502 புனித லூர்து அன்னை ஆலயம், பெருங்குறிச்சி


புனித லூர்து அன்னை ஆலயம்

இடம் : பெருங்குறிச்சி, சித்தாளந்தூர் அஞ்சல், 637201

மாவட்டம் : நாமக்கல்
மறைமாவட்டம் : சேலம்
மறைவட்டம் : திருச்செங்கோடு

நிலை : பங்குத்தளம்

கிளைப்பங்குகள் :
1. புனித சகாய மாதா ஆலயம், புளியம்பட்டி
2. புனித சூசையப்பர் ஆலயம், சித்தாளந்தூர்
3. புனித திருமுழுக்கு யோவான் ஆலயம், மணியனூர்

பங்குத்தந்தை : அருட்தந்தை. இராபர்ட் தேவதாஸ், C.PP.S

குடும்பங்கள் : 216
அன்பியங்கள் : 6

திருப்பலி நேரங்கள் :

ஞாயிறு : காலை 07.00 மணிக்கு திருப்பலி

வாரநாட்கள் : மாலை 06.30 மணிக்கு திருப்பலி

மாதத்தின் முதல் செவ்வாய் : மாலை 07.00 மணிக்கு புனித அந்தோணியார் நவநாள் திருப்பலி, சிறுதேர்பவனி.

மாதத்தின் முதல் வெள்ளி : மாலை 06.30 மணிக்கு திருப்பலி, நற்கருணை ஆசீர்.

திருவிழா : மே மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை.

மண்ணின் மைந்தர்கள் :
1. அருட்பணி. பீட்டர், SDB
2. அருட்பணி. மைக்கேல்
3. அருட்பணி. அருள்

மற்றும் நான்கு அருட்சகோதரிகள்.

வழித்தடம் : திருச்செங்கோட்டிலிருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் 10கி.மீ தொலைவில் சித்தாளந்தூர் உள்ளது. அங்கிருந்து ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் 6கி.மீ தொலைவில் பெருங்குறிச்சி உள்ளது.

வரலாறு :

கி.பி 1930 க்கு முன்பே பெருங்குறிச்சியிலிருந்து 6 குடும்பங்கள் நாமக்கல் சென்று தங்கி மறைக்கல்வி பயின்று வந்தனர். சேலம் மறைமாவட்டம் உதயமானது முதல் ஆண்டுதோறும் பலர் திருமுழுக்குப் பெற்று திருமறையில் இணைந்தனர்.

1936 ஆண்டிற்குள் ஊர் முழுவதும் அருட்தந்தையர்கள் உர்மண்ட், நலே, மத்தேயு தெக்கடம் ஆகியோரின் முயற்சியால் கிறிஸ்தவ மறையை ஏற்றனர். பெருங்குறிச்சியில் முதன்முதலில் அருட்தந்தை. நலே அவர்கள், அருட்தந்தை. உர்மாண்ட் அவர்களின் துணையுடன் ஆலயத்தைக் கட்டினார். பட்லூர், இறையமங்களம், மௌசி, சோழசிராமணி, வடுகபாளையம், கொத்தமங்களம் ஆகிய காவேரிக்கரையில் அமைந்துள்ள ஊர்களில் புதிதாக மனம்மாறிய கிறிஸ்தவர்களை அருட்தந்தை. மத்தேயு தெக்கடம் அவர்கள் வழிநடத்தி வந்தார்கள்.

1942 ஆம் ஆண்டு முதல் பெருங்குறிச்சியில் குருக்கள் தங்கி இறைப்பணியாற்றினர். 1946 ஆம் ஆண்டில் நாமக்கல் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு பெருங்குறிச்சி தூய லூர்து அன்னை ஆலயம் தனிப் பங்காக உயர்த்தப் பட்டது.

அருட்தந்தை. ஐசக் அவர்கள் பணிக்காலத்தில் கன்னியர் இல்லம் கட்டப்பட்டது. இவருக்குப் பின்னர் இப்பகுதியில் பஞ்சம் நிலவி வந்த போது அருட்தந்தை. ஐசக் (இளையவர்) அவர்கள் மக்களுக்கு மூன்று மாதங்கள் உணவளித்து பராமரித்து வந்தார். இதனால் அருட்தந்தையை இங்குள்ள மக்கள் கஞ்சித்தொட்டி சாமியார் என்று அன்புடன் அழைத்தனர்.

அருட்தந்தை. T. M. சவரிமுத்து அவர்களின் அயராத முயற்சியினால் ஆரம்பப்பள்ளி, நடுநிலைப்பள்ளியாக உயர்வு பெற்றது.

