25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு

        

வியாகுல மாதா ஆலயம்.

இடம்: வெள்ளிகோடு 

மாவட்டம் : கன்னியாகுமரி 

மறைமாவட்டம் : குழித்துறை 

மறைவட்டம் : முளகுமூடு

நிலை : பங்குத்தளம் 

கிளைப்பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்

பங்குத்தந்தை : அருட்பணி. மைக்கேல் அலோசியஸ் M. A.

குடும்பங்கள் : 627

அன்பியங்கள் : 20

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி: காலை 06:00 மணி

திங்கள், செவ்வாய், சனி திருப்பலி: காலை 06:15 மணி 

புதன் மாலை 06:00 மணி நவநாள் திருப்பலி

வெள்ளி மாலை 06:00 மணி திருப்பலி

இரண்டாம் சனி காலை 06:15 மணி சிறார் திருப்பலி

திருவிழா: செப்டம்பர் மாதத்தில் பத்து நாட்கள். 

மண்ணின் இறையழைத்தல்கள்:

1. ஆயர் மேதகு அந்தோணிமுத்து

2. அருட்பணி. மரிய அல்போன்ஸ்

3. அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர் 

4. அருட்பணி. டயஸ் ரெஜின், OCD

5. அருட்பணி. சுரேஷ்

6. அருட்பணி. Y. சுனில் ஆன்றோ, ஆப்பிரிக்கா

7. அருட்பணி. அபின் பிரைட், IC

1. அருட்சகோதரி. அனி 

2. அருட்சகோதரி. பேசில் றோஸ்

3. அருட்சகோதரி. மேரி ஷேர்லி

4. அருட்சகோதரி. பாத்திமா 

5. அருட்சகோதரி. பசிலி 

6. அருட்சகோதரி. ஜெயாமேரி 

7. அருட்சகோதரி. ஷீலா

8. அருட்சகோதரி. மேரி மெல்பா

9. அருட்சகோதரி. மார்ட்டீனாள் 

10. அருட்சகோதரி. ஜெசிலி 

11. அருட்சகோதரி. நெசியோனா மேரி

12. அருட்சகோதரி. விமலா ராணி 

13. அருட்சகோதரி. மேரி ஸ்டெல்லா பாய்

14. அருட்சகோதரி. மேரி ஆக்னஸ் 

15. அருட்சகோதரி. ஏஞ்சலின் சில்வியா 

16. அருட்சகோதரி. ஜெனி புஷ்பா 

17. அருட்சகோதரி. அபிதா லூக்காஸ் 

18. அருட்சகோதரி. ஜெயா

19. அருட்சகோதரி. பிலோமினாள்

20. அருட்சகோதரி. கவிதா

வழித்தடம்: நாகர்கோவில் -திருவனந்தபுரம் நெடுஞ்சாலையில், வெள்ளிகோடு புனித அந்தோனியார் குருசடியிலிருந்து இடது புறமாக சற்று தொலைவு சென்றால் இவ்வாலயத்தை அடையலாம். 

Location map : https://maps.app.goo.gl/KJhCZ3LWaWgd7C9z6

வரலாறு :

கி.பி முதலாம் நூற்றாண்டில் திருத்தூதர் புனித தோமையார் இந்தியாவில் கிறிஸ்துவின் நற்செய்தி விதையை தூவினார். அந்த நற்செய்தி விதை வெள்ளிகோட்டில் விழுந்து முளைத்ததற்கான சான்றுகள் உள்ளன. 

முற்காலத்தில் சர்வ வழிக்கோடு என்று அறியப்பட்ட இடத்தின் ஒரு பகுதியே இன்று வெள்ளிகோடு என அழைக்கப் படுகிறது. சர்வ மதத்தினரும் இணைந்து வழிபாடுகள் நடத்தியதால் இவ்விடத்திற்கு சர்வ வழிக்கோடு என பெயர் வந்ததாகவும் கூறப் படுகிறது. 

