25 வியாகுல மாதா ஆலயம், வெள்ளிகோடு


வியாகுல மாதா ஆலயம்.

தூய வியாகுல மாதா ஆலயம்

இடம் : வெள்ளிகோடு.

மாவட்டம் : கன்னியாகுமரி
மறை மாவட்டம் : குழித்துறை
மறை வட்டம் : முளகுமூடு

நிலை : பங்குத்தளம்
கிளைப் பங்கு: தூய சூசையப்பர் ஆலயம், சூசைபுரம்.

குடும்பங்கள் : 623
அன்பியங்கள் : 19

ஞாயிறு திருப்பலி : காலை 06.00 மணிக்கு

நாள்தோறும் திருப்பலி : காலை 06.15 மணிக்கு

புதன் மாலை 05.30 மணிக்கு வியாகுலமாதா நவநாள், திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி மாலை 05.30 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி.

பங்குத்தந்தை (2018) : அருட்பணி. ஆண்ட்ரூஸ்.

திருவிழா : செப்டம்பர் மாதத்தில்.

Location map : https://maps.app.goo.gl/KJhCZ3LWaWgd7C9z6

வரலாறு :

கி.பி முதலாம் நூற்றாண்டில் திருத்தூதர் புனித தோமையார் இந்தியாவில் கிறிஸ்துவின் நற்செய்தி விதையை தூவினார். அந்த நற்செய்தி விதை வெள்ளிகோட்டில் விழுந்து முளைத்ததற்கான சான்றுகள் உள்ளன.

முற்காலத்தில் சர்வ வழிக்கோடு என்று அறியப்பட்ட இடத்தின் ஒரு பகுதியே இன்று வெள்ளிகோடு என அழைக்கப் படுகிறது. சர்வ மதத்தினரும் இணைந்து வழிபாடுகள் நடத்தியதால் இவ்விடத்திற்கு சர்வ வழிக்கோடு என பெயர் வந்ததாகவும் கூறப் படுகிறது.

சர்வ வழிக்கோடு திப்பிலி பகவதி அம்மன் கோயில், தெப்பக்குளம் மற்றும் முக்கோண வடிவிலான குளம் இவற்றிற்கு கிழக்கே சிற்றாலயம் (அரைக்கோவில்) ஒன்றை புனித தோமையார் அமைத்து வழிபாடு நடத்தி உள்ளார். பின்னர் இங்கிருந்து திருவிதாங்கோடு மணி கிராமத்திற்கு நற்செய்தி அறிவிக்க சென்றதற்கான வரலாற்று சான்றுகள் வலுவாக உள்ளன.

கி.பி 575 முதல் கி.பி 966 வரை நடைபெற்ற பாண்டியர்கள் ஆட்சிக் காலத்தில் சடையவர்மன் செழியன் சேந்தன் என்ற கூன் பாண்டியன் முக்கியமான அரசன். இவனுடைய கூன் நீங்குவதற்கான யாகம் நடைபெற்றது. அப்போது யாகம் செய்வோருக்கு தைத்துவ விவாகம் என்ற பெயரில் பெண்ணை காணிக்கையாகக் கொடுக்கும் வழக்கம் இருந்து. அப்போது அரச சபையில் உயர் பதவியில் இருந்த தேவப்பா, ராஜப்பா என்பவர்களது தங்கையை தைத்துவ விவாகம் என்ற வழக்கத்தின்படி காணிக்கையாக கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்த போது, இதனை விரும்பாத இச் சகோதரர்கள் இருவரும் தங்கள் தங்கையை கொன்று விட்டு, அரசருக்குத் தெரியாமல் தப்பியோடி சர்வ வழிகோட்டிற்கு வந்தனர். அவர்கள் தங்கியிருந்த பகுதி இன்று பாண்டியாமூடு என அழைக்கப் படுகிறது.

அவ்வேளையில் கிறிஸ்தவம் தழுவியிருந்த பிராமணர்கள், அவர்கள் இருவரையும் ஆதரித்து தாங்கள் நடத்தி வரும் பாடசாலைக்கு ஆசிரியர்களாக்கினர். பின்னர் சகோதரர்கள் இருவரும் கிறிஸ்தவம் தழுவி இங்கேயே தங்கி வாழ்ந்து வந்தனர்.

