503 புனித அந்தோணியார் ஆலயம், கீழக்கரை


புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : பரவர்தெரு, கீழக்கரை

மாவட்டம் : இராமநாதபுரம்
மறைமாவட்டம் : சிவகங்கை
மறைவட்டம் : இராமநாதபுரம்

நிலை : பங்குத்தளம்

பங்குத்தந்தை : அருட்பணி. சூ. சந்தியாகு ராசா

குடும்பங்கள் : 41
அன்பியங்கள் : 3

ஞாயிறு திருப்பலி காலை 06.15 மணிக்கு

செவ்வாய் வியாழன் மாலை 06.30 மணிக்கு திருப்பலி.

வெள்ளி மாலை 06.45 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலி.

மாதத்தின் முதல் வெள்ளி காலை 11.00 மணிக்கு நற்கருணை ஆராதனை, திருப்பலி.

திருவிழா : ஜூன் 1 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. வலன்டின் டயாஸ் (மதுரை உயர் மறைமாவட்டம்)
2. அருட்பணி. ஸ்டீபன் ரொட்ரிகோ சே. ச
3. அருட்பணி எட்வின் ராயன் (சிவகங்கை மறைமாவட்டம்)

1. அருட்சகோதரி. அன்னம்மாள் Servite (late)
2. அருட்சகோதரி. மார்கிரேட்டம்மாள் CIC (late)
3. அருட்சகோதரி. பிரான்சிஸ்கா CSSC (late)
4. அருட்சகோதரி. கில்டா Holy cross (late )
5. அருட்சகோதரி. இருதயமேரி CSSC
6. அருட்சகோதரி. ரோஸ்மோன்ட் Holy cross
7. அருட்சகோதரி. லத்தீசியா FMM
8. அருட்சகோதரி. மாலா FSJ.

வழித்தடம் : நாகர்கோவில் -தூத்துக்குடி -சாயல்குடி -ஏர்வாடி -கீழக்கரை.

மதுரை -மானாமதுரை -சிவகங்கை -இராமநாதபுரம் -கீழக்கரை.

இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஏர்வாடி செல்லும் அனைத்து பேருந்துகளும் கீழக்கரை வழியாகத் தான் செல்லும்.

Location map : https://goo.gl/maps/LpSwgzxwteLdmUSF7

வரலாறு :

கி.பி 1543 ல் புனித பிரான்சிஸ் சவேரியார் கீழக்கரை பகுதியில் நற்செய்தி அறிவித்து பலரை கிறிஸ்தவ மறையில் இணைத்தார். அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றி குருதி சிந்தி உழைத்தவர் வணக்கத்துக்குரிய அந்தோணி கிரிமினாலி. இவரைத் தொடர்ந்து இங்கு மறைப்பரப்பு பணிக்கு எவரும் அனுமதிக்கப் படவில்லை.

அதன் பின்னர் மறவ நாட்டிற்கு மறைப்பரப்ப வந்த புனித அருளானந்தரை 1693 ல் கைதியாகத் தான் இராமநாதபுரம் கண்டது. இராமநாதபுரம் அரண்மனையில் அவர் கொலைக்குற்றம் சாட்டப்பட்டார். அப்போது இராமநாதபுரத்தில் கிறிஸ்தவம் இல்லை. ஆனால் அதன் கிளைத் தளங்களில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். கி.பி 1600 களில் எழுதப்பட்ட கடிதங்களில் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, பாம்பன், கீழக்கரை ஆகிய ஊர்களில் கிறிஸ்தவர்கள் இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன.

கி.பி 1715 ஆம் ஆண்டு மிஷனரி குறிப்பேட்டில் தொண்டி தேவிபட்டினம், காரங்காடு, கீழக்கரை, பெரியபட்டணம், பாம்பன் ஆகிய ஊர்களில் ஆலயம் கட்ட அரசன் ரகுநாத சேதுபதி அனுமதி வழங்கியதற்கான குறிப்புகள் உள்ளன.

கி.பி 1730 ல் காதா தேவன் என்ற அரசன் அருட்தந்தை. பெர்டோல்டியை 15 நாட்கள் அரண்மனையில் தங்க வைத்து, அரண்மனையிலேயே திருப்பலி நிறைவேற்ற அனுமதியளித்தார். மேலும் அவர் மறைப்பரப்பு பணியாளர்கள் பணியாற்றுவதற்கு இருந்த தடையையும் நீக்கினார்.

1846 ல் அருட்தந்தை. மிக்கேல் சுவாமிநாதர் (அருட்பணி. லோரேஷ் சே. ச) அவர்கள் இராமநாதபுரத்தின் முதல் பங்குத்தந்தையாக நியமிக்கப்பட்டார். அப்போது பாம்பன், கீழக்கரை, வேம்பார், கமுதி, சூராணம், காரங்காடு முதலியவை இராமநாதபுரம் பங்கிற்கு உட்பட்டிருந்தன.

