459 புனித செசிலி ஆலயம், RC பேட்டப்பாளையம்


புனித செசிலி ஆலயம்

இடம் : RC பேட்டப்பாளையம், பேட்டப்பாளையம் அஞ்சல், மோகனூர் வட்டம், நாமக்கல் மாவட்டம், 637015.

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : நாமக்கல்

நிலை : பங்குத்தளம்
கிளைப்பங்குகள் :
1. புனித செல்வநாயகி மாதா ஆலயம், மோகனூர்
2. புனித செபஸ்தியார் ஆலயம், புதுத்தெரு, மோகனூர்
3. புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், மணியங்காளிப்பட்டி.

பங்குத்தந்தை : அருட்பணி. பிரகாஷா

குடும்பங்கள் : 80
அன்பியங்கள் : 5

திருப்பலி நேரங்கள் : 

ஞாயிறு : காலை 08.30 மணிக்கு திருப்பலி.

வாரநாட்கள் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

செவ்வாய் : மாலை 06.30 மணிக்கு புனித செபஸ்தியார் நவநாள் திருப்பலி.

வியாழன் : மாலை 06.30 மணிக்கு குழந்தை இயேசு நவநாள் திருப்பலி.

வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திரு இருதய ஆண்டவர் நவநாள் திருப்பலி.

சனி : மாலை 06.30 மணிக்கு புனித சகாய மாதா நவநாள் திருப்பலி.

திருவிழா : புனித செசிலி (பங்குத்திருவிழா) நவம்பர் மாதம் 22 -ம் தேதி.

புனித செபஸ்தியார் ஆண்டுப் பெருவிழா சாம்பல் புதன் முந்தைய வார செவ்வாய்.

மண்ணின் மைந்தர்கள் :
1.அருட்பணி. A. எட்வர்ட் ராஜன், RC செட்டிப்பட்டி
2. அருட்பணி. செ. விக்டர் அந்தோணிராஜ், ச.ச, சென்னை
3. அருட்பணி. தேவசகாயம், ச.ச, சென்னை
4. அருட்பணி. அ. எஸ்ரோன், இத்தாலி
5. அருட்பணி. A. அசோக் குமார் (late)
6. அருட்பணி. ஸ்டீபன் சொரூபன், மூவேந்தர் கலைக்குழு, சேலம்
7. அருட்சகோதரர். செ. ஜான்சன், கோவை

அருட்சகோதரிகள் :
1. அருட்சகோ. சூசைமேரி (late)
2. அருட்சகோ. பசிலிக்கா (late)
3. அருட்சகோ. தனிஸ்லாஸ் (late)
4. அருட்சகோ. வேளாங்கண்ணி (late)
5. அருட்சகோ. பிரான்சிஸ்கா (late)
6. அருட்சகோ. மேரி புஷ்பம்
7. அருட்சகோ. ஜெசிந்தா
8. அருட்சகோ. புஷ்பம்
9. அருட்சகோ. ஆலிஸ் ஸ்டெல்லா மேரி.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. T. C. தாமஸ் (1975-1983)
2. அருட்பணி. பிரான்சிஸ் சேவியர் (1983-1985)
3. அருட்பணி. D. A. பிரான்சிஸ் (1985-1989)
4. அருட்பணி. ஜோசப் (1989-1994)
5. அருட்பணி. S. செபாஸ்டியன் (1994-1998)
6. அருட்பணி. பீட்டர் பிரான்சிஸ் (1998-2001)
7. அருட்பணி. T. ஜான் கென்னடி (2001-2006)
8. அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி (2006-2008)
9. அருட்பணி. S. ஜான் ஜோசப் (2008-2010)
10. அருட்பணி.மரிய பாக்கியம், சே.ச (2010-2011)
11. அருட்பணி. கோபி இம்மானுவேல் (2012-2013)
12. அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் (2013-2016)
13. அருட்பணி. பிரகாஷா (2016 முதல் தற்போது வரை.)

வழித்தடம் : நாமக்கல்லில் இருந்து மோகனூர்- ப.வேலூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் சர்க்கரை ஆலை- வண்டிகேட் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். அங்கிருந்து 500மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

நாமக்கல்லில் இருந்து 20 கி.மீ தூரத்தில் தெற்கிலும், வேலூரில் இருந்து 16 கி.மீ தூரத்தில் தெற்கிலும், கரூரில் இருந்து 15 கி.மீ தூரத்தில் வடக்கிலும் இவ்வாலயம் அமைந்துள்ளது.

நாமக்கல்- மோகனூர்- வண்டிகேட்- RC பேட்டப்பாளையம்.

வரலாறு :

காவேரி கரையில் இயற்கை எழிலின் அழகிய சோலைகளின் மத்தியில் எழிலுற அமைந்துள்ளது RC பேட்டப்பாளயம் புனித செசிலி ஆலயம். சேலம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயம், சுமார் 95 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். இப்பங்கு, தனிப் பங்காக உயர்த்தப்படுவதற்கு முன்பு, நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் கிளைப் பங்காகவும், கொசவம்பட்டி புனித சவேரியார் ஆலயத்தின் கிளைப் பங்காகவும் செயல்பட்டு வந்தது.

