575 புனித அந்தோனியார் திருத்தலம், புளியம்பட்டி

           
புனித அந்தோணியார் திருத்தலம் 

இடம் : புளியம்பட்டி 

மாவட்டம் : தூத்துக்குடி 

மறைமாவட்டம் : பாளையங்கோட்டை

மறைவட்டம் : கோவில்பட்டி

முகவரி மற்றும் தொடர்பு எண் :

St. Anthony's Shrine

Naraikinaru, 1, Via, Puliayampatti, Thoothukudi, 628303

0461 227 3223

நிலை : திருத்தலம் 

கிளைப்பங்குகள் :

1. புனித சவேரியார் ஆலயம், கல்லத்திக்கிணறு

2. புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், பொட்டல்நகர்

3. புனித செபமாலை அன்னை ஆலயம், கீ. கைலாசப்புரம் 

4. புனித யோவான் ஆலயம், குப்பக்குறிச்சி 

5. புனித அருளானந்தர் ஆலயம், சீவலப்பேரி 

6. புனித செபஸ்தியார் ஆலயம், மடத்துப்பட்டி 

7. புனித அந்தோணியார் ஆலயம், புங்கனூர் 

8. புனித சவேரியார் ஆலயம், சந்தைப்பேட்டை.

திருத்தல அதிபர் & பங்குத்தந்தை : அருள்பணி. பா. மரிய பிரான்சிஸ் 

உதவிப் பங்குத்தந்தை : அருள்பணி. அல்போன்ஸ்

குடும்பங்கள் : 35

அன்பியங்கள் : 2

வழிபாட்டு நேரங்கள் :

ஞாயிறு திருப்பலி : காலை 07.30 மணி மற்றும் 11.45 மணி. 

திங்கள் திருப்பலி : காலை 05.45 மணி மற்றும் காலை 07.00 மணி. 

செவ்வாய் திருப்பலி : காலை 05.45 மணி, காலை 11.45 மணி, மாலை 06.30 மணி. 

புதன் திருப்பலி : காலை 04.30 மணி,  காலை 05.45 மணி. 

வியாழன், வெள்ளி, சனி திருப்பலி : காலை 05.45 மணி. 

வெள்ளி மற்றும் ஞாயிறு மாலை 07.00 மணிக்கு நற்கருணை ஆசீர். 

அரசு விடுமுறை நாட்களில் காலை 11.45 மணி மற்றும் மே மாதம் முழுவதும் காலை 11.45 மணிக்கு திருப்பலி. 

செவ்வாய்க்கிழமை மாலையில் நோயாளிகளுக்கான சிறப்பு குணமளிக்கும் வழிபாடு. 

திருவிழா : ஜனவரி 30 ஆம் தேதி கொடியேற்றம் பெப்ரவரி 11 -ஆம் தேதி பெருவிழா (தை மாதம் கடைசி செவ்வாய்) .

மண்ணின் இறையழைத்தல்:

அருள்சகோதரி. C. ஞான செல்வம்

Church facebook link : 

https://m.facebook.com/puliampattianthony.org/

Location map : https://maps.app.goo.gl/EfKM6RLfTKtoGuw8A

வரலாறு :

கி.பி. 17 -ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சிவகாசிக்கு அருகில் உள்ள கிளவிப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இராமன், இலட்சுமணன் என்ற இரு சகோதரர்கள் பிழைப்புத் தேடி தங்கள் மாட்டு மந்தையோடு நாரைக் கிணறு வந்தார்கள். அங்கு ஊர்த்தலைவர் கொடுத்த தொல்லைகள் காரணமாக மணியாச்சி ஜமீன்தார் உதவியோடு புளியம்பட்டியில் குடியமர்ந்தனர். 