அருட்பணி. லூயிஸ் லெவே அவர்கள் 1943 முதல் 1956 வரை 13 ஆண்டுகள் இராமநாதபுரம் பங்குத்தந்தையாக பணியாற்றினார். அவ்வப்போது கீழக்கரை ஊருக்கும் வந்து செல்வார்கள். இவரது பாதம் கடலில், படகில் பட்டால் மீன்பிடித் தொழில் சிறந்து விளங்கும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

கீழக்கரை மீனவமக்களிடம் லூர்து அன்னை கெபி கட்ட நுரைக்கல் தேவையென அருட்பணி. லூயிஸ் லெவே அவர்கள் கேட்க, அவரையும் அழைத்துக் கொண்டு மீனவர்கள் கீழக்கரையிலிருந்து சுமார் 8கி.மீ தொலைவில் உள்ள அப்பா தீவிற்கு நுரைக்கற்கள் எடுக்க படகில் சென்றனர். மீனவர்களோடு சேர்ந்து அவரும் நுரைகல்லை அள்ளி படகில் நிறைத்தார். திரும்பி வரும் வழியில் மழைக்கான அறிகுறிகள் தோன்றி கடல் கொந்தளித்தது. அனைவரும் அஞ்சினர், படகு கவிழ்ந்து விடுமென எண்ணி நுரைகற்களை கடலில் போட முடிவெடுத்தனர். ஆனால் அருட்தந்தை. லூயிஸ் லெவே அவர்கள் நமது பாதுகாவலி ஜெபமாலை அன்னையிடம் மன்றாடுங்கள் என்றார். எல்லோரும் அருட்தந்தையோடு இணைந்து ஜெபிக்க கடல் கொந்தளிப்பு அடங்கியது. அனைவரும் பத்திரமாக கரை சேர்ந்தனர். இவ்வாறு கீழக்கரையில் உள்ள லூர்து மாதா கெபியும், இராமநாதபுரத்தில் உள்ள லூர்து மாதா கெபியும் அருட்தந்தை. லெவே அவர்களால் கட்டப்பட்டவைகள் ஆகும்.

இராமநாதபுரத்தின் கிளைப்பங்காக கீழக்கரை இருந்த போதே பல அருட்பணியாளர்கள் இங்கு தங்கி பணியாற்றினர்.

ஆலய வளர்ச்சி:

1715 ல் அரசர் ரகுநாத சேதுபதி அனுமதி வழங்கியதன் பேரில், கீழக்கரையின் முதலாவது ஆலயம் தற்போது உள்ள தொடக்கப்பள்ளிக்கு பின்புறம் கட்டப்பட்டது. இரண்டாவது ஆலயம் தற்போது உள்ள ஆலயத்தின் திருப்பொருள் அறை அமைந்துள்ள பகுதியில் சிலுவை வடிவில் மூன்று கோபுரங்களுடன் கட்டப்பட்டது. பின்னர் இவ்விரு ஆலயங்களும் இடிக்கப்பட்டு மூன்றாவது ஆலயம் கட்டப்பட்டது. இவ்வாலத்தின் பீடம் 1940 ஆம் ஆண்டில் சீரமைக்கப் பட்டது.

1944 ல் லூர்து மாதா கெபி அருட்பணி. லூயி லெவே அவர்களால் திறந்து வைக்கப் பட்டது.

05.03.2005 அன்று இயேசுவின் திருஇருதய பக்தி முயற்சி மேதகு ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அவர்களால் துவக்கப்பட்டது.

14.09.2006 அன்று மறைமாவட்ட முதல்வர் அருட்பணி. சாமு இதயன் அவர்களால் திருச்சிலுவை கெபி திறந்து வைக்கப்பட்டது.

07.04.2007 அன்று பங்குத்தந்தையின் புதிய இல்லத்திற்கு அடிக்கல் போடப் பட்டது.

14.09.2007 அன்று கீழக்கரை தனிப்பங்காக மேதகு ஆயர் சூசை மாணிக்கம் அவர்களால் உயர்த்தப்பட்டு, ஆலயத்திற்கு முன்பாக அமைந்துள்ள ஆரோக்கிய மாதா கெபி ஆயர் அவர்களால் அர்ச்சித்து திறந்து வைக்கப்பட்டது.

ஆலயத்தை புதுப்பிக்கும் பணிகள் 26.01.2016 அன்று துவக்கப்பட்டு, அருட்பணி. சந்தியாகு ராசா அவர்களின் பணிக்காலத்தில் பணிகள் நிறைவு பெற்று மேதகு ஆயர் செ. சூசை மாணிக்கம் அவர்களால் 28.07.2019 அன்று அர்ச்சிக்கப் பட்டது.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:
1. அருட்பணி. I. செல்வக்குமார் (2007-2012)
2. அருட்பணி. அல்போன்ஸ் நாதன் (2012-2013)
3. அருட்பணி. அகஸ்டின் இருதயம் (2013-2014)
4. அருட்பணி. ஜோதி மைக்கிள் ராஜ் (2014-2019)
5. அருட்பணி. சூ. சந்தியாகு ராசா (2019 முதல் தற்போது வரை..)

வரலாறு : அருள்பணி ஆய்வு மலரிலிருந்து எடுக்கப்பட்டது.