சர்வ வழிக்கோடு திப்பிலி பகவதி அம்மன் கோயில், தெப்பக்குளம் மற்றும் முக்கோண வடிவிலான குளம் இவற்றிற்கு கிழக்கே சிற்றாலயம் (அரைக்கோவில்) ஒன்றை புனித தோமையார் அமைத்து வழிபாடு நடத்தி உள்ளார். பின்னர் இங்கிருந்து திருவிதாங்கோடு மணி கிராமத்திற்கு நற்செய்தி அறிவிக்க சென்றதற்கான வரலாற்று சான்றுகள் வலுவாக உள்ளன. 

கி.பி 575 முதல் கி.பி 966 வரை நடைபெற்ற பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில், சடையவர்மன் செழியன் சேந்தன் என்ற கூன் பாண்டியன் முக்கியமான அரசன். (சமண சமயத்தை விட்டு சைவ சமயத்தை திருஞானசம்பந்தரால் தழுவிவினான்). இவனுடைய கூன் நீங்குவதற்கான யாகம் நடைபெற்றது. அப்போது யாகம் செய்வோருக்கு தைத்துவ விவாகம் என்ற பெயரில் பெண்ணை காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்து. அப்போது அரச சபையில் உயர் பதவியில் இருந்த தேவப்பா, ராஜப்பா என்பவர்களது தங்கையை தைத்துவ விவாகம் என்ற வழக்கத்தின்படி காணிக்கையாக கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்த போது, இதனை விரும்பாத இச் சகோதரர்கள் இருவரும் தங்கள் தங்கையை கொன்று விட்டு, அரசருக்குத் தெரியாமல் தப்பியோடி சர்வ வழிகோட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கியிருந்த பகுதி இன்று பாண்டியாமூடு என அழைக்கப் படுகிறது. அவ்வேளையில் கிறிஸ்தவம் தழுவியிருந்த பிராமணர்கள், அவர்கள் இருவரையும் ஆதரித்து தாங்கள் நடத்தி வரும் பாடசாலைக்கு ஆசிரியர்களாக்கினர். பின்னர் சகோதரர்கள் இருவரும் கிறிஸ்தவம் தழுவி, இங்கேயே தங்கி வாழ்ந்து வந்தனர். 

கி.பி 1516-இல் போர்த்துக்கீசிய மறைபோதகர்கள், தூய தோமையாரால் அமைக்கப்பட்ட சர்வ வழிக்கோடு ஆலயத்திற்கு வந்தனர். இந்த ஆலயமானது தூய விண்ணக அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டதாக பாரம்பரியங்கள் கூறுகின்றன. போர்த்துக்கீசிய மறை போதக குழுவைச் சேர்ந்த அருட்பணியாளர் ஒருவர் அங்கேயே தங்கி வழிபாடுகள் நடத்தி வந்தார். சுற்றி வாழ்ந்த மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து, அவர்களை கிறிஸ்துவில் இணைக்க, கிறிஸ்தவம் இப்பகுதியில் துளிர்விட்டு வளரத் துவங்கியது. 

கி.பி 1600 ஆம் ஆண்டில் கொல்லத்தில் நடைபெற்ற போரில் போர்த்துக்கீசிய படையினரிடம் தோல்வியைத் தழுவிய வீர கேரள மார்த்தாண்ட வர்மா மன்னன், தனது தலைநகரான திருவிதாங்கோட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் சர்வ வழிக்கோட்டிற்கு வந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள மக்கள் கிறிஸ்தவர்கள் ஆகியிருப்பதையும், அங்கு அமைந்திருந்த கிறிஸ்தவ ஆலயத்தில் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதையும் கண்டு, கடும் கோபமுற்றான். உடனே கிறிஸ்தவ ஆலயத்தை இடித்துத்தள்ள ஆணையிட்டான். மேலும் கிறிஸ்தவர்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கினான். கிறிஸ்தவம் கடும் சோதனைக்கு ஆளானதால், அங்கு பணியாற்றி வந்த அருட்பணியாளர் கொல்லத்திற்கு சென்றார். 

கி.பி 1738 -இல் இப்பகுதியைச் சேர்ந்த மல்லன் ஆசானின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா வெள்ளிக் கவசமும், வெள்ளி வெட்டுக் கத்தியும் கொடுத்து பெருமைப் படுத்தினார். அத்துடன் அந்தப் பகுதியை வெள்ளிகோடு என்றும் அறிவித்தார். இவ்வாறு சர்வ வழிக்கோடு 'வெள்ளிகோடு' எனப் பெயர் பெற்றது. 