இந்தக் குடும்பங்கள் பல்கி பெருகிய காலகட்டத்தில் பொத்தக்காலன்விளை (தூத்துக்குடி மறைமாவட்டம்) ஊரைச் சேர்ந்த கிறித்தவர் மரிய அந்தோனி தொம்மை என்பவர், தமது உடன் பிறந்தோரின் தவறான போக்கினால் மனம் நொந்து சொந்த ஊரில் வாழ விருப்பமின்றி புளியம்பட்டிக்கு வந்திருந்தார். இங்கே ஏற்கனவே வாழ்ந்து வந்த சிவகாசி கிளவிப்பட்டிக் குடும்பத்தில் திருமணம் முடித்துக் கொண்டு ஜமீன்தாரின் பண்ணைகளில் தொழில் செய்து வந்தார். ஓரளவு வருவாயும், வசதியும் பெருகியது. எந்த நிலையிலும் உண்மையான கிறிஸ்தவராக வாழ வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். கத்தோலிக்கத் திருச்சபையின் மீது கொண்டிருந்த பற்றினால் செபிப்பதற்கும் திருப்பலியில் பங்கு பெறுவதற்கும் சீவலப்பேரிக்கு அருகில் உள்ள சந்தைப்பேட்டைக்கு அவர் செல்வது வழக்கம்.

தாமிரபரணி ஆற்றின் செழுமையில், அழகுமிகு கோட்டைப் போன்ற சந்தைப்பேட்டை சவேரியார் ஆலயம் உள்ளது. புன்னைக்காயல் நோக்கிய பயணத்தில் தூய சவேரியாரின் காலடி தடம் பட்ட இடம் இது என்று மரபு சொல்கிறது. தாமிரபரணி ஆற்றின் சீற்றத்தினாலும், வெள்ளப் பெருக்கினாலும் இங்கிருந்த மீனவக் குடும்பங்கள் ஆற்றிற்கு அப்பால் இருக்கும் கலியாவூர், தூத்துக்குடி, காளான்கரை, இலங்கை போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கின்றனர். நீண்ட காலமாக இந்த புகழ்பெற்ற சந்தைப்பேட்டை தூய சவேரியார் ஆலயம் சிதைந்த நிலையில் இருந்தது. இப்போது புனரமைக்கப்பட்டு, புதுப் பொலிவுடன் தோற்றம் அளிக்கிறது. இங்கிருந்த தூய அந்தோனியார் சுரூபம்  தான் இப்போது புளியம்பட்டி திருத்தலத்தில் இருக்கிறது. இது தான் புளியம்பட்டி புதுமை சுரூபம் ஆகும்.

தொம்மை அந்தோனிக்கு 12 ஆண் மக்கள். இவர்களில் 11 ஆண் மக்கள் இறந்து விட்டனர். பெண் பிள்ளையோ திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே விதவையாகி, பிறந்த வீடு திரும்பினாள். எஞ்சியிருந்த ஒரே மகனையும், வளர்த்து ஆளாக்கிய நிலையில் வைசூரி என்ற கொடிய நோய் தாக்கியது. இப்போது இருக்கும் மருத்துவ வளர்ச்சி இல்லாத அந்த காலத்தில் மக்கள் யாரை நோக்கி தஞ்சம் செல்வார்கள்? சக்தியிழந்து தடுமாறி நின்றார் தொம்மை. புனித அந்தோனியார் தான் மனதில் தோன்றினார். தொம்மை அவர்கள்  எப்படி செபிக்க வேண்டும் என்று கூட தெரியாமல் மனம் வெதும்பி இருந்தார். “அந்தோனியாரே என் மகனைக் காப்பாற்றும், என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்” என்று கூட செபித்திருக்கலாம். இந்த வார்த்தைகள் தானே அன்புள்ளம் எட்டும் கடைசி நிலை. ஒரு தாய் தன் பிள்ளை படும் வேதனை தாங்காது அவள் சொல்லத் துணியும் கடைசி எண்ணம் “என்னை எடுத்துக்கொள், என் பிள்ளையை தந்துவிடு.” அப்படித் தான் தொம்மை அந்தோனி செபித்திருப்பார்.

ஒரு நாள் “குழந்தை பிழைக்கவும் குடும்பம் தழைக்கவும் ஓர் கோவில் எழுப்பு” என்று அந்தோனியார் சொல்வதாக உள்ளத்தில் ஒரு வெளிப்பாடு. கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றிய இந்த உணர்விற்கு அடுத்து அந்தோனியாரே தோன்றி சொன்னதாக ஒரு பிரமிப்பு. அவருடைய விதவை மகளுக்கும் அதே காட்சி.

