248 புனித அந்தோணியார் ஆலயம், கச்சத்தீவு

புனித அந்தோணியார் ஆலயம்

இடம் : கச்சத்தீவு

ஞாயிறு திருப்பலி : இல்லை

திருவிழா : ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய, இலங்கை இருநாட்டு மக்கள் கலந்துகொள்வார்கள்.

இன்று காலையில் சிறப்புத் திருப்பலியும், அந்தோணியார் தேர் பவனியும் நடைபெறுகிறது. இலங்கையிலிருந்து சிங்கள பக்தர்களும் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். சிங்கள மொழியில் முதன்முறையாக திருப்பலி நடத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு விழா நிறைவடையும்.

அமைவிடம் :

கச்சத்தீவு யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவாகும். இது இந்திய தீபகற்பத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ளது. 1974ம் ஆண்டு வரை இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த இத்தீவு கச்சத்தீவு ஒப்பந்தப்படி, தற்போது இலங்கைக்கு சொந்தமாக உள்ளது. இத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்(1.15 சதுர கிலோ மீட்டராகும்). இந்த தீவில் மனிதர்கள் யாரும் தற்போது வசிக்கவில்லை. புகழ்பெற்ற அந்தோணியார் ஆலயம் ஒன்று இங்கு உள்ளது.

கச்சத்தீவு வரலாறு :

கி.பி.1605ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் சேதுபதி அரச மரபு தோற்றுவிக்கப்பட்டது. சேதுபதி அரசர்கட்கு அளிக்கப்பட்ட நிலப் பகுதியில் குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு [1], நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகளும், 69 கடற்கரைக் கிராமங்களும் சேதுபதி அரசர்க்கு உரிமையாக்கப்பட்டிருந்தன. தளவாய் சேதுபதி காத்த தேவர் என்ற கூத்தன் சேதுபதி (1622–1635) காலத்துச் செப்பேடு ஒன்றில் தலைமன்னார் வரை சேதுபதி அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆங்கிலேயரின் காலனி ஆட்சிக்கு உட்பட்டப் பிறகு, 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீன்தாரி முறை கொண்டுவரப்பட்டது. அப்போது சேதுபதி அரச வாரிசு (1795இல் முத்துராமலிங்க சேதுபதி மன்னர் பல்லாண்டுகள் சிறையில் இருந்த நிலையிலேயே மரணமுற்றதால்) இல்லாத நிலையில், அவருடைய தமக்கையான இராணி மங்களேசுவரி நாச்சியாரைக் கிழக்கிந்திய கம்பெனியார் ஜமீன்தாரிணியாக்கினர். அவர் 1803 முதல் 1812 வரை நிர்வாகம் செய்தார். கச்சத்தீவு இராமநாதபுரம் ஜமீனுக்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடணத்தில் கூறியிருந்ததை இலங்கை அமைச்சரவைச் செயலராக இருந்த பி.பி. பியரீஸ் என்பவர் (1936-40ஆம் ஆண்டுகளில் நில அளவைத் துறையில் இருந்தவர்) கூறி பதிவு செய்துள்ளார்.

அந்தோணியார் ஆலயம் :

கச்சத்தீவில் மீனவர்களின் புண்ணிய புரவலராக கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட புகழ்பெற்ற புனித அந்தோணியார் தேவாலயம் காணப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், தொண்டி அருகே உள்ள நம்புதாளை என்ற ஊரை சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி மற்றும் ராமேசுவரம் ஓலைக்குடாவைச் அந்தோணிப்பிள்ளை பட்டங்கட்டி என்பவர்கள் ஆலயத்தை 1913 -ம் ஆண்டு கட்டினர். இலங்கையில் இனக் கலவரம் தொடங்குவதற்கு முன் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அந்தோனியார் ஆலய விழா நடைபெற்று வந்தது. இதற்கு தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து அதிகளவில் பக்தர்கள் சென்று வந்தனர். இரு நாட்டு மக்களும் சங்கமிக்கும் அமைதி தீவாக விளங்கிய கச்சத்தீவு 1975 ஒப்பந்தத்திற்கு பின் இலங்கைக்கு சொந்தமானது. ஒப்பந்தத்தின்படி கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி திரும்பவும், கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய விழாவில் எப்போதும் போல் கலந்து கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது.மீன் பிடிக்க அனுமதி இல்லை கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதற்கு பின் கச்சத்தீவு விழாவிற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசு செய்தது. ஆயினும் திருப்பலி சடங்குகளை தங்கச்சிமடம் ரோமன் கத்தோலிக்க பங்கு தந்தையர்களே செய்து வந்தனர். இந்நிலையில் 1983 இல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி கச்சத்தீவு விழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த 2002 இல் மீண்டும் கச்சத்தீவு விழா யாழ்ப்பாணம் மறைமாவட்ட பங்கு தந்தையர்களால் நடத்தப்பட்டது. 20 வருடங்கள் கழித்து நடந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்களும் கலந்து கொண்டு திரும்பினர். தொடர்ந்து வருடந்தோறும் கச்சத்தீவு விழாவிற்கு ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் பெருமளவில் சென்று திருவிழாவை சிறப்பித்து வருகின்றனர்.