அருட்தந்தை. அருள் சுந்தரம் பணிக்காலத்தில் பங்குத்தந்தை இல்லம், மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டு 01.04.1982 அன்று திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 50 ஆண்டுகாலமாக பல கிளைப் பங்குகளையும் தன்னகத்தே கொண்டு அவற்றில் ஆலயங்கள் இல்லாது இருந்த நிலையில், பங்குத்தந்தை அருட்தந்தை. மரியோ ரொடிசினி அவர்களின் முயற்சியால் 9 புதிய ஆலயங்கள் கட்டப்பட்டன. இப்பகுதியில் வாழும் மக்களின் விசுவாசம் தழைத்தோங்க இவ்வாலயங்கள் துணை நிற்கின்றன.

1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளி பெருங்குறிச்சியிலும், தூய சவேரியார் துவக்கப்பள்ளி மணியனூரிலும் சிறப்பாக கல்விப் பணியாற்றி வருகின்றன. தூய ஞானப்பிரகாசியார் சபை அருட்சகோதரிகள் கல்விப்பணியிலும், பங்கிலும், இறைப்பணியிலும், சமூகப்பணியிலும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.

18.05.2002 அன்று ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புனிதப்படுத்தப் பட்டது.

பெருங்குறிச்சி பங்கின் கிளைப்பங்காக செயல்பட்டு வந்த சோழசிராமணி ஆலயமானது இறையமங்கலம், மொளசி, ஜேடர்பாளையம், கொத்தமங்கலம், வடுகப்பாளையம், ஜமீன் இளம்பள்ளி ஆகிய 6 கிளைப்பங்குகளைக் கொண்டு 08.06.2005 அன்று மேதகு. சேலம் ஆயர் அவர்களால் தனிப்பங்காக உயர்த்தப்பட்டது.

அருட்தந்தை. பிரசன்னா அவர்களின் பணிக்காலத்தில் இங்கு அழகிய புனித லூர்து அன்னை கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

இன்றைய பங்குத்தந்தை அருட்தந்தை. இராபர்ட் தேவதாஸ், C.PP.S அவர்களின் முயற்சியால் இங்கு புனித அந்தோணியார் பக்தி முயற்சியால் எண்ணற்ற அதிசயங்கள் நடந்து வருவதால், புனித அந்தோணியார் கெபி கட்டப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது. மேலும், பங்குத்தந்தையின் முயற்சியால் தற்போது ஆலய பீடப்பகுதி புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

பங்கில் உள்ள பக்தசபைகள் :
வின்சென்ட் தே பவுல் சபை,
பாடகற்குழு.

இல்லம் : அலோய்சியஸ் கொன்சாகா கன்னியர் இல்லம்.

பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள்:

1. அருட்தந்தை. ஐசக் (1946-1952)
2. அருட்தந்தை. T. M. சவரிமுத்து (1952-1956)
3. அருட்தந்தை. அருள் (1956-1960)
4. அருட்தந்தை. செபாஸ்டியன் (1960-1968)
5. அருட்தந்தை. செல்வரத்தினம் (1968-1973)
6. அருட்தந்தை. அருள்சுந்தரம் (1973-1976)
7. அருட்தந்தை. புஷ்பநாதன் (1976-1981)
8. அருட்தந்தை. C. S. அந்தோணிசாமி (1981-1984)
9. அருட்தந்தை. இருதயராஜ் (1984-1989)
10. அருட்தந்தை. லூர்துசாமி (1989-1991)
11. அருட்தந்தை. ஞானப்பிரகாசம் (1991-1994)
12. அருட்தந்தை. பயஸ் (1994-1995)
13. அருட்தந்தை. மரியோ ரொடிசினி (1995-2004)
14. அருட்தந்தை. M. S. மார்ட்டின் (2004-2006)
15. அருட்தந்தை. கிறிஸ்துராஜ் (2006-2008)
16. அருட்தந்தை. C. மைக்கேல் (2008-2010)
17. அருட்தந்தை. R. பிரான்சிஸ் (2010-2013)
18. அருட்தந்தை. ஸ்டீபன் சொரூபன் (2013-2014)
19. அருட்பணி. K. பிரசன்னா (2014-2017)
20. அருட்தந்தை. இராபர்ட் தேவதாஸ், C.PP.S (2017 முதல் தற்போது வரை)

தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் : அருட்தந்தை. இராபர்ட் தேவதாஸ், C.PP.S அவர்கள்.