உடனே செயல்பட துவங்கினார் தொம்மை. மகனின் நோயைக் கூட பொருட்படுத்தவில்லை. கோவில் கட்டுவது எப்படி என்ற வேலையில் இறங்கினார். கோவிலை எங்கு கட்டுவது..? மணியாச்சி ஜமீன்தாரை அவர் அணுகினார். ஜமீன்தாருக்கும் அப்படியொரு தரிசனம் கிடைத்தது என்றுக் கேள்விப்பட்டு உள்ளம் சிலிர்த்தார். கோவில் கட்டும் முயற்சியில் ஒரு சங்குச் செடியின் இலையில் சிலுவை அடையாளம் தென்படவே அந்த இடத்தைத் தோண்டிய போது அங்கு ஒரு தங்கச் சிலுவையையும் கண்டார். அந்த இடத்தில் ஒரு ஓலைக் குடிசையை அமைத்தார். சந்தைப் பேட்டை புனித சவேரியார் ஆலயத்திலிருந்த, புனித அந்தோனியார் சுரூபத்தை அந்த ஓலைக் குடிசையில் வைத்தார். உருக்கமாய் செபித்து வந்தார். தனது மகன் நோய் நீங்கி நலம்பெற்றதைக் கண்ட தொம்மை மனம் குளிர்ந்தார். தனது குடும்பத்தையே அந்தோனியாரின் பக்தர்களாக ஆக்கினார்.

இந்த ஓலைக்குடிசைக் கோவிலில் இறைவன் தூய அந்தோனியார் வழியாக அற்புதங்கள் பல செய்தார். எண்ணற்ற புதுமைகள் புரிந்தார். குறிப்பாக நோய்களிலிருந்து விடுதலை, குழப்பத்திலிருந்து விடுதலை, மன நோய்களிலிருந்து விடுதலை, கட்டுகளிலிருந்து விடுதலை, தீய சக்திகளிடமிருந்து விடுதலை, குணமாக்க முடியாத நோய்களிலிருந்து விடுதலை... இன்னும் பல. மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. வந்து சேர சாலைகளே இல்லாத நிலையில் கூட மக்கள் கூட்டம் அலை மோதியது....

அருள்பணியாளர்களின் கவனம் புளியம்பட்டிக்குத் திரும்பியது. புளியம்பட்டி முதலில் பன்னீர்குளம் பங்கு  அதன்பின் அலவந்தான்குளம் ஆகிய பங்குகளோடு இணைந்து இருந்ததால், அங்கிருந்து அருள்பணியாளர்கள் புளியம்பட்டிக்கு வந்து தங்கி திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடத்தி வந்தார்கள். 

15.02.1954 இல் புளியம்பட்டி தனிப்பங்காக மலர அருள்பணியாளர்கள் இங்கேயே நிலையாகத் தங்கி மக்களை வழிநடத்தி வந்தனர். 13.06.1961 இல் இன்றிருக்கும் வானுயர்ந்த கோபுரம் கொண்ட இப்போதைய எழில் மிகு ஆலயம் கட்டப்பட்டு புனிதப்படுத்தப் பெற்று திருத்தல ஆலயமாகியது.

கரத்தில் கடவுள் குழந்தை.. காலடியில் இறைமக்கள் கூட்டம்..!! இதுதான் புளியம்பட்டியின் உண்மை. பரந்த திறந்த மனம் படைத்த எவரும் தூய அந்தோனியார் வழியாக இத்திருத்தலத்தில் இறைவன் செய்து வரும் அற்புதங்களை காணாமல் இருக்க முடியாது. பெற்ற நன்மைகளுக்கு நன்றியாக மக்கள் வைத்துள்ள தங்க, வெள்ளிப் பொருட்கள், உலோகத்தாலான உடல் உறுப்புகள், கப்பல், படகுகள், வீடுகள், குத்துவிளக்குகள் இப்படி பல, கோடி அற்புதருக்கு சான்றுகளாக இருக்கின்றன. புனித அந்தோனியார் வழியாக இறைமகன் இயேசுவிடம் என்பதே நமது இறை நம்பிக்கையின் அடித்தளம்.

நம்புங்கள்..! செபியுங்கள்..! நல்லது நடக்கும்..! என்பதே இத்திருத்தலத்தில் வீசும் நம்பிக்கை அலைகள்!

கிளைப்பங்குகள்:

புளியம்பட்டி, புனித அந்தோனியார் திருத்தலமானது, எட்டு துணை பங்குத் தளங்களைக் கொண்டு ஒரு பெரிய பங்காகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திருத்தலத்தின் அதிபர் தந்தையவர்களே இப்பங்கின் பங்குப் பணியாளராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

1954 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 15 ஆம் நாளில் மதுரை மறை மாநிலப் பேராயர் மேதகு லெயோனார்டு ஆண்டகை அவர்களால் புளியம்பட்டி புதிய பங்காக அறிவிக்கப் பட்ட போது, அதோடு இணைந்திருந்த கிளை பங்குகள்: அலவந்தான் பங்கிலிருந்து அணைத்தலையூர், புங்கனூர், ரசபதி, துறையூர், மடத்துப்பட்டி, கைலாசப்புரம் இவற்றோடு பாளையங்கோட்டைப் பங்கைச் சார்ந்த குப்பக்குறிச்சி, சீவலப்பேரி, பொட்டல் பச்சேரி (பொட்டல்நகர்) ஆகிய ஊர்களும் சேர்ந்தன. 1983 இல் பேட்டைப் பங்கிலிருந்து சங்கர் நகர் பிரிந்த போது துறையூர், அணைத்தலையூர் மற்றும் ரசபதி ஆகிய மூன்று ஊர்களும் சங்கர் நகர் பங்கோடு இணைந்தன. 

1987 இல் தொலைவு, போக்குவரத்து வசதிக் குறைவு காரணமாக கயத்தார் பங்கோடு இருந்த கல்லத்திக்கிணறு, புளியம்பட்டி பங்கோடு இணைந்தது. மக்களே இல்லாத மிகப் பழைமையான சந்தைப் பேட்டை ஆலயத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆலயம் இல்லாத ஒட்டுடன்பட்டி, சவலாப்பேரி, கீழக்கோட்டை மருதன் வாழ்வு, நாரைக்கிணறு, பரிவில்லிக்கோட்டை, கொடியங்குளம் போன்ற ஊர்களிலும் சில கிறித்தவக் குடும்பங்குள் இருக்கின்றன.

திருத்தல புதுமைகள்:

தென்னகத்துப் பதுவை என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் புனிதரின் வள்ளன்மையினால் நடைபெறும் புதுமைகள் ஏராளம்..! ஏராளம்..! ஆலயம் நாடி வருவோரின் மனக்குறை மாறுகிறது... உடற்குறை தீருகிறது... ஊமைகள் பேசுகின்றனர்..! முடமானோர் முடம் நீங்கி முழுமை வடிவம் பெற்றுள்ளனர்...! கண்ணில்லார் கண் ஒளி பெற்ற...! எண்ணில்லாப் புதுமைகள் எழுதிட ஏடுகள் ஆயிரம் வேண்டும். குழந்தை வரம் வேண்டி வந்தோர் குறை நீங்கி குதூகலம் பெறுகின்றனர். தீய ஆவியின் ஆளுகையால் அலைக்கழிக்கப் பட்டோர் நலம் பெறுகின்றனர். களவு போன பொருட்களும், கவனக் குறைவால் இழந்துவிட்ட பொருட்களும் புனிதரின் புதுமையால் திரும்பக் கிடைக்கின்றன. வேலையின்மையால் வேதனையுறும் இளைஞர்களின் வாழ்வில் வசந்தம் தவழ்ந்திட வரம் நல்குகிறார் புனிதர். வியாபாரம், தேர்வு, அரசியல் இவைகளில் வெற்றியா..! வாரி வழங்குகிறார் வள்ளல் அந்தோனியார். பசிக்கு விருந்தாக, நோய்க்கு மருந்தாக வாழ்வளிக்கும் வள்ளலின் திருத்தலத்தில் நடைபெற்ற ஆதாரம் நிறைந்த புதுமைகள் பல... அவற்றுள் .... இதோ.... சில....

1. மாட்டை குணமாக்கிய மகத்துவம்:

அந்நாட்களில் திசையன்விளை பகுதியைச் சார்ந்தவர்கள் கருப்புக்கட்டிகளை மாட்டு வண்டி மூலம் விருதுநகர், சிவகாசி பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதுண்டு. அவ்வாறு செல்பவர்கள், புளியம்பட்டி வழியாகவே செல்வார்கள். பந்தல் அமைத்து விளக்கேற்றி புனிதருக்கு ஆலயம் கட்ட நாள் செய்த அன்று அவ்வாற பொதி (சுமை) ஏற்றிச் சென்ற மாடு ஒன்று, ரத்த பேதி ஏற்பட்டு படுத்துவிட்டது. எவ்வளவு வைத்தியம் செய்தும் மாட்டை எழுப்ப முடியவில்லை. பொதி ஏற்றி வந்தவர்கள் புளியம்பட்டி கோவிலில் எரிந்து கொண்டிருந்த குத்துவிளக்கின் எண்ணையை எடுத்து அரைத்து அந்தோனியாரை நினைத்துக் கொண்டு மாட்டிற்குக் கொடுத்தனர். எல்லோரும் அதிசயிக்கும் வண்ணம் பேதி நின்று மாடு எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டது. மகிழ்வுற்ற வியாபாரிகள் அந்தோனியாருக்கு நன்றிக் கடன் செலுத்தி வியாபாரத்திற்கு புறப்பட்டு சென்றார்கள்.

2. காய்ந்த மரம் காய்த்தது:

செங்கோட்டைச் சேர்ந்த திரு. வி. குமரேசன்  இல்லத்திலுள்ள தென்னை மரம் நோயால் பாதிக்கப்பட்டு குருத்து ஓலை காய்ந்து விட்டது. காய்ந்த குருத்தினை சிறுவர்கள் பிய்த்து எறிந்து விட்டனர். இனி மரம் பட்டு விடும் என்று அனைவருமே கூறிவிட்டனர். ஆனால் திரு. குமரேசன் நம்பிக்ககையுடன் புளியம்பட்டி சென்று கோவிலை வணங்கி பின் கோவில் அருகேயுள்ள வேப்ப மரத்திலிருந்து கொஞ்சம் இலைகளை பறித்துக்கொண்டு ஊர் வந்தார். தினந்தோறும் அந்த இலைகளை அரைத்து தென்னை மரத்தில் சிலுவை அடையாளம் வரைந்து வந்தார். புனிதரின் ஆற்றலால் நாளடைவில் புதிய குருத்து உருவாகி மரம் வளர்ந்தது. ஏராளமான காய்களும் காய்த்தது. இன்னும் அந்தத் தென்னை மரம் பலன் தந்து கொண்டிருக்கிறது.

3. குழந்தை பிறந்தது... குடும்பம் மகிழ்ந்தது:

செங்கோட்டையைச் சேர்ந்த திரு. குமரேசன் - மதுரம்  தம்பதியினருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. பத்தாண்டு காலமாகப் பல்வேறு மருத்துவங்கள் செய்தும் பலன் இல்லை. இதனால் திருமதி. மதுரம் மன நோயால் பீடிக்கப்பட்டவரானார். தம்பதியர்கள் புளியம்பட்டி திருத்தலம் வந்தனர். அவர்களின் வேண்டுதல் ஏற்கப்பட்டது. மனநோய் குணம் ஆனதுடன் குழந்தைப்பேறும் கிடைத்தது. பிறந்த குழந்தைக்குப் பெற்றோர் அந்தோனி ராம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் திருத்தலம் வந்து நன்றி செலுத்தி மகிழ்கின்றனர்.

4. மழலைச் செல்வமற்றோர் மனம் மகிழ மகவு ஈந்தவர்:

சென்னையைச் சேர்ந்த திரு. வைரவன் என்ற ஜெகநாதன். இவரது சொந்த ஊர் இராஜபாளையம். 1954ம் ஆண்டு திருமணமான அவருக்கு ஆண்டுகள் பல சென்றும் குழந்தைப் பாக்கியம் கிடைக்கவில்லை. மருத்துவர்களை நாடினார். அவர்கள் இத்தம்பதிகளை பரிசோதித்து குழந்தை பிறக்காது எனக் கூறிவிட்டனர். மனந்தளராத திரு. ஜெகநாதன் தம்பதிகள் நாகர்கோவில், திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் உள்ள புகழுறு மருத்துவர்களைக் கலந்து ஆலோசித்தனர். ஆனால் அவர்கள் அனைவரும் கூறிய ஒரே பதில் “உங்களுக்கு குழந்தை பிறக்காது” என்பதே. மழலைச் செல்வமற்றோர் மனம் மகிழ மகவு ஈந்திடும் புனித அந்தோனியாரின் மாண்பினைச் செவியுற்ற திரு. ஜெகநாதன் 1971 -ம் ஆண்டு ஆடி மாதம் கடைசி செவ்வாயன்று புனித அந்தோனியாரை வேண்டி பிறக்கும் குழந்தைக்கு “அந்தோனிப்பிச்சை” எனப் பெயர் வைப்வேன் என வேண்டுதல் செய்தார். வேண்டுதலின் பின்னர் அவரது மனைவி கருவுற்று 1972 கார்த்திகை 27ம் தேதி அன்று காலை குழந்தை பிறந்தது. மணமாகி 18 ஆண்டுகள் கழிந்த பின் பிறந்த குழந்தைக்கு “அந்தோணிப்பிச்சை” எனப் பெயரிட்டு மகிழ்ந்தனர்.

5. விழுங்கிய ஊசி வெளிவந்தது:

தூத்துக்குடியில் வாழும் திரு. தனிஸ் மச்சாது அவர்களின் தவப்புதல்வன் ஊசி ஒன்றை வைத்து வாயில் போட்டு விளையாடிக்கொண்டிருந்த போது ஊசி வாயினுள் சென்று வயிற்றினுள் புகுந்துவிட்டது. சிறுவனின் பெற்றோர் துடியாய் துடித்தனர். அவர்கள் அடிக்கடி புனிதப் பயணம் வரும் புளியம்பட்டி புனித அந்தோனியாரை நோக்கி நம்பிக்கையுடன் மன்றாடினர். வியப்புறும் வண்ணம் சிறுவன் விழுங்கிய ஊசி வெளிவந்தது. பெற்றோர் மகிழ்வுற்றனர். புனித அந்தோனியாருக்கு நன்றி கூறினர். தாங்களடைந்த இப்பெரு நன்மையினை அச்சிட்டு துண்டுப் பிரசுரமாக வெளியிட்டு இத்திருத்தலத்தில் வழங்கினர்.

6. கால் நொறுங்கியவர் மீது கருணை கொண்டார் இறைவன்:

சாத்தூரைச் சார்ந்த கபிரியேல் என்பவரின் மகன் மு. ஜார்ஜ். இவர் தொழிற்சாலையில் போர்மேகனாகப் பணிபுரிந்தார். 1959ல்; 41 வயது நடக்கும்போது சைக்கிளிலிருந்து கீழே விழுந்து முழங்கால் நொறுங்கி விட்டது. நடக்க முடியாதவரானார். பல சிறந்த மருத்துவமனைகளை நாடியும் பயனேதுமில்லை. கம்பு ஊன்றி நடக்கும் வரமருள இறைவனடியே தஞ்சம் என புளியம்பட்டி வந்தார். புனித அந்தோனியாரின் திருத்தலம் தங்கி அழுது மன்றாடி 41 நாட்கள் கழித்தார். தானாக நடக்கும் அளவுக்கு குணம் பெற்றார். இப்போது தன் பணியை தங்கு தடையின்றி செய்யும் அளவுக்கு நலமுடன் இருக்கிறார். புனிதரை நம்பினோர் கைவிடப்படார்.

7. முடமான குழந்தை நடந்தது :

தூத்துக்குடி பெரியகடைத் தெருவில் வாழும் திரு. அந்தோனி சேவியர், அல்போன்சம்மாள் தம்பதியரின் 3 வயது பெண் குழந்தை நடக்க இயலாமல் இருக்கக் கண்டு, பெற்றோர் அடைந்த துன்பத்திற்கு அளவு இல்லை. புனித அந்தோனியாரை நம்பினர். அவருடைய பாதத்தினை சரணடைந்தனர். ஆதவன் முன்னால் பனி விலகுவது போல, அவர்கள் மனத்துயரை நீக்கியருளினார் புனிதர். குழந்தை தன் சிறு கால்களை ஊன்றி நடந்து பெற்றோரைப் பெரு மகிழ்வுக்கு உள்ளாக்கிற்று. நம் மனக்குறை நீங்க, துன்பம் அகல, ஆறுதல் பெற புனித அந்தோனியாரின் திருப்பாதங்களைத் தஞ்சம் என அடைவோம்.

8. மருத்துவர்களால் கைவிடப்பட்ட சிறுமி:

கழுகுமலை பழங்கோட்டை குழந்தையம்மாளின் புதல்வி அந்தோனியம்மாளுக்கு திடீரென்று காய்ச்சல் கண்டது. 13 வயது நிரம்பிய அச்சிறுமி படும் துன்பம் கண்டு, அவளது பெற்றோர் கோவில்பட்டி மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அவர் ஒரு மாதம்  சிகிக்சை அளித்தும் குணம் ஏற்படாதது கண்டு, சிறுமியை மதுரை அரசினர் தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு ஆலோசனை வழங்கினார். சிறுமியின் பெற்றோர் மதுரை மாநகரின் புகழ் பெற்ற மருத்துவரிடம்  கொண்டு சென்றனர். பிள்ளை நடக்கக்கூட சக்தியிழந்து விட்டது. கை, கால் செயலற்று விட்டது. பேசவும் இயலவில்லை. டியூப் மூலம் குளுக்கோஸ் உணவும், ஆரஞ்சுப் பழச்சாறும் அளிக்கப்பட்டது. ஒரு மாதம் மருத்துவம் செய்தும் பிள்ளையின் உடல் நிலையில் முன்னேற்றம் காணாத  மருத்துவரும் கையை விரித்தார். குழந்தையின் தாய் கடைசியாக, நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கையூட்டும் புளியம்பட்டி புனித அந்தோனியார் பாதத்தை அடைவது என எண்ணி, 8.2.1973 அன்று தாயும் சேயும் நாரைக்கிணறு புகை வண்டி நிலையத்தை அடைந்தனர். மிகவும் பலவீனமுள்ள அக்குழந்தையை மாட்டு வண்டியில் கொண்டு சென்றால் வழியிலேயே இறந்து விடுமோ..! என அஞ்சிய அத்தாய் தான்பெற்ற அக்குழந்தையை தன் தோளில் சுமந்து கொண்டே புளியம்பட்டி வந்து சேர்ந்து புனித அந்தோனியாரின் பாதத்திலே கிடத்தினார். என்ன ஆச்சரியம்..! புளியம்பட்டி புனித அந்தோனியாரின் திருத்தலத்தை அடைந்த அன்றே, அக்குழந்தை சிறிது இட்லியை உண்ண ஆரம்பித்தாள். ஒரு வாரத்தில் ஓரளவு குணம் கிடைத்தது. 41 நாட்களில் பூரண சுகத்துடன் நடமாட ஆரம்பித்தாள். குணம் அளித்த புனிதருக்கு நன்றி செலுத்த மாதம் ஒருமுறை தாயும், குழந்தையும் இத்திருத்தலம் வந்து செல்லுகின்றனர். நாமும் புனித அந்தோனியாரிடம் நம்பிக்கையுடன் செல்லுவோம்.

9. புதுமைக் கிணற்றிலும் புதுமைகள் :

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்..... வைகாசி மாதத்தின் ஒரு வைகறைப் பொழுது, புளியம்பட்டி வாழ் திரு. காசி நாடார் என்பவர் நாழிக்கிணறு போல் சிறுத்திருந்த புதுமைக் கிணற்றில் கமலை இறைத்துக் கொண்டிருந்தார். கமலைத் தண்ணீரில் ஊத்துமலையிலிருந்து வந்திருந்த சில திருப்பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென..... மாடு .... கலைந்து...... முன்னும் பின்னும் இழுத்து.... ஒரு மாடு கிணற்றுக்குள் விழுந்து விட்டது. கூடவே.... குளித்துக்கொண்டிருந்த ஒரு தாயும் மகளும் மாட்டோடு கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்தனர். புனிதரின் அருங்குறி அங்கே... நிழலிட... கிணற்றுக்குள் விழுந்த மாடும் மற்றும் தாய், மகள் ஆகிய இருவரும் எவ்வித சிறு காயமுமின்றி மீட்கப்படுகின்றனர். சில காலம் கழித்து அதே காசி கமலை இறைத்துக் கொண்டிருந்தார். தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த ஒரு யாத்திரிகர் தண்ணீர் வாளியைக் கிணற்றுக்குள் போட்டுவிட்டார். உடன் வந்த கனத்த சரீரமுடைய ஒருவர் தனது ஊமை மனைவியிடம் உடைகளைக் களைந்து கொடுத்துவிட்டு, காசி உதவியுடன் கமலைக் கயிறு வழியாகக் கிணற்றுக்குள் இறங்கினார். திடீரென்று கமலை இறைக்கும் பட்டறைப் பலகையுடன் கமலைக் கல்லும் உடைய கயிறு வழியாக கிணற்றுக்குள் இறங்கிய மனிதரும் மேலே இருந்து உதவிய காசி -யும் கிணற்றுக்குள் விழுந்து விட்டனர். ஆனால், என்ன ஆச்சரியம்..! இருவருக்கும் சிறிது காயம்கூட ஏற்படவில்லை. அதை விட ஆச்சரியம்.......!! தனது கணவர் கிணற்றுக்குள் விழுவதைக் கண்டு கூச்சலிட முற்பட அந்தப் ஊமைப் பெண்....... காப்பாற்றுங்கள்..! காப்பாற்றுங்கள்...! காப்பாற்றுங்கள்..! என்று பேசவே ஆரம்பித்துவிட்டாள்.