கி.பி 1802 ஆம் ஆண்டில் பாலராம அரசனின் தளவாயாக இருந்த வேலுத்தம்பி தளவாய், ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக, கிறிஸ்தவர்களை எதிரிகளாகக் கருதினான். இதன் விளைவாக கோவில் விளையில் இருந்த ஆலயத்தையும், சுற்றி இருந்த கல்லறைகளையும் இடித்துத் தள்ளினான். 

அவ்வேளையில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமானது பாறைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்தது. இந்தப் பாறை மீது ஒரு சிறு குருசடி அமைக்கப்பட்டு தூய வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது. இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட பழைய ஆலயத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுரூபங்கள் அனைத்தும் புதிய குருசடியில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. 

குருசடியில் மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்லத் துவங்கியதால், நோயாளிகள் தங்குவதற்கு வசதியாக குருசடியின் வடபுறத்தில் சாவடி ஒன்று கட்டப்பட்டது. 

முளகுமூட்டில் ஆலயமும், அருட்சகோதரிகள் இல்லமும் அமைந்த பின்னர், அருட்சகோதரிகளும், அருட்பணியாளர்களும் வெள்ளிகோடு வந்து நற்செய்திப் பணியாற்றி, வழிபாடு நடத்தி வந்தனர். இவ்வாறு முளகுமூடு ஆலயத்தின் கிளைப்பங்காக வெள்ளிகோடு ஆனது. 

கி.பி 1935 இல் நாடெங்கும் பரவிய காலரா கொள்ளை நோய்க்கு, வெள்ளிகோட்டிலும் மக்கள் பலரும் மடிந்தனர். அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அசனம் என்னும் விருந்து வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க தீர்மானித்தனர். இதன் வழியாக நோய் நீங்கும் என நம்பினர். இவர்கள் நம்பியபடியே கொடிய நோய் நீங்கியது. அதன்பிறகு வருடந்தோறும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அசனம் நடத்தும் வழக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

அவ்வாறே கொடிய நோயிலிருந்து மக்கள் விடுபடவும், தூய செபஸ்தியார் சுரூபத்தை சுமந்து ஊரைச் சுற்றி பஜனை பாடல்கள் பாடி ஜெபித்து வர நோய் நீங்கியதால், இவ்வழக்கமும் இன்று வரை தொடர்ந்து வருகிறது. 

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, பாறை மீது அமைக்கப்பட்ட குருசடி ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால், புதிய ஆலயத் தேவையை உணர்ந்து பாறையை உடைத்து சமப்படுத்தினர். அவ்விடத்தில் 1946 ஆம் மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆலய கட்டுமானப் பணிக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், அப்போது முளகுமூடு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை S. T. மத்தியாஸ் அவர்கள் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டு, மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார். 

அனைவரின் நிதி மற்றும் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு, அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. வர்கீஸ் அவர்களின் முன்னிலையில், 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது. 

26.06.1968 அன்று வெள்ளிகோடு தனிப் பங்காக உயர்த்தப்பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. R. சவரிநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவர் 1969 ஆம் ஆண்டில் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணியைத் துவக்கினார். வெள்ளிகோட்டில் ஊருக்குள்ளே பல்வேறு சாலை வசதிகள் வர முயற்சிகள் மேற்கொண்டார். 

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. அகஸ்டின் அவர்கள் பள்ளி கட்டிட வேலையை நிறைவு செய்தார். மேலும் ஓடுகளால் கூரையமைக்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணியைத் தொடங்கி வைத்ததோடு, ஆலய பீடத்தை மாற்றியமைத்தார். 

அருட்பணி. M. மத்தியாஸ் அவர்கள் ஓடுகளால் கூரையமைக்கப்பட்ட கட்டிடத்தின் கட்டுமானப் பணியை நிறைவு செய்ததோடு, அதுவரை தொடக்கப் பள்ளியாக இருந்ததை, நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினார். 