முதலில், தற்போதைய ஆலயம் அமைந்துள்ள இடத்தில், பழைய ஆலயமானது ஓடு கூரையாக அமைத்து, கற்களால் கட்டப்பட்டு புனித செசிலி அன்னையை பாதுகாவலராகக் கொண்டு இறைவனை வழிபட்டு வந்தனர். இவ்வாலயம் அமைந்துள்ள இடம் 15 ஏக்கர் நிலமாகும். இவ்விடத்தில் புனித செசிலி நடுநிலைப்பள்ளி உள்ளது. இதுவே, இவ்விடத்தில் கட்டப்பட்ட முதல் பள்ளிக்கூடம். இவ்வாலயத்திற்கு அருகில்தான் அரசின் மிகப்பெரிய சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது.

முதலில், இங்கு அனைத்து சமய சமூக மக்கள் வாழ்ந்து வந்தார்கள். பின்னர், இவ்விடத்தில் கிறிஸ்தவம் மலரவே, மக்கள் அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப இடமாறினார்கள். இங்கு, கீழப்பேட்டப்பாளையம், RC பேட்டப்பாளையம், மேலப்பேட்டப்பாளையம் என மூன்று பேட்டப்பாளையங்கள் உள்ளன. RC பேட்டப்பாளையத்தில் தான் கிறிஸ்தவ மக்கள் குடியேறினார்கள்.

பங்குத்தந்தையரின் அறிவுறுத்தலின்படி மக்கள் அனைவரும் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் குடியேறினர்.

1998 ம் ஆண்டில் அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. செபஸ்தியான் அவர்கள், ஆலயத்தில் மாதா கெபி ஒன்றை கட்டினார். பயனில்லாத இடத்தையும் சுத்தம் செய்து இளையோர் விளையாட்டு மைதானம் அமைத்தார். பிறகு, அவருடைய முயற்சியால் கிளைப்பங்கான புதுத்தெருவில் புனித செபஸ்தியார் குருசடி அமைக்கப்பட்டது. இவர், பங்கு மாணவர்களின் பள்ளி, கல்லூரி மேற்படிப்பிற்காக பெரிதும் உறுதுணையாக இருந்தார். கல்விமேம்பாடு என்பது இவரின் முக்கிய செயல் திட்டமாகும்.

தொடர்ந்து அருட்பணி. த. ஜான் கென்னடி அவர்களின் பணிக்காலத்தில், ஆலயத்தை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டு, 2004 -ம் ஆண்டில் ஆலயத்திற்கு அஸ்திவாரம் போடப்பட்டு, பங்குமக்களின் அயராது உழைப்பினாலும், நன்கொடையாளர்களின் உதவியாலும், பங்குத்தந்தையின் விடாமுயற்சியாலும் ஆலயம் கட்டப்பட்டு, மேலும் புனித செசிலி நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறைகளும், கட்டடங்களும் கட்டிமுடிக்கப்பட்டு ஆலயமும் பள்ளியும் 11.01.2006 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப் பட்டது.

2006-2008 ஆண்டுகளில் பணியாற்றிய அருட்பணி. பிரான்சிஸ் ஆசைத்தம்பி அவர்கள் முயற்சியில் மக்களின் ஒத்துழைப்புடன் கிளைப்பங்கான மணியங்காளிப்பட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் கட்டப்பட்டது. மேலும் அனைத்து இளைஞர்களையும் ஒன்றிணைத்து குழு ஒன்றை அமைத்தார்.

2008-2010 ஆண்டுகளில் பணியாற்றிய அருட்பணி. ஜான் ஜோசப் அடிகளார் புனித செபஸ்தியாருக்கு கெபி ஒன்றை அமைத்தார். அன்பியங்கள் அமைத்து, அதன் வாயிலாக மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியும் திருவிழாத்திருப்பலி போல் நடத்தப்பட்டது. பங்குமக்களின் ஆலயத்திற்கான பங்களிப்பை ஏற்படுத்துவதற்காக 'என் பங்கிற்கு என்னால்', "குடும்ப அட்டை" ஒன்றை ஏற்படுத்தி அதில் வரும் சந்தாவை பங்கிற்கு பொருளாதார வகையில் கிடைக்கப்பெற்றதை பெரிய தொகையினை சேமித்து வைத்தார். அத்தொகையே இப்பங்கின் வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் முதுகெலும்பாக உதவியது.

பின்னர், 2010-2011ஆண்டு காலக்கட்டத்தில் இயேசு சபையில் இருந்து மாற்றுப்பணிக்காக இப்பங்கிற்கு பணிபுரிய வந்த அருட்பணி. மரிய பாக்கியம், சே.ச அவர்கள் ஆனந்த ரெட்டியார் கல்லறைக்கு மக்கள் வருவதைக்கண்டு அங்கு மேற்கூரை ஒன்றை நிறுவினார். பின்னர், மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்களை ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் கொள்ள வைத்தார்.

