888 தூய லூர்து மாதா ஆலயம், சிப்காட் ஓசூர்

  

தூய லூர்து மாதா ஆலயம்

இடம் : பாலாஜி நகர், சிப்காட், ஓசூர்

மாவட்டம்: கிருஷ்ணகிரி

மறைமாவட்டம்: தருமபுரி

மறைவட்டம்: ஓசூர்

நிலை: பங்குத்தளம்

கிளைப்பங்கு: புனித சூசையப்பர் ஆலயம், தர்கா -ஓசூர்

பங்குத்தந்தை அருட்பணி. S. மரிய ஜோசப்

உதவி பங்குத்தந்தை அருட்பணி. அன்பு ஸ்டாலின், MSFS

குடும்பங்கள்: 500+

அன்பியங்கள்: 23

வழிபாட்டு நேரங்கள்:

ஞாயிறு திருப்பலி காலை 06:00 மணி, காலை 08:00 மணி, காலை 11:30 மணி (ஆங்கிலம்), மாலை 06:00 மணி

வார நாட்களில் திருப்பலி : காலை 06:00 மணி

வெள்ளி, சனி திருப்பலி : மாலை 06:00 மணி

திருவிழா: மே மாதம் 01 ஆம் தேதி

வழித்தடம் : ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் சாலையில் தர்கா சந்திப்பில் வலதுபுறமாக சென்று, Titan company அடுத்த உள்ள ஆனந்த நகரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.

Map : https://maps.app.goo.gl/pNNwNtMKhE9hTgRe7

Church Street view: Our Lady Of Lourdes Church 

https://maps.app.goo.gl/MJF5h1Y7TGQTJvWa6

வரலாறு:

சிப்காட் பங்கு உருவான விதமும், இந்த பங்கு கண்ட சவால்களும் அதனையும் கடந்து, தேவ அன்னையின் பெயரால், எழுப்பப்பட்டுள்ள இந்த மாபெரும் ஆலயம், எங்கள் கண்களுக்கு ஏன் இந்த ஆலய பணியில் பங்கு கொண்ட ஒவ்வொருவருக்குமே வியப்பே! இந்த ஆலய வரலாற்றை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.

புனித சூசையப்பர் ஆலயம்: 

ஓசூர், தூய இருதய ஆண்டவர் ஆலயமானது தாய்ப்பங்காக இருந்த காலத்தில் அதாவது, 1980களில் அரசட்டி, குசுவாடி பகுதி மக்களின் வழிபாட்டிற்காக ஒரு இடம் வேண்டும் என்ற அவசியத்தால், அன்றைய பங்குத்தந்தை அருட்பணி. மரிய சூசை அடிகளரால் ஓசூர் தர்கா அருகில், ஒரு இடத்தை வாங்கி கூரை வேய்ந்த ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டது. இப்பகுதி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால், தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பர் பெயரிலே, அந்த கூரை வேய்ந்த சிற்றாலயம் இருந்தது. 

புதன்கிழமைகளில் திருப்பலியும், நவநாளும் நடை பெற்றது. மக்களும் இந்த ஆலயத்தைத் தேடி வந்து ஜெபித்தார்கள், பலன் பெற்றார்கள். சில காலத்திற்கு பிறகு கூரை வேய்ந்த ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டது. அதன் பின்பு ஓடுபோட்ட ஆலயமாய் உருவாகியது. அதன் தொடர்ச்சியாக அங்கு இப்பொழுது இருக்கின்ற ஆலயக் கட்டிடம் மட்டும் எழுப்பப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முதல் பங்குத்தந்தையாக அருட்தந்தை அருள்ராஜ் அவர்கள், 2000 ஆம் ஆண்டில் பொறுப்பேற்றார். எவ்வித இட வசதியும் இல்லாத அதாவது ஆலயம், பங்குத்தந்தை வீடு இல்லை, கல்லறைத் தோட்டம் இல்லை என்ற சூழ்நிலையில் இந்த பங்கு உருவானது. மக்களின் தேவையறிந்து ஒரு சிற்றாலயம் எழுப்புவோம் என்று எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டு, இந்த ஒரு நல்ல முயற்சியை தொடர முடியாத நிலையில் முதல் பங்குத்தந்தை பணிமாற்றம்பெற்று சென்றார்.