கி.பி 1516 ல் போர்த்துக்கீசிய மறைப் போதகர்கள், தூய தோமையாரால் அமைக்கப்பட்ட சர்வ வழிக்கோடு ஆலயத்திற்கு வந்தனர். இந்த ஆலயமானது தூய விண்ணக அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. போர்த்துக்கீசிய மறை போதக குழுவைச் சேர்ந்த அருட்பணியாளர் ஒருவர் அங்கேயே தங்கி வழிபாடுகள் நடத்தி வந்தார். சுற்றி வாழ்ந்த மக்களுக்கு கிறிஸ்தவ மறையைப் போதித்து அவர்களை கிறிஸ்துவில் இணைக்க, கிறிஸ்தவம் இப்பகுதியில் துளிர் விட்டு வளரத் துவங்கியது.

கி.பி 1600 ஆம் ஆண்டில் கொல்லத்தில் நடைபெற்ற போரில் போர்த்துக்கீசிய படையினரிடம் தோல்வியைத் தழுவிய வீர கேரள மார்த்தாண்ட வர்மா மன்னன், தனது தலைநகரான திருவிதாங்கோட்டிற்கு திருப்பிக் கொண்டிருக்கும் வழியில் சர்வ வழிக்கோட்டிற்கு வந்தார். அப்போது இப்பகுதி மக்கள் கிறிஸ்தவர்களாகி ஆலயம் அமைத்து, வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுவதையும் கண்டு, கோபமுற்று உடனே கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து தள்ள ஆணையிட்டான். மேலும் கிறிஸ்தவர்களை கடும் இன்னல்களுக்கு ஆளாக்கினான். கிறிஸ்தவம் கடும் சோதனைக்கு ஆளானதால், அங்கு பணியாற்றி வந்த அருட்பணியாளர் கொல்லத்திற்கு சென்றார்.

கி.பி 1738 இல் இப்பகுதியைச் சேர்ந்த மல்லன் ஆசானின் வீரத்தைப் பாராட்டி அவருக்கு, மன்னர் உதய மார்த்தாண்ட வர்மா வெள்ளிக் கவசமும், வெள்ளி வெட்டுக் கத்தியும் கொடுத்து பெருமைப் படுத்தினார். அத்துடன் அந்தப் பகுதியை வெள்ளிகோடு என ஆக்கினார். இவ்வாறு சர்வ வழிக்கோடு வெள்ளிகோடு ஆனது.

கி.பி 1802 ஆம் ஆண்டில் பாலராம அரசனின் தளவாயாக இருந்த வேலுத்தம்பி தளவாய், ஆங்கிலேயர் மீது கொண்ட வெறுப்பின் காரணமாக, கோவில் விளையில் இருந்த ஆலயத்தையும், கல்லறைகளையும் இடித்துத் தள்ளினான்.

அவ்வேளையில் தற்போது ஆலயம் அமைந்துள்ள இடமானது பாறைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்தது. இந்தப் பாறை மீது ஒரு சிறு குருசடி அமைக்கப்பட்டு தூய வியாகுல அன்னைக்கு அர்ப்பணிக்கப் பட்டது. சேதப்படுத்தப்பட்ட பழைய ஆலயத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுரூபங்கள் ஒப்படைக்கப்பட்டு குருசடியில் வைக்கப் பட்டன.

குருசடியில் மக்கள் வந்து ஜெபித்து நலம் பெற்றுச் செல்லத் துவங்கியதால், நோயாளிகள் தங்குவதற்கு சாவடி ஒன்று கட்டப்பட்டது.

முளகுமூட்டில் ஆலயமும் அருட்சகோதரிகள் இல்லமும் அமைந்த பின்னர், அருட்சகோதரிகளும், அருட்பணியாளர்களும் இங்கு வந்து நற்செய்திப் பணியாற்றி, வழிபாடு நடத்தி வந்தனர். இவ்வாறு முளகுமூடு ஆலயத்தின் கிளைப் பங்காக வெள்ளிகோடு ஆனது.

கி.பி 1935 இல் நாடெங்கும் பரவிய காலரா கொள்ளை நோய்க்கு, வெள்ளிகோட்டிலும் மக்கள் பலரும் மடிந்தனர். அப்போது ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி அசனம் என்னும் விருந்து வைத்து ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்க தீர்மானித்தனர். இதன் வழியாக நோய் நீங்கும் என நம்பினர். இவர்கள் நம்பியபடியே கொடிய நோய் நீங்கியது. அதன்பிறகு வருடந்தோறும் ஊர் மக்கள் ஒன்றிணைந்து அசனம் நடத்தும் வழக்கம் தொடர்ந்து வருகிறது.

