60 மூன்று அரசர்கள் ஆலயம், கூத்தன்குழி


மூன்று அரசர்கள் (மூன்று ஞானிகள்) ஆலயம்

இடம் : கூத்தன்குழி

மாவட்டம் : திருநெல்வேலி
மறை மாவட்டம் : தூத்துக்குடி.

நிலை : பங்குதளம்

குடும்பங்கள் : சுமார் 3500
அன்பியங்கள் : 27

பங்குத்தந்தை : அருட்பணி ராஜன்.

ஞாயிறு திருப்பலி : காலை 04.00 மணி காலை 06.00 மணி மற்றும் காலை 09.00 மணி.

திருவிழா :

ஜனவரி 6ம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள் மூன்று அரசர்கள் திருவிழாவாகவும்.

மேலும் ஜூன் 25 ஐ உள்ளடக்கிய புனித அருளப்பர் திருவிழா பத்து நாட்கள். செப்டம்பர் மாதத்தில் சிலுவைநாதர் திருவிழா பத்து நாட்கள்.

மே மாதத்தில் 15 ம் தேதியை உள்ளடக்கிய தூய கித்தேரியம்மாள் திருவிழா பத்து நாட்கள்.

ஆகஸ்ட் மாதத்தில் தூய சூசையப்பர் திருவிழா பத்து நாட்கள். மேலும் கோட்டார் தூய சவேரியார் ஆலயத் திருவிழாவை ஒட்டிய தூய சவேரியார் திருவிழா பத்து நாட்கள் என்று பல திருவிழாக்கள் நடைபெறுவது தனிச்சிறப்பு.

வரலாறு :

கூத்தன்குழி (Kuthenkuzhi) தென் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தாலுகாவில்உள்ள ஒரு கிராமம். இங்கு மீனவர் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பரதவர் இனத்தை சார்ந்தவர்கள்.

கோவில்கள்

திருக்காட்சி ஆலயம்
புனித கித்தேரி திருத்தலம்
திருச்சிலுவை நாதர் திருத்தலம்
மிக்கேல் ஆதிதூதர் திருத்தலம்

கல்வி நிலையங்கள்

புனித தெரசாள் தொடக்கப் பள்ளி
புனித வளன் தொடக்கப் பள்ளி
புனித கித்தேரி உயர்நிலைப் பள்ளி
பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி

புனித சவேரியார் கி .பி 1542 -ல் இந்தியாவிற்கு வந்து இறையேசுவின் மறைபரப்பு பணியை ஆற்றிய போது கடலோர மக்களை இறைபக்தி மிகுந்தவர்களாக மாற்றினார் என்பது வரலாறு . இதன் படி சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னதாகவே கூத்தன்குழி மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி ஆலயங்களை அமைத்து வழிபட்டு வந்தது தெளிவாக தெரிகிறது . இருந்தாலும் ஆதாரபூர்வமாக யேசுசபை குருக்களின் பதிவுகளின் படி கி.பி. 1558 ஆம் ஆண்டுகூத்தன்குழியில் ஆலயம் இருந்ததாக தெரிகிறது .

கூத்தன்குழி தனிப்பங்காக மாறுவதற்கு முன்பாக கி.பி. 1730 -ல் இடிந்தகரையின் துணை பங்காக இருந்தது . பங்கு பதிவேட்டின் அடிப்படையில் கி.பி. 1715 -ல் கூத்தன்குழியில் பிரெஞ்சுமிஷன் மூலமாக புனித ஸ்நாபக அருளப்பர் நினைவாக பங்கு ஆலயமும் , கோவா மிஷின் மூலமாக புனித சூசையப்பர் நினைவாக மற்றொரு ஆலயமும் இருந்து வந்துள்ளது . பின்னர் கி.பி 1924 -ல் கூத்தன்குழி தனிபங்காக மாறியது . பங்கு ஆலயமானது பழுதடைந்ததால் புதிய ஆலயம் ஒன்றை அமைக்க ஊர் மக்கள் அக்கறை கொண்டு கி.பி. 1930 -ல் அப்போதைய பங்கு தந்தை G . மைக்கிள் அடிகளார் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் திபூர்ச்சியுஸ் ரோச் ஆண்டகை அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது . பின்னர் பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலை காரணமாக தாமதப்பட்டு வந்ததை தெரிந்து கொண்ட மக்கள் மீண்டும் அக்கறை எடுத்துக் கொண்டு அனைவரும் வியக்கும் அளவிற்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றை எழுப்பினர்

ஆலயத்தின் பலிபீடமானது அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. முன்பகுதியானது அழகிய வேலைப்பாடுகள் நிறைந்து கலைநயமிக்க முறையில் முதல் இரு ஆயர்களின் மறைமாவட்ட விருதுவாக்கான

"அன்பே எனது விண்மீன் "

"அன்பில் உண்மை ஆற்றல் "

இவற்றை இரு பக்கமும் தாங்கி உள்ளது சிறப்பம்சமாகும். இந்த அழகான ஆலயத்தை திறந்து வைத்து அர்ச்சிக்க பங்குத்தந்தை வியாகுலம் அடிகளார் அவர்களின் முயற்சியால் மேதகு ஆயர் தாமஸ் பர்னாந்து ஆண்டகை அவர்களின் திருகரங்களால் கி.பி.1966 ஜனவரி 5 ஆம் தேதி திறந்து வைத்து அர்ச்சித்து ஆசியுரை வழங்கும் போது இறைமகன் இயேசு பிறந்து மூன்று ஞானிகளுக்கு (கஸ்பார் , மெல்கியோர் , பல்த்தசார் ) காட்சியை வழங்கியதை நினைவுபடுத்தும் வகையில் புனித மூவரசர்களுக்கு அர்ப்பணித்து திருக்காட்சி ஆலயம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார் .

பல பங்குத்தந்தையர்களின் மூலம் பல வகைகளில் பராமரிக்கப்பட்டு வந்த ஆலயமானது கி.பி. 2006 ஆம் ஆண்டு புதுபிக்கப்பட வேண்டுமென்று ஊர்மக்களால் முடிவெடுத்து பங்குத்தந்தை J . கிளாரன்ஸ் தினேஷ் அடிகளார் அவர்களின் பெரும் முயற்சியால் கூத்தன்குழி பொதுமக்கள் அனைவரின் பேராதரவோடும் கட்டி முடிக்கப்பட்டு சிறப்பான முறையில் மறைமாவட்ட ஆயர் மேதகு யுவான் அம்புரோஸ் ஆண்டகை அவர்களால் 2011 மே 11 ஆம் தேதி திறந்து வைத்து அர்சிக்கப்பட்டு மதுரை பேராயர் மேதகு பீட்டர் பர்னாந்து ஆண்டகை அவர்களால் மே 20 ஆம் தேதி பெருவிழா கொண்டாடப்பட்டது.