1992 -ம் ஆண்டில் வெள்ளிகோடு பங்கின் வெள்ளிவிழா நினைவாக, அருட்பணி. A. மரியதாஸ் அவர்கள் கலையரங்கம் அமைத்தார். மேலும் சமூகச் சேவைச்சங்க கட்டிடம் அமைக்கப் பட்டது. 

அருட்பணி. பிரான்சிஸ் டி. சேல்ஸ் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் உள்ள நிலம் வாங்கப்பட்டு அதில் தூய லூர்து அன்னை கெபி கட்டப்பட்டது. அருட்பணியாளர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

அருட்பணி. ஜாண் அம்புரோஸ் பணிக்காலத்தில் அருட்பணியாளர் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது. 

அருட்பணி. ஜூலியஸ் அவர்களின் முயற்சியால் ஆலயச் சாலை நுழைவாயிலில், அழகிய அலங்கார வளைவு அமைக்கப் பட்டது. 

அருட்பணி. J. அகஸ்டின் பணிக்காலத்தில் ஆலய கொடிமரம் அமைக்கப் பட்டது. 

அருட்பணி. M. டேவிட் மைக்கேல் பணிக்காலத்தில் அரசு உதவி பெற்று, புதிய பள்ளிக்கூட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. பழைய பள்ளிக்கூட கட்டிடம் மண்டபமாக மாற்றப்பட்டது. 

அருட்பணி. இயேசுதாசன் தாமஸ் பணிக்காலத்தில் மண்டபத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. ஆலயத்திற்கான புதிய பாதை வாங்கப்பட்டது.

அருட்பணி.‌ A. S. ததேயு லியோன் ஜோஸ் பணிக்காலத்தில் மண்டபம் கீழ்தளம் புனரமைக்கப்பட்டு, மேல்தளம் புதிதாக கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் 15.03.2014 அன்று மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

அருட்பணி. லியோ அலெக்ஸ் பணிக்காலத்தில் தூய லூர்து மாதா கெபி, பாலர் வகுப்பு கட்டிடம் ஆகியன புதுப்பிக்கப்பட்டது. வியாகுலதீபம் மாத இதழ் வெளியீடு, குடில் திட்டம் வழியாக ஏழைக்கு வீடு கட்டி கொடுப்பது என பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுடன், மக்களின் ஆன்மீக தேவைகள் ஆழப்படுத்தப்பட்டு வலுவூட்டினார். இத்துடன் உதவிப் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்பணி. விஜின் மரியதாஸ் அவர்கள் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் துணையாக இருந்தார்.

பழைய ஆலயம் பழுதடைந்து இருந்ததாலும், போதிய இடவசதி இல்லாததாலும் அருட்பணி. ஆன்றூஸ் அவர்களின் வழிகாட்டுதலில், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், புதிய ஆலயத்திற்கு 28.04.2019 அன்று குழித்துறை மறைமாவட்ட ஆயர் மேதகு ஜெறோம்தாஸ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆலய நுழைவாயில் எதிர்ப்புறம் நன்கொடையாக நிலம் மற்றும் புனித அந்தோனியார் குருசடி கட்டப்பட்டு, 2020 டிசம்பர் 27-ஆம் தேதி பாளையங்கோட்டை மேனாள் ஆயர் ஜூடு பால்ராஜ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. மேலும் நற்கருணை சிற்றாலயம் மற்றும் புதிய பங்குத்தந்தை இல்லம் ஆகியன கட்டப்பட்டு, 2022 பிப்ரவரி 20-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. புதிய கொடிமரம் கட்டப்பட்டு 2022 செப்டம்பர் 14-ஆம் தேதி குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி. யேசுரெத்தினம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது. ஆலய சாலை விரிவுபடுத்தப்பட்டது. ஆலயம் கட்டுவதற்கு ஆலயத்தின் பின்புறம் நிலம் நன்கொடையாக பெறப்பட்டது. மேலும் ஆலயத்தின் முன்பக்கம் நிலம் விலைக்கு வாங்கப்பட்டது. கட்டிமுடிக்கப்பட்ட புதிய ஆலயம் 2023 மே 14-ஆம் தேதி சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு சூசை மாணிக்கம் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

05.06.2024 முதல் அருட்பணி. மைக்கேல் அலோசியஸ் அவர்கள் பங்கின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, சிறப்புற வழிநடத்தி வருகின்றார்.

வெள்ளிகோடு தனிப்பங்காக உயர்த்தப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சிகளை நோக்கி பயணிக்கிறது. பல்வேறு அருட்தந்தையர்களின் வழிகாட்டுதலில் வெள்ளிகோடு தலத்திருச்சபை இறையாட்சியை அமைக்கும் சீரிய பணியில் முழு வீச்சோடு செயல்பட்டு வருகிறது.

மரபுகளையும், பாரம்பரியங்களையும் தனக்குள் தக்க வைத்துக் கொள்ளும் இத்தலத்திருச்சபை மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்கும் தன்னை உட்படுத்தி வருகிறது. மாறிவரும் காலச் சூழலில் திருச்சபையின் போக்குக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக்கொள்கிற வெள்ளிகோடு தலத்திருச்சபை, சமூக பொருளாதார அரசியல் நிலைகளிலும் வளர்ச்சி பெற்று தன்னிறைவை நோக்கி நடைபயிலும் ஓர் இறையாட்சி சமூகமாக தன்னுடைய பயணத்தை தொடர்கிறது.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

பங்கு நிதிக்குழு

பங்குப்பேரவை

மறைக்கல்வி

சபை சங்க இயக்க ஒருங்கிணையம்

அன்பிய ஒருங்கிணையம்

வியாகுல தீபம் ஆசிரியர் குழு

அடித்தள முழுவளர்ச்சி சங்கம்

வழிபாட்டுக்குழு

பாலர் சபை

சிறார் இயக்கம்

இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கம்

கிராம முன்னேற்ற சங்கம்

மரியாயின் சேனை (ஆண்கள், பெண்கள், பாலர்)

வின்சென்ட் தே பவுல் சபை

திருஇருதய சபை

கத்தோலிக்க சேவா சங்கம்

கிறிஸ்தவ தொழிலாளர் இயக்கம்

பாடகர் குழு

பீடச்சிறார்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. அருட்பணி. R. சவரிநாதன் (1968-1970)

2. அருட்பணி. S. அகஸ்டின் (1970-1973)

3. அருட்பணி. M. L. அருள்சாமி (1973-1976)

4. அருட்பணி. M. மத்தியாஸ் (1976-1979)

5. அருட்பணி. A. சேவியர் ராஜா (1979-1982)

6. அருட்பணி. A. மரியதாஸ் (1982-1989)

7. அருட்பணி. M. ஆல்பர்ட் ராஜ் (1989-1990)

8. அருட்பணி. பிரான்சிஸ் D. சேல்ஸ் (1990-1992)

9. அருட்பணி. ஜாண் அம்புரோஸ் (1992-1993)

10. அருட்பணி. R. ஜாண் ஜோசப் (1993)

11. அருட்பணி. S. M. ஜூலியஸ் (1993-1998)

12. அருட்பணி. J. அகஸ்டின் (1998-2002)

13. அருட்பணி. M. டேவிட் மைக்கேல் (2002-2004)

14. அருட்பணி. T. இயேசுதாசன் தாமஸ் (2004-2009)

15. அருட்பணி. V. அருள்ராஜ் (2009)

16. அருட்பணி. J. சதீஷ்குமார் ஜாய் (2009-2011)

17. அருட்பணி. A. S. ததேயு லியோன் ஜோஸ் (2011- 2015)

18. அருட்பணி. A. லியோ அலெக்ஸ் (2015-2018)

19. அருட்பணி. ஆன்றூஸ் (2018-2024)

20. அருட்பணி. மைக்கேல் அலோசியஸ் M. A. (05.06.2024 முதல்…)

வரலாறு: பங்கின் குடும்ப கையேடு

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: பங்குத்தந்தை அருட்பணி. மைக்கேல் அலோசியஸ் அவர்களின் வழிகாட்டலில், திரு. சாம் அவர்கள்.