4. புதுச்சேரி திருஇருதய ஆண்டவர் பேராலயம்


புதுச்சேரி ரயில் நிலையத்தில் இறங்கியதும், கிழக்கே கம்பீரமாகத் தோற்றமளிக்கும் ‘தூய இதய ஆண்டவர் ஆலயம்’ பார்ப்போர் அனைவரையும் வசீகரிக்கும் நூற்றாண்டுப் பழமையுடையது.

நூற்றாண்டுப் பழமையுடைய தூய இதய ஆண்டவர் ஆலயங்கள் தமிழகத்தில் இடைக்காட்டூர், கொடைக்கானல், புதுக்கோட்டை போன்ற இடங்களில் இருக்கின்றன.

உலக நாடுகளில் தூய இதய ஆண்டவர் ஆலயங்கள் பெருவாரியாக எழுந்ததற்கும் ஒரு காரணமுண்டு. பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரிலுள்ள மோன்மார்த்ர் (Montmartre) மலையிலுள்ள தூய இதய ஆண்டவர் ஆலயத்தை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் இயேசுவின் தூய இதய பக்தி வளர்ச்சி பெற்றதாகக் கூறுவர். இதைத் தொடர்ந்து, தூய இதய ஆண்டவருக்கான ஆலயங்கள் பரவலாக எழுந்துள்ளன. இந்தப் பின்னணியிலேயே நம் நாட்டிலும் தூய இதய ஆண்டவர் ஆலயங்கள் தோன்றியுள்ளன.

புதுச்சேரி: திரு இருதய ஆண்டவர் பசிலிக்கா

புதுவையிலுள்ள இத்தூய இதய ஆண்டவர் ஆலயம் கட்டப்படுவதற்கு 1902 – இல் அடிக்கல் நடப்பட்டு ஆலயப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 1907 – இல் ஆலய இறக்கைப் பகுதியில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டுள்ளது. முழுமை அடையாமல் இருந்திருந்த கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று 1909 – இல் நிறைவு பெற்றுள்ளன. இவ்வாலய வரைபடத்தை வரைந்தவர் அருட்தந்தை. டெலஸ்போர் வெல்டர்(Rev.Fr. Telesphore Welter). இவர் புதுவை மறை மாவட்டத்தில் பல கோவில்களைக் கட்டி எழுப்பிய பெருமைக்குரியவர். இவர் இவ்வாலயப் பணிகள் நிறைவுற்ற நிலையில் 15.04.1909 இல் இறையடி சேர்ந்துள்ளார்.

1897-98 ஆண்டுகளிலேயே இக்கோவில் கட்டுவதற்கான வேலைகளைத் தொடங்கி இருந்தாலும், புதுவையில் அப்போது நிலவிய பஞ்சம், பணப் பற்றாக்குறை, இடம் முழுமையாகக் கிடைக்காத நிலை போன்ற பல காரணங்களால் இக்கோவில் கட்டுமானப்பணி 1902-இல் தாமதமாகத் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாலயம் இலத்தீன் சிலுவை வடிவமைப்பும், கோதிக் கட்டடக்கலைத் திறனும் கொண்டதாக உள்ளது. 50 மீட்டர் நீளமும், 48 மீட்டர் அகலமும், 18 மீட்டர் உயரமும் கொண்ட இவ்வாலயத்தை 24 மிகப்பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. ஆலயத்தில் உள்ள கண்ணாடி ஓவியங்கள் அழகானவை. புனிதர்கள் படங்களைச் சித்தரித்துள்ள அவைகளில் 14 முழு உருவப் படங்களும், 14 மார்பளவுப் படங்களும் உள்ளன. 2005 சுனாமி நேரத்தில் இக்கண்ணாடி ஓவியங்களில் சில சிதைந்துள்ளன.

ஆலயத்தின் நடுவிலுள்ள பீடம் தேக்கு மரத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இது போலவே இடது வலது இறக்கைப் பகுதிகளிலும் தலா மூன்று பீடங்கள் உள்ளன. மர வேலைப் பாடுகளுடன் கூடிய இப்பீடங்களை, அன்றைய திண்டிவனம் தொழிற்பயிற்சி மாணவர்கள் செய்துள்ளனர்.

இத்தகு சிறப்புகளைக் கொண்ட இவ்வாலயம், 2011-இல் போப்பாண்டவரால் “பசிலிக்கா” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமுதல் புதுவையின் முதல் பசிலிக்கா தேவாலயம் ஆயிற்று. தமிழகத்தில் வேளாங்கண்ணி, சென்னை சாந்தோம், பூண்டி மாதா, திருச்சி சகாயமாதா, தூத்துக்குடி பனிமயமாதா ஆகிய ஐந்து தேவாலயங்கள் பசிலிக்கா தரத்தில் உள்ளன. இப்போது புதுவை – தமிழக அளவில் இது ஆறாவதாக பேராலயமாக உயர்த்தப் பட்டுள்ளது.

நூற்றாண்டு விழாவின் போது புதுவை அரசு இவ்வாலயத்தைச் சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது.