339 குழந்தை இயேசு ஆலயம், சோழிங்கநல்லூர்


குழந்தை இயேசு ஆலயம்.

இடம் : சோழிங்கநல்லூர்

மாவட்டம் : சென்னை
மறை மாவட்டம் : செங்கல்பட்டு

நிலை : பங்குத்தளம்

கிளை: புனித ஆரோக்கிய அன்னை ஆலயம், சுனாமிநகர், செம்மஞ்சேரி.

பங்குத்தந்தை : அருட்பணி ஜான் ஜோசப் ம.ஊ.ச

குடும்பங்கள் : 600
அன்பியங்கள் : 15

ஞாயிறு திருப்பலி : காலை 8.00 மணிக்கு தமிழில், 11.00 மணிக்கு ஆங்கிலத்தில், மாலை 05.30 மணிக்கு ஆங்கிலத்தில்

திங்கள், செவ்வாய் திருப்பலி : காலை 06.30 மணிக்கு

புதன், வியாழன், வெள்ளி, சனி திருப்பலி : மாலை 06.45 மணிக்கு.

புதன் கிழமைகளில் புற்றுநோயாளர்களின் பாதுகாவலரான புனித பெரகிரினாரின் நவநாள்.

வியாழக்கிழமைகளில் குழந்தை இயேசுவின் நவநாள்.

சனிக்கிழமைகளில் ஜீவமாதா நவநாள்.

திருவிழா : பெப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை.

மண்ணின் மைந்தர்கள் :

அருட்பணி ஆன்டனி ராஜ் ம. ஊ. ச
அருட்சகோதரி மேரி நித்யா, Bon Secours Congregation

வழித்தடம் :

தாம்பரத்திலிருந்து சோழிங்கநல்லூர் பேருந்து எண் : 95.

கோயம்பேடு - சோழிங்கநல்லூர் பேருந்து எண் : 570.

சென்ட்ரல் - சோழிங்கநல்லூர் பேருந்து எண் : 221.

வரலாறு :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த ஒரு பெரிய கிராமம் சோழிங்கநல்லூர். தொடக்கத்தில் சென்னை மயிலை உயர் மறை மாவட்டத்திற்கு உட்பட்டிருந்தது. மேலும் மிகப் பழமையான கோவளம் பங்கின் அங்கமாக இருந்து வந்தது. தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் சோழிங்கநல்லூர் உள்ளது.

1989 -ஆம் ஆண்டு பெருங்குடியில் தங்கியிருந்த மரியின் ஊழியர் சபை துறவிகள், இப் பகுதியில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவ குடும்பங்களை கண்டெடுத்து, அவர்களை ஒன்று சேர்த்து, அவர்களுக்காக திருப்பலி நிறைவேற்றினர். குழந்தைகளுக்கு மறைக்கல்வியும், மாலைப் பள்ளியும் ஆரம்பித்து சிறப்பான முறையில் நடத்தினர்.

1990 -இல் மரியின் ஊழியர் சபை குருக்கள் ஓங்கியப்பேட்டையில் இல்லம் ஆரம்பித்த பிறகு, சோழிங்கநல்லூர் பகுதியை, கோவளம் பங்குத்தந்தையின் அனுமதியோடு, ஒரு பங்கு போன்று நிர்வாகம் செய்யத் தொடங்கினர்.

1998-இல் சோழிங்கநல்லூர் மேய்ப்புப் பணியானது மரியின் ஊழியர் சபை குருக்களிடம் ஒப்படைக்கப் பட்டது. 2000- ஆவது யூபிலி ஆண்டில் புதிய ஆலயம் கட்டப்பட்டு குழந்தை இயேசு ஆலயமாக அர்ச்சிக்கப்பட்டது. ஒரு சில குடும்பங்கள் என்றிருந்த நிலை மாறி, தற்போது எண்ணிக்கையிலும் இறை விசுவாசத்திலும் உயர்ந்து நிற்கிறது.

2002 -இல் செங்கல்பட்டு மறை மாவட்டம் உருவானபோது, சோழிங்கநல்லூர் இப்புதிய மறை மாவட்டத்தின் அங்கமானது.

இந்த காலகட்டத்தில் மரியின் ஊழியருக்கே உரித்தான வகையில், மரியன்னையின் பக்தியை வளர்க்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.

இதன் விளைவாக ஜீவமாதா பக்தி உருவானது. இவ்வாறு பற்பல புதிய இறை விசுவாசத்தை வளர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு இறையரசுப் பணியில் மரியின் ஊழியர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

ஜீவமாதா பக்தி:

ஆண்டவர் இயேசுவை தன் உதிரத்தில் தாங்கி, அவரின் பிறப்புக்காக காத்திருக்கும் அன்னை தான் ஜீவமாதா. மாதத்தின் ஒவ்வொரு முதல் சனிக்கிழமையும் ஜீவமாதாவிற்கு சிறப்பு நவநாள் நிறைவேற்றப் படுகிறது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 02.30 மணி வரை இந்த நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செபமாலையுடன் துவக்கப்பட்டு அதன்பிறகு சாட்சியப் பகிர்வு நடைபெறும்.

இந்த அன்னையிடம் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும் தாய்மார்கள், குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க வேண்டும் என்று ஜீவமாதாவின் பரிந்துரையை நாடும் தம்பதியர் என்று ஏராளமானோர் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பெற்று மகிழ்வுடன் செல்கின்றனர்.

இவ்வாறு அன்னையின் வழியாக தாங்கள் பெற்ற அற்புதங்களை அருங்கொடைகளை ஆலயத்தில் வந்து கண்ணீர் மல்க சாட்சியம் சொல்கின்றனர். நம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் மீதும், அன்னை ஜீவதாயின் வல்லமை மிக்க பரிந்துரைகள் மீதும் மக்கள் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு அவை சாட்சியாக விளங்குகிறது.

சாட்சியப் பகிர்வுக்குப் பின் குணமளிக்கும் நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து திருப்பலியும் நடைபெறும்.

இந்த அருள்தலத்திற்கு குடும்பத்துடன் வருகை தந்து குழந்தை இயேசுவின் ஆசீர்வாதங்களையும், ஜீவமாதாவின் வல்லமை மிக்க பரிந்துரையின் வழி, நிறை இறை அருளையும் பெற்றுச் செல்ல அனைவரையும் அன்போடு அழைக்கிறார் பங்குத்தந்தை அருட்தந்தை ஜான் ஜோசப் ம.ஊ.ச அவர்கள்.

தகவல்கள் : பங்குத்தந்தை அருட்தந்தை ஜான் ஜோசப் ம. ஊ. ச.