புனித சூசையப்பர் ஆலயம்
இடம்: அனுப்பானடி, மதுரை, 625009
மாவட்டம்: மதுரை
மறைமாவட்டம்: மதுரை உயர் மறைமாவட்டம்
மறைவட்டம்: மதுரை தெற்கு
நிலை: கிளைப்பங்கு
பங்கு: வியாகுல அன்னை திருத்தலப் பேராலயம், கீழவாசல் -மதுரை
குடும்பங்கள்: 100
அன்பியங்கள்: 2 (சூசையப்பர், மாதா)
அதிபர் & பங்குதந்தை அருட்பணி. ஹென்றி ஜெரோம், SJ
உதவி பங்குத்தந்தையர்
அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ
அருட்பணி. பெனிட்டோ, SJ
ஞாயிறு திருப்பலி காலை 06:30 மணி
திருவிழா: ஏப்ரல் 22-ம் தேதி முதல் மே 01-ம் தேதி வரை.
வழித்தடம்: திருத்தல பேராலயத்திலிருந்து கீழவாசல் வழியாக, தெப்பக்குளம் அனுப்பானடியில் கிறிஸ்தவர் தெருவுக்குள் ஆலயம் அமைந்துள்ளது.
Church Map location: St. Joseph's Church
https://maps.app.goo.gl/kPHpaHyax8NtvSHb8
வரலாறு:
மக்களை விசுவாசத்தில் வளரச் செய்வதோடு, அவர்களை அருள்வாழ்வில் ஆழப்படச் செய்வது ஆலயம். வியாகுல அன்னை திருத்தலப் பேராலயமும் இறைமக்களின் உள்ளங்களில் இறை ஆற்றலை, இறை வல்லமையை, இறைத் தியாகத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது. அந்த இறைநிலத்தில் விளைந்த வித்துக்களில் அனுப்பானடி என்ற கிளைக் கிராமும் ஒன்று. அக்கிராமம் மிக அழகான ஆலயமாக இன்று திகழ்கிறது.
இன்று இருக்கும் புனித சூசையப்பர் ஆலயமானது ஏறக்குறைய 1976ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்பாகவே அவ்விடத்தில் ஓட்டுக்கட்டடமாக புனித அந்தோனியார் ஆலயம் இருந்துள்ளது. 1976-ம் ஆண்டு அருட்தந்தை அடைக்கலம் சே.ச அவர்களின் முழு முயற்சியால், அப்போதிருந்த கோயில்பிள்ளை திரு. விசுவாசம் அவர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாலயம் கட்டப்பட்டது.
அப்போது 120 குடும்பங்கள், கிறிஸ்தவர்களாக வாழ்ந்துள்ளனர். எளிய கூலி வேலை பார்க்கும் மக்களாக இருந்தபோதும் விசுவாசத்தில் ஆழ்ந்திருந்தனர். தொடக்கத்தில் அந்தோனியார் ஆலயமாக இருந்தது. எப்படி சூசையப்பர் ஆலயமாக மாறியது? அருகில் ஐராவதநல்லூர் பங்கு ஆலயத்திற்கு அந்தோணியார் சொரூபம் தேவைப்பட இங்கிருந்த அந்தோணியார் சொரூபம், பெரிய மணி, தேர்ச்சப்பரம் போன்றவை ஐராவதநல்லூர் கோயிலுக்கு வழங்கப்பட்டது. அதனால் இவ்வாலயமானது புனித சூசையப்பர் ஆலயமாக உருவெடுத்தது.
தற்போது கல்வி அறிவிலும், பல்வேறு பொருளாதாரச் சூழலிலும் இக்கிளைக்கிராமம் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. 2005ஆம் ஆண்டு அமலவைக் கன்னியரின் முதல் முயற்சியால் அப்போதைய பங்குத்தந்தை மரிவளனின் தூண்டுதலால் மாலைநேரக் கல்வி சிறுவர், சிறுமியருக்கு தொடங்கப்பட்டு இன்று வரை சீரூம், சிறப்புமாய் நடைபெற்று வருகிறது.
ஆலயத்திற்கு அருகில் ஒரு சமுதாயக் கூடம். தொகுதி மேம்பாட்டு நிதியில் 2005 -2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பல்வேறு சுப நிகழ்வுகள் இச்சமுதாயக் கூடத்தில் நடைபெற்று வருகிறது.
2010-ம் ஆண்டு ஆலயத்தைச் சுற்றி சுற்றுச் சுவர் கட்டப்பட்டு அருட்தந்தை அருள், SJ அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 2017இல் அனுப்பானடி மக்களின் கூட்டு முயற்சியால் ஆலயத்தின் பீடப் பகுதியை இணைத்து ஒரு சிறிய அறையும், ஆலயத் தரையும் புதுப்பிக்கப்பட்டது. 21.04.2019-இல் மாதா கெபி கட்டப்பட்டது.
இப்பகுதிவாழ் இறை மக்கள் பக்தியிலும், விசுவாசத்திலும் சிறந்து விளங்குபவர்கள். தங்களது விசுவாசத்தை ஆழப்படுத்திக் கொள்ள ஓரியூர் தூய அருளானந்தர் திருத்தலம், புளியம்பட்டி தூய அந்தோணியார் திருத்தலம் மற்றும் திருத்தலங்களுக்கு ஒவ்வொரு வருடமும் திருப்பயணம் செல்கின்றனர். அமலவை சகோதரிகளின் உதவியில், தாங்களே தலைமைதாங்கி கோயிலையும், கோயில் நிர்வாகத்தையும் சிறப்பாக வழிநடத்தி, இறைநம்பிக்கையில் வளர்ந்து வருகின்றார்கள். இந்தப் பகுதியில் சூசையப்பர், மாதா என இரு அன்பியங்கள் செயல்பட்டு வருகிறது. இன்றும் ஆலயத்தைச் சுற்றி வாழும் இறைமக்கள் இறை உணர்விலும், இறை அன்பிலும், சூழப்பட்டவர்களாகவும் ஆலயத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.
தகவல்கள்: வியாகுல அன்னை திருத்தலப் பேராலய உதவி பங்குதந்தை அருட்பணி. ஜோ லிவிங்ஸ்டன், SJ அவர்கள்.
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: திருத்தலப் பேராலய பங்கு உறுப்பினர் திரு. பெனிட்டோ ராஜ் அவர்கள்.



