902 கிறிஸ்து அரசர் ஆலயம், வல்லம்பட்டி

 

கிறிஸ்து அரசர் ஆலயம்

இடம்: வல்லம்பட்டி

மாவட்டம்: விருதுநகர்

மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்

மறைவட்டம்: விருதுநகர்

நிலை: கிளைப்பங்கு

பங்கு: அற்புத குழந்தை இயேசு ஆலயம், ஒத்தையால்

பங்குத்தந்தை அருட்பணி. S. ஜான் மில்டன், MSFS

குடும்பங்கள்:35

ஞாயிறு திருப்பலி இரவு 08:00 மணிக்கு 

திருவிழா: ஏப்ரல் மாதத்தில் கடைசி வெள்ளி சனி ஞாயிறு

நவம்பர் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்து அரசர் பெருவிழா 

மண்ணின் இறையழைத்தல்:

அருட்பணி. A. ஜெகநாதன், MSFS 

வழித்தடம்: சாத்தூர் -வல்லம்பட்டி

ஏழாயிரம்பண்ணை -வெம்பக்கோட்டை (ஜெகவீரன்பட்டி விளக்கு)

Location map: Christ The King Church, Vallampatti

https://maps.google.com/?cid=14433603783971501679&entry=gps

வரலாறு:

வந்தாரை வாழ்விக்கும் தமிழ்நாட்டில், வான்மழைக்காய் விழியேந்தி நிற்கும் வானம்பார்த்த பூமியாம் வல்லம்பட்டி  கிராமத்தில், சுமார் 1950 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பல்வேறு சமூக மக்கள் வாழும் மேலவல்லம்பட்டியில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் குடிசை ஆலயம் அமைத்து, இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். 

குடிசை ஆலயம் சேதமடைந்து போகவே, 1958-1960 காலகட்டத்தில் மண்சுவர் ஆலயம் கட்டப்பட்டது. சில சமூக காரணங்களால் இவ்விடத்தில் தொடர்ந்து வழிபாடுகள் செய்ய இடைஞ்சல்கள் பல ஏற்பட்டு வந்தது. இச்சூழலில் இயற்கை சூழல்கள் காரணமாக மண்சுவர் ஆலயமும் சேதமடைந்தது போகவே, அந்த இடத்தை கிறிஸ்தவ மக்கள் விற்பனை செய்தனர். அதன்பின் கிராமத்தின் பொது இடங்களில் வழிபாடுகள் செய்து வந்தனர். ஆன்மீக காரியங்களுக்காக அருகாமையில் உள்ள கிளை கிராமமான, புல்லக்கவுண்டன்பட்டி புனித வனத்து அந்தோணியார் ஆலயத்திற்கு சென்று வந்தனர். 

ஆலயம் அமைக்க வல்லம்பட்டிக்கு கிழக்கு திசையில் 1990 ஆம் ஆண்டு மக்களால் நிலம் வாங்கப்பட்டு, அவ்விடத்தில் உபதேசியார்கள் மூலமாக செபவழிபாடுகள் நடைபெற்று வந்தன. அவ்வப்போது திருப்பலியும் நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால் அவ்விடத்திற்கு எதிரே பிற சமய ஆலயம் ஒன்று இருந்ததாலும், மிக அருகாமையிலேயே பேருந்து நிலையம் இருந்ததாலும் அந்த இடமும் விற்பனை செய்யப்பட்டது.  

1999-2000 காலகட்டத்தில் கிராமத்தின் வடமேற்கு திசையில் 21 சென்ட் நிலம் வாங்கப்பட்டு ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் சாத்தூர் பங்கிலிருந்து பிரிந்து, ஒத்தையால் தனிப்பங்கானது. வல்லம்பட்டி கிராமம் ஒத்தையாலின் கிளைப்பங்காக மாற்றப் பட்டது. 

ஒத்தையால் பங்கின் முதல் பங்குத்தந்தை அருட்பணி. ஜேம்ஸ் ஆனந்தராஜ் MSFS அவர்கள், இறைமக்களோடு இணைந்து 2000-2001 காலகட்டத்தில் ஆலய கட்டுமானப் பணிகளைத் துவங்கினார். அருட்தந்தையவர்கள் பல வெளியூர்களிலும் நிதிதிரட்டி, மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து வந்த வேளையில் பணிமாற்றம் பெற்றுச் சென்றார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஓராண்டு காலமாக கட்டுமானப் பணிகளைத் தொடர முடியவில்லை. 

2004 ஆம் ஆண்டு பங்குத்தந்தையாக பொறுப்பேற்ற அருட்பணி. நிக்கோலஸ், MSFS அவர்கள் ஆலய கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்கினார். பங்குத்தந்தையின் முயற்சியாலும், வல்லம்பட்டி இறைமக்களின் உழைப்பினாலும் கிறிஸ்து அரசர் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டு, 10.07.2005 அன்று மதுரை உயர் மறைமாவட்ட மேனாள் ஆயர் பீட்டர் பெர்னாண்டோ அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு, தமிழ்நாடு புதுச்சேரி மாகாண MSFS தலைவர் அருட்பணி. A. லாரன்ஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் நத்தம்பட்டியிலிருந்து இரண்டு தேர்கள் வாங்கப்பட்டு, ஆலய பெருவிழா இன்றுவரை சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

2009 ஆம் ஆண்டு ஆலயத்தைச் சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டு, சுற்றிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

அருட்பணி. ஜெயராஜ், MSFS பணிக்காலத்தில் 2020ஆம் ஆண்டு ஆலய நுழைவு கேட் போடப்பட்டது. 2021 ஆம் ஆண்டு பலிபீடம் மாற்றம் செய்யப்பட்டு, கிராதி அமைக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு பலிபீடம் வண்ணம் தீட்டப்பட்டு, மீண்டும் அழகுற புதுப்பிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு மணி வாங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அரசர்களுக்கெல்லாம் அரசராம் கிறிஸ்து அரசரின் பேரருளால், பங்குத்தந்தையர்களின் வழிகாட்டலில் கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருகிறது வல்லம்பட்டி இறைசமூகம்.

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள்: ஆலய பொறுப்பாளர்கள் வழிகாட்டலில், புல்லக்கவுண்டன்பட்டி ஆலய உபதேசியார் V. சசி ( A ) சாலமோன். +91 73051 62824