என்னே புனிதரின் புதுமைகள்.. 

தனிச்சிறப்புகள்:

*புதுமைக் கிணறு

*அசனம் 

*திருத்தல வலம் 

*திருத்தலத்தில் தங்குதல் 

*பிச்சை எடுத்து காணிக்கை 

*பட்டைச் சோறு 

*வெள்ளிப் பொருட்கள் காணிக்கை

*விற்று வாங்கல்.

பதுவா முதியோர் இல்லம் :

பாளையங்கோட்டை மறைமாவட்ட வெள்ளிவிழா தொடக்க நிகழ்ச்சி 09.09.1997 ல் புளியம்பட்டியில் நடைபெற்றது. அதன் நினைவாக முதியோர் இல்லத்துக்கான அடிக்கல் நாட்டினார் ஆயர் மேதகு இருதயராஜ் அவர்கள்.

முதியோர் ஆண்டான 1999 ஜூன் 13ம் நாள் ஞாயிறு மாலை 5 மணிக்கு பாளை ஆயர் மேதகு இருதயராஜ் ஆண்டகை முதியோர் நலனுக்காக இல்லத்தை அர்ச்சித்து அர்ப்பணித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் உயர்திரு. மு. மாலிக் பெரோஸ்கான் இல்லத்தைத் திறந்து வைத்தார். இல்லத்தை கண்காணிக்கும் பொறுப்பேற்ற புனித சார்லஸ் பொரோமேயோ சபை மாநிலத் தலைவி சகோதரி இக்னேசியஸ் குத்துவிளக்கேற்றி இல்லத்தை இயக்கி வைத்தார். அந்த நாளிலிருந்து இந்தப் பதுவா முதியோர் இல்லத்தின் பொறுப்பேற்று நடத்தும் பணியில் சகோதரிகள் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள். அந்தோனியார் சிறுவர் காப்பக (கருணை இல்லம்) மாணவியரும் இச்சகோதரிகளின் கண்காணிப்பில் இருக்கின்றனர்.

பங்கின் கல்விக்கூடங்கள்:

1. R. C நடுநிலைப்பள்ளி, புளியம்பட்டி 

2. R. C. தொடக்கப்பள்ளி, கல்லத்திக்கிணறு

3. R. C. தொடக்கப்பள்ளி, பொட்டல்நகர்

4. R. C. தொடக்கப்பள்ளி, கைலாசப்புரம். 

கெபிகள் :

1. லூர்து மாதா கெபி 

2. புனித அந்தோணியார் கெபி

3. புனித அந்தோணியார் கெபி (பேருந்து நிலையம் அருகே) 

4. ஆராதனை ஆலயம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த, கோடி அற்புதர் புளியம்பட்டி புனித அந்தோனியார் திருத்தலம் வாருங்கள்..

புனிதரின் பரிந்துரையால் இறைவனின் ஆசீர் பெற்றுச் செல்லுங்கள். 

நம்புங்கள்.. ஜெபியுங்கள்.. நல்லது நடக்கும்...  

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: திருத்தல இணையத்தள குழுவினர்.