அவ்வாறே கொடிய நோயிலிருந்து மக்கள் விடுபட தூய செபஸ்தியார் சுரூபத்தை சுமந்து ஊரைச் சுற்றி பஜனை பாடல்கள் பாடி ஜெபித்து வர நோய் நீங்கியதால், இவ்வழக்கமும் இன்று வரை தொடர்ந்து வருகிறது.

மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே பாறை மீது அமைக்கப்பட்ட குருசடி ஆலயத்தில் போதிய இடவசதி இல்லாததால் புதிய ஆலயத் தேவையை உணர்ந்து பாறையை உடைத்து சமப் படுத்தினர். அவ்விடத்தில் 1946 ஆம் மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் புதிய ஆலயத்திற்கு அடிக்கல் போடப் பட்டது. ஆலய கட்டுமானப் பணிக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டதால், முளகுமூடு பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை S. T. மத்தியாஸ் அவர்கள் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டு, மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்தார்.

அனைவரின் நிதி மற்றும் ஒத்துழைப்புடன் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு அப்போதைய பங்குத்தந்தை அருட்பணி. வர்கீஸ் அவர்களின் முன்னிலையில், 1962 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் மேதகு ஆயர் T. R. ஆஞ்ஞிசாமி அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

26.06.1968 அன்று வெள்ளிகோடு தனிப் பங்காக உயர்த்தப் பட்டு, முதல் பங்குத்தந்தையாக அருட்பணி. R. சவரிநாதன் அவர்கள் பொறுப்பேற்றார்கள்.

1969 ஆம் ஆண்டில் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்கும் பணியைத் துவக்கினார். வெள்ளிகோட்டில் ஊருக்குள்ளே பல்வேறு சாலை வசதிகள் வர முயற்சிகள் மேற்கொண்டார்.

தொடர்ந்து பொறுப்பேற்ற அருட்பணி. அகஸ்டின் அவர்கள் பள்ளி கட்டிட வேலையை நிறைவு செய்தார். ஆலய பீடத்தை மாற்றியமைத்தார்.

அருட்பணி. M. மத்தியாஸ் பணிக்காலத்தில் தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக உயர்த்தினார்.

1992 ம் ஆண்டில் வெள்ளிகோடு பங்கின் வெள்ளிவிழா நினைவாக அருட்பணி. A. மரியதாஸ் அவர்கள் கலையரங்கம் அமைத்தார். மேலும் சமூகச் சேவை சங்க கட்டிடம் அமைக்கப் பட்டது.

அருட்பணி. பிரான்சிஸ் டி. சேல்ஸ் பணிக்காலத்தில் ஆலயத்தின் முன்புறம் உள்ள நிலம் வாங்கப்பட்டு, தூய லூர்து அன்னை கெபி கட்டப் பட்டது. அருட்பணியாளர் இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அருட்பணி. ஜான் அம்புறோஸ் பணிக்காலத்தில் அருட்பணியாளர் இல்லம் கட்டி முடிக்கப்பட்டது.

அருட்பணி. ஜூலியஸ் அவர்களின் முயற்சியால் ஆலயச் சாலை நுழைவாயிலில் அழகிய அலங்கார வளைவு அமைக்கப் பட்டது.

அருட்பணி. J. அகஸ்டின் பணிக்காலத்தில் ஆலய கொடிமரம் அமைக்கப் பட்டது.

அருட்பணி. M. டேவிட் மைக்கேல் பணிக்காலத்தில் அரசு உதவி பெற்று புதிய பள்ளிக்கூட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. பழைய பள்ளிக்கூட கட்டிடம் மண்டபமாக மாற்றப் பட்டது.

அருட்பணி. இயேசுதாசன் தாமஸ் பணிக்காலத்தில் மண்டபத்திற்கு புதிய கட்டிடம் கட்டப் பட்டது.

அருட்பணி. லியோ அலெக்ஸ் பணிக்காலத்தில் மண்டப மேல்தளம் போடப்பட்டது. தூய லூர்து மாதா கெபி, பாலர் வகுப்பு கட்டிடம் ஆகியன புதுப்பிக்கப் பட்டது. வியாகுலதீபம் மாத இதழ் வெளியீடு, குடில் திட்டம் வழியாக ஏழைக்கு வீடு கட்டி கொடுப்பது என பல்வேறு வளர்சித் திட்டங்களுடன், மக்களின் ஆன்மீக தேவைகள் ஆழப்படுத்தப்பட்டு வலுவூட்டினார். இத்துடன் உதவிப் பங்குத்தந்தையாக பணிபுரிந்த அருட்பணி. விஜின் மரியதாஸ் அவர்கள் அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்கும் துணையாக இருந்தார்.

