர்களையும் இணைத்து மிகவும் தத்ரூபமாக நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்கள்.
2016-ல் அருட்பணி. சிறில் தனிஸ்லாஸ் அவர்கள் பொறுப்பேற்று பங்கை சிறப்பாக வழிநடத்தி வந்தார்கள். 2007-ம் ஆண்டு முதல் இரட்சகர் சபையோடு இணைந்திருந்த பங்கானது, 2019 மே மாதம் குழித்துறை மறைமாவட்ட குருக்களோடு இணைக்கப்பட்டு அருட்பணி சர்ஜின் ரூபஸ் அவர்கள் பங்கு தந்தையாக பொறுப்பேற்று வழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்கும், விசுவாச வாழ்விற்கும், பங்கு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து எம்மக்களை வழிநடத்தி வந்தார்கள். 2024-ம் ஆண்டு மே மாதம் அருட்பணி. ஆல்வின் விஜய் அவர்கள் பொறுப்பேற்று பங்கை ஆன்மீகப் பாதையிலும், விசுவாச வாழ்விலும், பங்கு மக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒளிவிளக்காகவும், மின்னும் நட்சத்திரமாக இருந்து வசந்தபுரம் பங்கை சீரும் சிறப்புமாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
20226 ஆம் ஆண்டு வசந்தபுரம் கிளைப்பங்காக உயர்த்தப்பட்டதன் வெள்ளிவிழா (2021-2026) ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
பங்கேற்பு அமைப்புகள்:
கிராம முன்னேற்ற சங்கம்
மறைக்கல்வி மன்றம்
பாலர் சபை
சிறுவழி இயக்கம்
இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்
இளைஞர் இயக்கம்
மரியாயின் சேனை
நிதிக்குழு
அடித்தள முழுவளர்ச்சி சங்கம்
கத்தோலிக்க சேவா சங்கம்
பெண்கள் பணிக்குழு
வளர்ச்சிக் குழு
பாடகர் குழு
தணிக்கை குழு
வழிபாட்டுத் குழு
பங்கு அருட்பணிப் பேரவை
தகவல்கள் சேகரிப்பில் உதவி: ஆலய உறுப்பினர் திரு. ஆண்ட்ரு சேவியர் அவர்கள்.