இரண்டாவது பங்குத்தந்தையாக அருட்தந்தை மத்தியாஸ் அவர்கள் 2001-ல் பொறுப்பேற்றார்கள். ஆலயம் எழுப்ப பல முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால் இறைச்சித்தம் வேறு விதமாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில், இடம் வாங்கித்தாருங்கள்! ஆலயம் கட்டித் தருகிறோம்..! என்ற தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் ஆண்டனி இருதயராஜ் அவர்களின் உறுதி மொழியால், பல இடங்கள் பார்த்து கடைசியில் எல்லாம் வல்ல இறைவனால், ஆலயத்திற்கான இடம் ஓசூர் SIPCOT (சிப்காட்டில்) உள்ள சின்னஎலசகிரி, பாலாஜி நகரில் இடம் வாங்கப்பட்டது. மொத்தமாக 3 ஏக்கர் நிலம் பங்கு மக்களாலேயே வாங்கப்பட்டு, ஒரு ஏக்கர் நிலம் ஆலயத்திற்கென்று பிரிக்கப்பட்டு, மீதம் 2 ஏக்கர் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு, அதனை பங்கு மக்களால் வாங்கப்பட்டு, மொத்த விலையும் ஈடுகட்டப்பட்டு, ஆலயம் கட்டவும் இடம் தயாரானது.

தூய லூர்து மாதா பெயரில் ஆலயம் கட்டப்படவேண்டும் என்று அப்போதே முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை மத்தியாஸ் அவர்கள் மாற்றப்பட்டார். மூன்றாவது பங்குத்தந்தையாக அருட்தந்தை P. லூர்துசாமி அவர்கள் 2007 ஆம் ஆண்டில் பொறுப்பெடுத்துக் கொண்டார்கள்.

புனித லூர்து மாதா ஆலயம்:

2007-ல் புதிய ஆலயம்கட்ட அன்றைய ஆயர் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டு, 

27.01.2007 அன்று மேதகு ஆயர் ஜோசப் அந்தோணி இருதயராஜ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த இடத்திலே இப்படித்தான், இவ்வளவு நீள அகலத்தில் தான் கீழே திருமண மண்டபம், மேலே ஆலயம், மூன்று மாபெரும் கோபுரங்கள் என்ற சிந்தனையோடு, பிரான்ஸ் தேசத்திலே உள்ள லூர்து மாதா ஆலயம் போலவே உருவாக்கபடவேண்டும் என்ற முடிவோடும், மன உறுதியோடும் கடவுளை நம்புவோம் கடவுள் நிச்சயமாய் வழி நடத்துவார் என்ற ஆழ்ந்த விசுவாசத்தோடு, பங்குத்தந்தை அருட்பணி. P. லூர்துசாமி அவர்கள் பங்கு மக்களை ஊக்கப்படுத்தி, ஒவ்வொரு படியாக கட்டிடத்தை உயர்த்தி, ஆலயத்திற்காக 8 வருடங்களாக உழைத்து பங்கு மக்களின் பேராதரவாலும் நன்கொடையாளர்களின் உதவியாலும் இன்று மாபெரும் ஆலயமாக உருவாக்கப்பட்டு, 31.05.2015 அன்று மேதகு ஆயர் லாரன்ஸ் பயஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

இவ்வாலயம், கடவுளின் விருப்பமிருந்தால், எதிர்காலத்திலே ஒரு திருத்தலமாக தருமபுரி மறைமாவட்டத்தில் விளங்கும் என்பதிலும் ஐயமில்லை. இப்பொழுதே அற்புதங்களும், அதிசயங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆலய உட்புறவேலைப்பாடுகள், சிலுவைப்பாதைகள், 12 அப்போஸ்தலர்கள், பீடஅமைப்பு, கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, கண்ணாடி வேலைப்பாடு என எல்லாமே அன்னையின் ஆசீரால்தான் உருவாகியிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தொடர்ந்து எல்லாம் வல்ல இறைவன் இவர்களை மென்மேலும் ஆசீர்வதித்து, பல்வேறு நிலைகளில் வளரச்செய்து, பாதுகாத்து வழிநடத்தி வருகின்றார்.

பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:

மரியாயின் சேனை

புனித வின்சென்ட் தே பவுல் சபை

தொழிலாளர் இயக்கம்

பாடகற்குழு

பீடச்சிறார்

மறைக்கல்வி

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:

1. Fr. Arulraj 

2. Fr. Mathiyas 

3. Fr. P. Lourd Samy

4. Fr. Arokiya James 

5. Fr. Adhiruban 

6. Fr. S. Maria Joseph

தகவல்கள்: 2015 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஆலய வரலாறு புத்தகம்.

புகைப்படங்கள்: திரு. ஏசுதாஸ் கிருஷ்ணகிரி