2012-2013 ஆண்டில் பணியாற்றிய அருட்பணி. கோபி இம்மானுவேல் அவர்கள் மக்களை ஆன்மீகத்தில் வளரச்செய்தார்.

தொடர்ந்து 2013-2016 ம் ஆண்டு காலக்கட்டத்தில் பணியாற்றிய அருட்பணி. செல்வம் பிரான்சிஸ் சேவியர் அவர்களால் ஆலயத்திற்கு தேக்கு மரத்திலான சுமார் 20 இருக்கைகளும், இரு அழகிய தேர்களும் செய்யப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்பட்டு வருகிறது. தேக்கு மரங்கள் அனைத்தும் ஆலயத் தோட்டத்தில் இருந்து வெட்டப்பட்டன. பங்கு இளைஞர்களை ஒன்று கூட்டி 2015 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 'செசிலியா இளையோர் குழு' ஏற்படுத்தினார். இயேசுவின் கண்மணிகள் இயக்கத்தையும் அமைத்தார். கிளைப்பங்கான மோகனூர் புனித செல்வநாயகி மாதா ஆலயமானது, 2015-2016ம் ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டு, 7 மாதா சொரூபங்களை தாங்கிய அழகிய கெபி ஒன்றையும் கட்டி, மே மாதம் சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப் பட்டது. மற்றொரு கிளைப்பங்கான புதுத்தெருவில் புதிய ஆலயம் கட்ட பெரிதும் உதவினார். அங்கு ஆலயம் எழுப்புவதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த வகையில் தந்தை அவர்கள் சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டு வெற்றி கண்டார்.

பிறகு, 2016 முதல் தற்போதையை பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா அவர்கள் கிளைப்பங்கான புதுத்தெருவில் ஆலய கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, 10.10.2017 அன்று சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு. செ. சிங்கராயன் அவர்களால் அர்ச்சித்துப் புனிதப்படுத்தப் பட்டது.

2017-ம் ஆண்டு முதல் மே- மாதம் வணக்கமாதா பெருவிழா, செப்டம்பர்- தேவமாதா பிறப்பு பெருவிழாவிற்கும், கிறிஸ்து பிறப்பு பெருவிழாவிற்கும் சிறப்பு செய்யும் விதமாக பங்கு இளையோர்கள், பாடற்குழு, இயேசுவின் கண்மணிகள் இணைந்து தேர் இழுத்து சிறப்பு செய்து வருவர். மேலும், ஆலயத்தை அழகுபடுத்தும் விதத்தில் தன்னார்வலர்கள், இளையோர்கள் இணைந்நு 2018 -ம் ஆண்டில் ஆலயத்தைச்சுற்றி பல்வேறு மரக்கன்றுகள், பூச்செடிகள் நடப்பட்டன.

தற்போதைய பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா அவர்கள் மக்களை ஆன்மீகப் பாதையில் வழிநடத்திச் செல்கின்றார்.

சிறப்பு : இப்பங்கில் ஆனந்த ரெட்டியார் அவர்கள் பங்கிற்கு பணிபுரிய வந்த அருட்பணியாளர்களுக்கு சமையல் செய்து கொடுத்து வந்தார். திடீரென்று இவருக்கு மரணம் நெருங்கவே, இறந்து போனார். இவரின் உடல் பங்குத்தந்தையரின் இல்லத்திற்கு பின்னால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வேண்டுதலை கூறி ஜெபிக்க, வேண்டுதல் நிறைவேறுவதால் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது.

புனித செபஸ்தியார் விழா வரலாறு :

பல ஆண்டுகளுக்கு முன்னர் தொற்றுநோய் இப்பகுதியில் வந்தவுடன் மக்கள் புனித செபஸ்தியாரிடம் வேண்டி, நான்கு இடத்தில் மேடை அமைத்து செபித்துள்ளனர். அருகில் இருந்த ஊர்களில் மக்கள் நோயினால் அவதி அடைந்துள்ள நிலையில், இந்த ஊரில் மட்டுமே நோய் வராமல் புனித செபஸ்தியார் பாதுகாத்தார் என்று அவருக்கு வருடந்தோறும் சிறப்பாக மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடி வருகின்றனர். இந்த அதிசயத்தை கண்டு பிறமதத்தைச் சேர்ந்த மக்களும் புனித செபஸ்தியாரை இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

பங்கின் பள்ளிக்கூடம் : புனித செசிலி நடுநிலைப்பள்ளி.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
1. பங்குப்பேரவை
2. மரியாயின் சேனை
3. செசிலியா இளையோர் குழு
4. இயேசுவின் கண்மணிகள்
5. பாடற்குழு.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்பணி. பிரகாஷா அவர்களின் வழிகாட்டுதலில் செசிலியா இளையோர் குழு மற்றும் பாடகற்குழுவினர்.