தற்போது பங்குத்தந்தை அருட்பணி. ஆண்ட்ரூஸ் அவர்களின் வழிகாட்டுதலில், பங்கு மக்களின் ஒத்துழைப்புடன், புதிய ஆலயத்திற்கு 28.04.2019 அன்று அருட்பணி. மரிய இராஜேந்திரன் (முளகுமூடு மறை வட்ட முதல்வர்) அவர்கள் முன்னிலையில், குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஜெறோம்தாஸ் அவர்களால் அடிக்கல் போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மரபுகளையும், பாரம்பரிங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள இத்தலத் திருச்சபை மாற்றங்களுக்கும் மறுமலர்ச்சிக்கும் தன்னை உட்படுத்தி வருகிறது.

மண்ணின் மைந்தர்கள் :

1. ஆயர் மேதகு அந்தோணிமுத்து
2. அருட்பணி. மரிய அல்போன்ஸ்
3. அருட்பணி. ஒய்ஸ்லின் சேவியர்
4. அருட்பணி. டயஸ் ரெஜின் OCD
5. அருட்பணி. சுரேஷ்

1. அருட்சகோதரி. அனி
2. அருட்சகோதரி. பேசில் றோஸ்
3. அருட்சகோதரி. மேரி ஷேர்லி
4. அருட்சகோதரி. பாத்திமா
5. அருட்சகோதரி. பசிலி
6. அருட்சகோதரி. ஜெயாமேரி
7. அருட்சகோதரி. ஷீலா
8. அருட்சகோதரி. மேரி மெல்பா
9. அருட்சகோதரி. மார்ட்டீனாள்
10. அருட்சகோதரி. ஜெசிலி
11. அருட்சகோதரி. நெசியோனா மேரி
12. அருட்சகோதரி. விமலா ராணி
13. அருட்சகோதரி. மேரி ஸ்டெல்லா பாய்
14. அருட்சகோதரி. மேரி ஆக்னஸ்
15. அருட்சகோதரி. ஏஞ்சலின் சில்வியா
16. அருட்சகோதரி. ஜெனி புஷ்பா
17. அருட்சகோதரி. அபிதா லூக்காஸ்
18. அருட்சகோதரி. ஜெயா
19. அருட்சகோதரி. பிலோமினாள்
20. அருட்சகோதரி. கவிதா

பங்கில் பணிபுரிந்த பங்குத்தந்தையர்கள் :
1. அருட்பணி. R. சவரிநாதன் (1968-1970)
2. அருட்பணி. S. அகஸ்டின் (1970-1973)
3. அருட்பணி. M. L. அருள்சாமி (1973)
4. அருட்பணி. M. மத்தியாஸ் (1976)
5. அருட்பணி. A. சேவியர் ராஜா (1979)
6. அருட்பணி. A. மரியதாஸ் (1982-1989)
7. அருட்பணி. M. ஆல்பர்ட் ராஜ் (1989-1990)
8. அருட்பணி. பிரான்சிஸ் டி. சேல்ஸ் (1990-1992)
9. அருட்பணி. ஜான் அம்புறோஸ் (1992-1993)
10. அருட்பணி. R. ஜான் ஜோசப் (1993)
11. அருட்பணி. S. M. ஜூலியஸ் (1993-1998)
12. அருட்பணி. J. அகஸ்டின் (1998-2002)
13. அருட்பணி. M. டேவிட் மைக்கேல் (2002-2004)
14. அருட்பணி. இயேசுதாசன் தாமஸ் (2004-2009)
15. அருட்பணி. V. அருள்ராஜ் (2009)
16. அருட்பணி. சதீஷ்குமார் ஜாய் (2009-2011)
17. அருட்பணி. A. S. ததேயு லியோன் ஜோஸ் (2011- 2014)
18. அருட்பணி. லியோ அலெக்ஸ் ( 2014-2018)
19. அருட்பணி. ஆண்ட்ரூஸ் (2018 முதல் தற்போது வரை)

வரலாறு : வியாகுல தீபம் இதழ்.